உபாகமம் 17:1-20

  • பலி செலுத்தப்படுகிற மிருகங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது (1)

  • மற்ற தெய்வங்களைக் கும்பிடுகிறவர்களுக்கு எதிரான நடவடிக்கை (2-7)

  • சிக்கலான வழக்குகள் சம்பந்தமாகச் செய்ய வேண்டியவை (8-13)

  • ஒரு ராஜாவை ஏற்படுத்தும்போது செய்ய வேண்டியவை (14-20)

    • திருச்சட்டத்தின் நகலை ராஜா எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் (18)

17  பின்பு அவர், “ஊனமோ வேறெந்தக் குறையோ உள்ள ஒரு மாட்டை அல்லது ஆட்டை உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பலி செலுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.+  உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில், ஒரு ஆணோ பெண்ணோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்து, அவருடைய ஒப்பந்தத்தை மீறி,+  என் கட்டளைக்கு+ எதிராக மற்ற தெய்வங்களையோ சூரியனையோ சந்திரனையோ வானத்துப் படைகளையோ ஒருவேளை கும்பிடலாம்.+  அதைப் பற்றி உங்களிடம் யாராவது சொன்னால் அல்லது உங்களுக்கே தெரியவந்தால், அதை நன்றாக விசாரிக்க வேண்டும். இந்த அருவருப்பான காரியம் இஸ்ரவேலில் நடந்தது உண்மை என்பது தெரியவந்தால்,+  இந்தக் குற்றத்தைச் செய்த ஆணை அல்லது பெண்ணை நகரவாசலுக்குக் கொண்டுவர வேண்டும், பின்பு கல்லெறிந்து கொல்ல வேண்டும்.+  இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை வைத்துதான்+ மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஒரேவொரு சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து மரண தண்டனை கொடுக்கக் கூடாது.+  அவனை அல்லது அவளைக் கொன்றுபோட அந்தச் சாட்சிகள்தான் முதலில் கல்லெறிய வேண்டும். அதற்குப் பின்பு மற்றவர்கள் கல்லெறிய வேண்டும். இப்படி, தீமையை உங்களிடமிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+  உங்கள் நகரங்கள் ஒன்றில் உங்களால் தீர்க்க முடியாத சிக்கலான வழக்குகள் இருந்தால், அதாவது கொலைக்குற்றம்,+ உரிமைப் பிரச்சினை, வன்முறை, அல்லது வேறெதாவது சண்டை சச்சரவு சம்பந்தமான வழக்குகள் இருந்தால், உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்குப் போக வேண்டும்.+  அந்தச் சமயத்தில் பொறுப்பில் இருக்கிற லேவியர்களான குருமார்களிடமும் நியாயாதிபதிகளிடமும்+ போய் வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் தீர்ப்பு கொடுப்பார்கள்.+ 10  யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்திலிருந்து அவர்கள் கொடுக்கிற தீர்ப்பின்படி நீங்கள் செய்ய வேண்டும். அவர்கள் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் செய்யக் கவனமாக இருக்க வேண்டும். 11  அவர்கள் காட்டுகிற சட்டத்தின்படியும் கொடுக்கிற தீர்ப்பின்படியும் நீங்கள் செய்ய வேண்டும்.+ அவர்கள் சொல்கிற தீர்ப்புக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும்.+ 12  உங்களுடைய நியாயாதிபதி சொல்வதையோ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்கிற குருவானவர் சொல்வதையோ கேட்காமல் அகங்காரமாக* நடக்கிறவன் கொல்லப்பட வேண்டும்.+ இப்படி, நீங்கள் இஸ்ரவேலிலிருந்து தீமையை ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 13  அப்போதுதான் எல்லா ஜனங்களும் அதைக் கேள்விப்பட்டு பயப்படுவார்கள், அதன்பின் யாரும் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.+ 14  உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்கு நீங்கள் போய் அதில் குடியிருக்கும்போது, ‘சுற்றியுள்ள தேசத்தாரைப் போல நாமும் ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று நீங்கள் சொன்னால்,+ 15  உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற ராஜாவை மட்டும்தான் நீங்கள் நியமிக்க வேண்டும்.+ உங்கள் சகோதரர்களில் ஒருவரைத்தான் ராஜாவாக்க வேண்டும். வேறு தேசத்தைச் சேர்ந்தவனை ராஜாவாக்கக் கூடாது. 16  ராஜா தனக்காக ஏராளமான குதிரைகளை வைத்துக்கொள்ளக் கூடாது,+ அல்லது இன்னும் அதிக குதிரைகளை வாங்குவதற்காக ஜனங்களை எகிப்துக்கு அனுப்பக் கூடாது.+ ஏனென்றால், ‘இனி ஒருபோதும் நீங்கள் அந்தப் பக்கம் போகக் கூடாது’ என்று யெகோவா சொல்லியிருக்கிறார். 17  ராஜாவின் இதயம் கடவுளைவிட்டு விலகாமல் இருக்க வேண்டுமானால் அவர் நிறைய மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது.+ வெள்ளியையும் தங்கத்தையும் ஏராளமாகக் குவித்து வைத்துக்கொள்ளக் கூடாது.+ 18  அவர் ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, லேவியர்களான குருமார்களிடம் உள்ள திருச்சட்ட புத்தகத்தை*+ பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். 19  அதை அவர் எப்போதும் வைத்திருக்க வேண்டும். தன்னுடைய வாழ்நாளெல்லாம் அதை வாசிக்க வேண்டும்.+ அப்போதுதான், தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார், திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பார்.+ 20  அதோடு, தன் சகோதரர்களைவிட தன்னைப் பெரியவனாகக் காட்டிக்கொண்டு தலைக்கனத்தோடு* நடக்க மாட்டார். கடவுளுடைய கட்டளைகளை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பார். அப்போது, அவரும் அவருடைய மகன்களும் இஸ்ரவேலில் ரொம்பக் காலத்துக்கு ஆட்சி செய்வார்கள்” என்றார்.

அடிக்குறிப்புகள்

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
வே.வா., “சுருளை.”
வே.வா., “உள்ளத்தில் பெருமையோடு.”