ஆதியாகமம் 7:1-24

  • பேழைக்குள் போகுதல் (1-10)

  • பூமியெங்கும் வெள்ளம் (11-24)

7  அதன்பின் யெகோவா நோவாவிடம், “இந்தத் தலைமுறையிலேயே நீதான் என் பார்வையில் நீதிமானாக இருக்கிறாய். அதனால், நீ உன் குடும்பத்தோடு பேழைக்குள் போ.  சுத்தமான மிருகங்களில்,* ஒவ்வொரு இனத்திலும்* ஆண், பெண் என ஏழு மிருகங்களை* கொண்டுபோ. அசுத்தமான மிருகங்களில், ஒவ்வொரு இனத்திலும் ஆண், பெண் என இரண்டு மிருகங்களை மட்டும் கொண்டுபோ.  பறக்கும் உயிரினங்களில் ஆண், பெண் என ஏழு உயிரினங்களை* கொண்டுபோ. அந்த எல்லா இனங்களும் பூமியிலிருந்து அடியோடு அழிந்துபோகாதபடி அவற்றைப் பேழைக்குள் கொண்டுபோ.  இன்னும் ஏழே நாட்களில், இந்தப் பூமியில் நாற்பது நாட்களுக்கு இரவும் பகலும் மழை பெய்ய வைப்பேன். நான் படைத்த எல்லா உயிர்களையும் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிப்பேன்” என்று சொன்னார்.  யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நோவா செய்தார்.  நோவாவுக்கு 600 வயதானபோது பூமியில் பெரிய வெள்ளம் வந்தது.  அது வருவதற்கு முன்பு நோவாவும் அவருடைய மனைவியும் மகன்களும் மருமகள்களும் பேழைக்குள் போனார்கள்.  நோவாவுக்குக் கடவுள் கட்டளை கொடுத்தபடியே, சுத்தமான மிருகங்கள், அசுத்தமான மிருகங்கள், பறக்கும் உயிரினங்கள், ஊரும் பிராணிகள் என எல்லாமே  ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாய்ப் பேழைக்குள் நோவாவிடம் போயின. 10  ஏழு நாட்கள் கழித்து பூமியில் பெரிய வெள்ளம் வந்தது. 11  நோவாவுக்கு 600 வயதானபோது, அந்த வருஷத்தின் இரண்டாம் மாதம், 17-ஆம் நாளில், வானத்திலிருந்த மாபெரும் அணைக்கட்டுகள் உடைந்து* அதன் மதகுகள் திறந்தன. 12  நாற்பது நாட்கள் இரவும் பகலும் விடாமல் மழை கொட்டியது. 13  அதே நாளில், நோவாவும் அவருடைய மனைவியும் அவருடைய மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியவர்களும், அவர்களுடைய மனைவிகள் மூன்று பேரும் பேழைக்குள் போனார்கள். 14  எல்லா காட்டு மிருகங்களையும், எல்லா வீட்டு விலங்குகளையும், ஊருகிற எல்லா பிராணிகளையும், எல்லா பறவைகளையும், இறக்கையுள்ள எல்லா உயிரினங்களையும் அந்தந்த இனத்தின்படியே பேழைக்குள் அவர்கள் கொண்டுபோனார்கள். 15  எல்லா உயிரினங்களுமே* ஜோடி ஜோடியாக நோவாவின் பேழைக்குள் போயின. 16  நோவாவுக்குக் கடவுள் கொடுத்த கட்டளைப்படியே, எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாகப் பேழைக்குள் போயின. அதன் பின்பு பேழையின் கதவை யெகோவா மூடினார். 17  பூமியில் நாற்பது நாட்களுக்கு விடாமல் மழை கொட்டியது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்மட்டம் உயர்ந்துகொண்டே போனது. அதனால் பேழை மேலே எழும்பி மிதக்க ஆரம்பித்தது. 18  தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பூமி வெள்ளக்காடானது, ஆனால் பேழை தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தது. 19  தண்ணீர் பெருகிக்கொண்டே போனதால் பூமியில் இருந்த உயரமான மலைகளெல்லாம் மூழ்கிவிட்டன. 20  மலைகளுக்கு மேலே 22 அடி* உயரத்துக்குத் தண்ணீர் பெருகியது. 21  அதனால், பறக்கும் உயிரினங்கள், வீட்டு விலங்குகள், காட்டு மிருகங்கள், கூட்டங்கூட்டமாகப் போகும் சிறு பிராணிகள் என பூமியிலிருந்த எல்லா உயிரினங்களும் அழிந்தன. அதோடு, எல்லா மனிதர்களும் இறந்துபோனார்கள். 22  நிலத்தில் வாழ்ந்த சுவாசமுள்ள எல்லாமே அழிந்தன. 23  மனிதர்கள், மிருகங்கள், ஊரும் பிராணிகள், பறக்கும் உயிரினங்கள் என பூமியிலிருந்த எல்லா உயிர்களையும் கடவுள் அழித்தார். அவற்றைப் பூமியிலிருந்து அடியோடு அழித்தார். நோவாவின் குடும்பமும் அவருடன் பேழையிலிருந்த உயிரினங்களும் மட்டும்தான் உயிர்பிழைக்க முடிந்தது. 24  பூமி 150 நாட்களுக்குத் தண்ணீரில் மூழ்கியிருந்தது.

அடிக்குறிப்புகள்

ஒருவேளை, பலி கொடுப்பதற்கு ஏற்ற மிருகங்களைக் குறிக்கலாம்.
அதாவது, “வகையிலும்.”
அல்லது, “ஜோடிகளை.”
அல்லது, “ஜோடிகளை.”
நே.மொ., “மகா ஆழத்தின் ஊற்றுகளெல்லாம் பிளந்து.”
நே.மொ., “உயிர்சக்தியுள்ள எல்லாமே.”
நே.மொ., “15 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.