ஏசாயா 28:1-29
28 எப்பிராயீமின் குடிவெறியர்களுடைய பகட்டான கிரீடமே,*+செழிப்பான பள்ளத்தாக்குக்கு மேலே இருக்கிற குடிகாரர்களின் அலங்காரக் கிரீடமே,வாடிப்போகிற வெறும் மலர்க் கிரீடமே,உனக்கு ஐயோ கேடு!
2 யெகோவா மகா சக்திபடைத்த ஒருவரை அனுப்புவார்.
இடியுடன் பெய்யும் ஆலங்கட்டி* மழையைப் போலவும்,சேதம் உண்டாக்கும் சூறாவளியைப் போலவும்,வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் புயல்மழையைப் போலவும்,
அவர் வந்து உன்னைக் கீழே தள்ளிப்போடுவார்.
3 எப்பிராயீமின் குடிவெறியர்களுடைய பகட்டான கிரீடங்களைதன் காலின்கீழ் மிதித்துப்போடுவார்.+
4 செழிப்பான பள்ளத்தாக்கின் மேலே இருக்கிற அலங்காரக் கிரீடம்,வாடிப்போகிற அந்த மலர்க் கிரீடம்,கோடைக் காலத்துக்குமுன் முதலாவது பழுக்கிற அத்திப் பழம்போல் ஆகிவிடும்.
ஒருவர் அதைப் பறித்தவுடன் வாயில் போட்டுவிடுவார்.
5 அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களுக்கு+ மகிமையான கிரீடமாகவும் அழகான மலர்க் கிரீடமாகவும் ஆவார்.
6 நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்குப் புத்தி கொடுப்பார். நகரவாசலைத் தாக்கும் எதிரிகளோடு போர் செய்கிறவர்களுக்குத் தைரியத்தைக் கொடுப்பார்.+
7 குருமார்களும் தீர்க்கதரிசிகளும்கூட மதுபானத்தினால் வழிதவறிப் போகிறார்கள்.திராட்சமது குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள்.
தவறான வழியில் போகிறார்கள்.திராட்சமது அவர்களைக் குழம்பிப்போகச் செய்கிறது.மதுபானம் அவர்களைத் தள்ளாட வைக்கிறது.அவர்கள் பார்க்கும் தரிசனம் அவர்களை வழிதவறிப் போகவைக்கிறது.தீர்ப்பு வழங்குவதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.+
8 அவர்களுடைய மேஜைகளெல்லாம் வாந்தியால் நிறைந்திருக்கிறது.சுத்தமான இடமே இல்லை.
9 ஜனங்களே, நீங்கள் என்னிடம்,“நீ யாருக்கு அறிவு புகட்ட நினைக்கிறாய்?
நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?யாருக்குப் புரிய வைக்கப் பார்க்கிறாய்?
நாங்கள் என்ன ஒன்றும் தெரியாத பிள்ளைகளா?
10 ‘கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;வரிக்கு வரி, வரிக்கு வரி;*+இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாயே” என்கிறீர்கள்.
11 அதனால், வேறு பாஷையில் திக்கித்திக்கிப் பேசுபவர்களை வைத்தே இந்த ஜனங்களிடம் அவர் பேசுவார்.+
12 ஒருசமயம் அவர், “இதுதான் ஓய்வெடுப்பதற்கான இடம். களைப்பாக இருக்கிறவர்கள் இங்கே ஓய்வெடுக்கட்டும். இதுதான் புத்துணர்ச்சி தரும் இடம்” என்று சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை.+
13 அதனால் யெகோவாவின் வார்த்தை இவர்களுக்கு இப்படி இருக்கும்:
“கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;வரிக்கு வரி, வரிக்கு வரி;*+இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.”
அதனால், இவர்கள் நடக்கும்போது தடுமாறுவார்கள்.பின்பக்கமாக விழுவார்கள்.காயமடைவார்கள், கண்ணியில் சிக்கிப் பிடிபடுவார்கள்.+
14 பெருமைபிடித்தவர்களே, எருசலேம் ஜனங்களை ஆட்சி செய்கிறவர்களே,யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.
15 நீங்கள் பெருமையாக,
“மரணத்தோடு நாங்கள் ஒப்பந்தம் பண்ணியிருக்கிறோம்.+கல்லறையோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.*
வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும்,எங்கள் பக்கம் வராது.பொய்தான் எங்களுக்கு அடைக்கலம்.தந்திரம்தான் எங்களுக்குப் புகலிடம்”+ என்று சொல்கிறீர்களே.
16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+
விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+
17 நான் நியாயத்தை அளவுநூலாக ஆக்குவேன்.+நீதியை மட்டப்பலகையாக* ஆக்குவேன்.+
பொய் என்கிற அடைக்கலத்தை ஆலங்கட்டி மழை அழிக்கும்.புகலிடத்தை வெள்ளம் வாரிக்கொண்டு போகும்.
18 மரணத்தோடு நீங்கள் செய்த ஒப்பந்தம் முறிக்கப்படும்.கல்லறையோடு நீங்கள் செய்த ஒப்பந்தம் ஒழிக்கப்படும்.+
வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது,நீங்கள் சின்னாபின்னமாவீர்கள்.
19 வெள்ளம் வரும்போதெல்லாம்,நீங்கள் அடித்துச் செல்லப்படுவீர்கள்.+அது தினம்தினம் புரண்டு வரும்.பகலிலும் வரும், ராத்திரியிலும் வரும்.
செய்தியைக் கேட்டு கதிகலங்கும்போதுதான் அவர்களுக்குப் புரியவரும்.*
20 அவர்கள் கால் நீட்டிப் படுக்க கட்டிலின் நீளம் போதாது.நன்றாகப் போர்த்திப் படுக்க போர்வையின் அகலம் போதாது.
21 யெகோவா வினோதமான செயலைச் செய்யவும்,அபூர்வமான வேலையை நிறைவேற்றவும்,+பிராசீம் மலையில் செயல்பட்டது போலச் செயல்படுவார்.கிபியோனின் பக்கத்திலுள்ள பள்ளத்தாக்கில் கொதித்தெழுந்தது போலக் கொதித்தெழுவார்.+
22 இப்போது கேலி செய்யாதீர்கள்.+அப்படிச் செய்தால், உங்களைக் கட்டியிருக்கும் கயிறுகள் இன்னும் இறுக்கப்படும்.தேசம்* முழுவதையும் அழிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவாவே என்னிடம் இதைச் சொல்லியிருக்கிறார்.+
23 நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள்.என் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
24 உழுகிறவன் விதை விதைக்காமல் நாள் முழுக்க உழுதுகொண்டே இருப்பானா?
நாள் முழுக்க மண்கட்டிகளை உடைத்து நிலத்தைச் சமமாக்கிக்கொண்டே இருப்பானா?+
25 நிலத்தைச் சமமாக்கிய பிறகு,சீரகத்தையும் கருஞ்சீரகத்தையும் தூவ மாட்டானா?கோதுமையையும் கம்பையும் பார்லியையும் அதனதன் இடத்தில் விதைக்க மாட்டானா?மாக்கோதுமையை*+ வயலின் ஓரங்களில் தூவ மாட்டானா?
26 அவர் அவனுக்குச் சரியான விதத்தில் கற்றுக்கொடுக்கிறார்.*அவனுடைய கடவுள் அவனுக்குப் போதிக்கிறார்.+
27 போரடிக்கும் பலகையால்+ யாரும் கருஞ்சீரகத்தை நொறுக்க மாட்டார்கள்.தடியால்தான் தட்டியெடுப்பார்கள்.
வண்டியின் உருளையை ஏற்றி சீரகத்தை நொறுக்க மாட்டார்கள்.கோலால்தான் தட்டியெடுப்பார்கள்.
28 ரொட்டி செய்வதற்காக ஒருவன் தானியத்தைக் களத்துமேட்டில் நொறுக்குவானா?
நாள் முழுக்க அதை அடித்துக்கொண்டே இருப்பானா?+குதிரை வண்டியை அதன்மேல் ஓட்டி,
அதன் உருளையால் அதை நொறுக்குவானா?+
29 இதுவும்கூட பரலோகப் படைகளின் யெகோவாவுடைய செயல்.அவருடைய யோசனைகள்* அற்புதமானவை.அவருடைய சாதனைகள் அதிசயமானவை.+
அடிக்குறிப்புகள்
^ அநேகமாக, தலைநகரமான சமாரியாவைக் குறிக்கலாம்.
^ அதாவது, “பனிக்கட்டி.”
^ வே.வா., “அளவுகோலுக்குமேல் அளவுகோல், அளவுகோலுக்குமேல் அளவுகோல்.”
^ வே.வா., “அளவுகோலுக்குமேல் அளவுகோல், அளவுகோலுக்குமேல் அளவுகோல்.”
^ அல்லது, “ஒரு தரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்.”
^ வே.வா., “தூக்கு நூலாக.”
^ அல்லது, “அவர்கள் புரிந்துகொள்ளும்போது கதிகலங்கிப்போவார்கள்.”
^ வே.வா., “பூமி.”
^ பூர்வ எகிப்தில் பயிரிடப்பட்ட ஒருவகையான தரம்குறைந்த கோதுமை.
^ வே.வா., “கண்டிக்கிறார்; தண்டிக்கிறார்.”
^ வே.வா., “நோக்கங்கள்.”