உபாகமம் 34:1-12

  • கானான் தேசத்தை யெகோவா மோசேக்குக் காட்டுகிறார் (1-4)

  • மோசே இறந்துபோகிறார் (5-12)

34  பின்பு, மோசே மோவாபின் பாலைநிலத்திலிருந்து, எரிகோவைப் பார்த்தபடி+ இருக்கிற நேபோ மலைக்கு,+ அதாவது பிஸ்காவின் உச்சிக்கு,+ ஏறிப்போனார். அப்போது, யெகோவா அவருக்கு முழு தேசத்தையும் காட்டினார். கீலேயாத்திலிருந்து தாண்+ வரையும்,  நப்தலி முழுவதையும், எப்பிராயீம் மற்றும் மனாசே என்பவர்களுடைய தேசத்தையும், மேற்குக் கடல்* வரையில் இருக்கிற யூதா தேசம் முழுவதையும்,+  நெகேபையும்,+ யோர்தான் பிரதேசத்தையும்,+ அதாவது பேரீச்ச மரங்கள் நிறைந்த எரிகோ நகரத்தின் சமவெளியிலிருந்து சோவார் வரையில்+ இருக்கிற முழு பகுதியையும், காட்டினார்.  யெகோவா அவரிடம், “‘உன் சந்ததிக்குக் கொடுப்பேன்’+ என்று சொல்லி, ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் நான் வாக்குக் கொடுத்த தேசம் இதுதான். இதை உன் கண்களாலேயே பார்க்கும் பாக்கியத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன், ஆனால் நீ அங்கு போக மாட்டாய்”+ என்று சொன்னார்.  அதன்பின் யெகோவாவின் ஊழியராகிய மோசே, மோவாப் தேசத்திலுள்ள அந்த இடத்தில் யெகோவா சொன்னது போலவே இறந்துபோனார்.+  மோவாப் தேசத்தில் பெத்-பேயோருக்கு எதிரில் இருக்கிற பள்ளத்தாக்கில் கடவுள் அவரை அடக்கம் செய்தார். அவருடைய பிரேதக்குழி இன்றுவரை யாருக்கும் தெரியாது.+  சாகும்போது மோசேக்கு 120 வயது.+ அந்த வயதிலும் அவருடைய பார்வை மங்கவோ அவருடைய பலம் குறையவோ இல்லை.  இஸ்ரவேலர்கள் மோசேக்காக மோவாப் பாலைநிலத்தில் 30 நாட்கள் அழுதார்கள்.+ அதன்பின், அவர்கள் மோசேக்காகத் துக்கம் அனுசரித்த நாட்கள் முடிவுக்கு வந்தன.  மோசே தன் கைகளை நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் வைத்து அவரை நியமித்திருந்ததால், யோசுவா கடவுளுடைய சக்தியாலும் ஞானத்தாலும் நிறைந்திருந்தார்.+ இஸ்ரவேலர்கள் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தார்கள். மோசே மூலம் யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளின்படியே செய்தார்கள்.+ 10  யெகோவா மிக நன்றாக* தெரிந்து வைத்திருந்த+ மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருந்ததே இல்லை.+ 11  எகிப்துக்குப் போய், பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய முழு தேசத்துக்கும் எதிராக யெகோவா செய்யச் சொன்ன எல்லா அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ 12  இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாக கைபலத்தையும் பிரமிக்க வைக்கிற வல்லமையையும் காட்டியவர் அவர்தான்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “பெருங்கடல்; மத்தியதரைக் கடல்.”
வே.வா., “நேருக்கு நேர்.”