எஸ்தர் 3:1-15

  • ஆமானை ராஜா கௌரவிக்கிறார் (1-4)

  • யூதர்களை ஒழித்துக்கட்ட ஆமானின் சதித்திட்டம் (5-15)

3  இதற்குப் பின்பு அகாஸ்வேரு ராஜா, ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமானைக்+ கௌரவித்து, எல்லா அதிகாரிகளையும்விட உயர்ந்த பதவியில் வைத்தார்.+  அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் எல்லாரும், அவருடைய கட்டளைப்படி ஆமானுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். ஆனால், மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை.  அதனால், அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் மொர்தெகாயைப் பார்த்து, “ராஜாவுடைய கட்டளையை ஏன் மீறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.  இப்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் மொர்தெகாய் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் ஆமானிடம், “மொர்தெகாய் செய்வது சரிதானா என்று நீங்களே பாருங்கள்” என்றார்கள்.+ தான் ஒரு யூதன்+ என்று மொர்தெகாய் அவர்களிடம் சொல்லியிருந்தார்.  மொர்தெகாய் தனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழாததை ஆமான் கவனித்தபோது அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+  அதனால், மொர்தெகாயை ஒழித்துக்கட்ட நினைத்தான். ஆனாலும், மொர்தெகாயின் இனத்தாரைப் பற்றி ராஜாவின் ஊழியர்கள் தன்னிடம் சொல்லியிருந்ததால் அவர்களையும் சேர்த்து ஒழித்தால்தான் தனக்குக் கௌரவம் என்று நினைத்தான். அதனால், அகாஸ்வேருவின் சாம்ராஜ்யம் முழுவதும் வாழ்ந்த மொர்தெகாயின் இனத்தாரான யூதர்கள் எல்லாரையும் தீர்த்துக்கட்ட வழிதேடினான்.  அது அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தின்+ முதலாம் மாதமான நிசான்* மாதம். யூதர்களை எந்த மாதத்தில் எந்த நாளில் தீர்த்துக்கட்டலாம் என்று தீர்மானிப்பதற்காக ஆமானுக்கு முன்னால் ‘பூர்’+ என்ற குலுக்கல் போடப்பட்டது. 12-ஆம் மாதமான ஆதார்* மாதத்திற்குக்+ குலுக்கல் விழுந்தது.  பின்பு அகாஸ்வேரு ராஜாவிடம் ஆமான், “உங்களுடைய சாம்ராஜ்யத்தில் உள்ள+ எல்லா மாகாணங்களிலும் ஒரு இனத்தார் பரவியிருக்கிறார்கள்.+ அவர்களுடைய சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதே இல்லை. அவர்களை இப்படியே விட்டுவைப்பது ராஜாவுக்கு நல்லதல்ல.  ராஜாவுக்குச் சரியாகப் பட்டால், அவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று சாம்ராஜ்யமெங்கும் கட்டளை அனுப்புங்கள். அரண்மனை கஜானாவுக்கு நான் 10,000 வெள்ளி தாலந்தை* அதிகாரிகளிடம் கொடுக்கிறேன்”* என்று சொன்னான். 10  உடனே ராஜா, தன்னுடைய முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமான ஆமானிடம் கொடுத்தார்.+ 11  பின்பு அவனிடம், “அந்த ஜனங்களையும் வெள்ளியையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். உன் இஷ்டப்படி செய்” என்று சொன்னார். 12  முதலாம் மாதம் 13-ஆம் நாளில் ராஜாவுடைய செயலாளர்கள்+ வரவழைக்கப்பட்டார்கள். ஆமான் ஆணையிட்ட எல்லாவற்றையும் அதிபதிகளுக்கும் மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் எல்லா இனத்தாரின் தலைவர்களுக்கும், அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அவர்கள் எழுதினார்கள்.+ அவை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு, அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்பட்டன.+ 13  ராஜாவின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள்* மூலமாக அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. “சிறியவர்கள், பெரியவர்கள், பிள்ளைகள், பெண்கள் என்று பார்க்காமல் யூதர்கள் எல்லாரையும் ஒரே நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார் மாதம்+ 13-ஆம் நாளில், கொன்றுபோடுங்கள். அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டுங்கள். அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்”+ என்று அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தது. 14  அவற்றை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக அமல்படுத்த வேண்டியிருந்தது. அந்த நாளுக்குத் தயாராவதற்காக அந்தச் சட்டத்தை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது. 15  சூசான்* கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட அந்தச் சட்டம், ராஜாவின் உத்தரவுப்படி தூதுவர்கள் மூலம் வேகமாக அனுப்பப்பட்டது.+ பின்பு, ராஜாவும் ஆமானும் திராட்சமது குடிக்க உட்கார்ந்தார்கள். ஆனால், சூசான்*+ நகரம் குழப்பத்தில் மூழ்கியிருந்தது.

அடிக்குறிப்புகள்

இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
அல்லது, “இந்தக் கட்டளையை நிறைவேற்றுபவர்களுக்காக நான் 10,000 வெள்ளி தாலந்தை அரண்மனை கஜானாவுக்குத் தருகிறேன்.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “விரைவு அஞ்சல்காரர்கள்.”
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
வே.வா., “சூசா.”