ஏசாயா 38:1-22
38 ஒருசமயம், எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்.+ ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி+ அவரிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நீ குணமாக மாட்டாய், இறந்துபோவாய். அதனால், உன் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் இப்போதே சொல்லிவிடு’” என்றார்.+
2 அதைக் கேட்டதும் எசேக்கியா சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.
3 “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன்,+ உங்களுக்குப் பிரியமானதைச் செய்திருக்கிறேன்; தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.+ உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று சொல்லிக் கதறி அழுதார்.
4 அப்போது யெகோவா ஏசாயாவிடம்,
5 “நீ எசேக்கியாவிடம் திரும்பிப் போய் இப்படிச் சொல்:+ ‘உன் மூதாதையாகிய தாவீதின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன்.+ நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன்.+ அதனால், உன் வாழ்நாளை இன்னும் 15 வருஷங்களுக்குக் கூட்டுகிறேன்.+
6 உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன், இந்த நகரத்தை எப்போதும் பாதுகாப்பேன்.+
7 யெகோவாவாகிய நான் சொன்னதைச் செய்வேன். அதற்கு யெகோவாவாகிய நான் தரும் அடையாளம் இதுதான்:+
8 ஆகாசின் படிக்கட்டில்* விழும் சூரியனின் நிழல் பத்துப் படிகள் பின்னால் போகும்படி செய்வேன்”’”+ என்று சொன்னார். அப்போது, ஆகாசின் படிக்கட்டில் விழுந்திருந்த நிழல் பத்துப் படிகள் பின்னால் போனது.
9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, குணமான பின்பு எழுதிய வார்த்தைகள் இவைதான்:
10 “நான் வாழ வேண்டிய காலத்திலேயேகல்லறையின் வாசலுக்குப் போக வேண்டிய நிலைமை வந்ததே.
என் வாழ்நாள் இப்படிக் குறுகிப் போனதே” என்று சொன்னேன்.
11 அதோடு, “‘யா’வை* இனி என்னால் பார்க்க முடியாதே, இந்த உலகத்தில் என்னால் ‘யா’வைப் பார்க்க முடியாதே.+
மனுஷர்களை இனி பார்க்க முடியாதே.செத்துப்போனவர்களோடு நான் கிடப்பேனே.
12 மேய்ப்பனின் கூடாரம் இன்று இருக்கும், நாளை இருக்காது.அதுபோல் என் வாழ்க்கையும் ஆகிவிட்டதே.+
நெய்த துணியை ஒரு நெசவாளர் தறியிலிருந்து துண்டிப்பது போலஎன் வாழ்நாளை அவர் துண்டிக்கிறார்.
காலையிலிருந்து ராத்திரிவரை என்னை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.+
13 விடியும்வரை என் மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.
சிங்கத்தைப் போல அவர் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குகிறார்.காலையிலிருந்து ராத்திரிவரை என்னை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.+
14 ஒரு குருவி* போல நான் கத்துகிறேன்.+புறாவைப் போல முனகிக்கொண்டே இருக்கிறேன்.+
உதவிக்காக மேலே பார்த்துப் பார்த்து என் கண்கள் பூத்துப்போனது.+
‘யெகோவாவே, நான் தாங்க முடியாத வேதனையில் இருக்கிறேன்.என்னோடு இருந்து எனக்கு உதவுங்கள்’ என்று கெஞ்சுகிறேன்.+
15 அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?
அவர் சொன்னபடியே என்னைக் குணமாக்கினார்.
நான் எப்படி வேதனையில் துடித்தேன் என்பதை நினைத்து,இனி என் வாழ்நாள் முழுவதும் மனத்தாழ்மையோடு* நடப்பேன்.
16 ‘யெகோவாவே, இவற்றால்* மனுஷன் வாழ்கிறான்.இவற்றில்தான் என் உயிர்மூச்சு இருக்கிறது.
நீங்கள் என்னைக் குணமாக்கி என் உயிரைக் காப்பாற்றுவீர்கள்.+
17 நான் நிம்மதியே இல்லாமல் வேதனையில் தவித்தபோது,நீங்கள் என்மேல் பாசம் காட்டினீர்கள்.நான் சாகாதபடி பார்த்துக்கொண்டீர்கள்.+
என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.+
18 கல்லறையில் இருப்பவர்களால் உங்களை மகிமைப்படுத்த முடியாது.+செத்துப்போனவர்களால் உங்களைப் புகழ முடியாது.+
குழிக்குள் போகிறவர்களால் உங்கள்மேல் நம்பிக்கை வைக்க முடியாது.*+
19 உயிரோடு இருக்கிறவர்களால் மட்டும்தான் உங்களைப் புகழ முடியும்.நான் இன்று உங்களைப் புகழ்வது போல அவர்களால் புகழ முடியும்.
ஒரு அப்பாவால் தன்னுடைய மகன்களுக்கு உங்களைப் பற்றி* கற்றுத்தர முடியும்.+
20 யெகோவாவே, என்னைக் காப்பாற்றுங்கள்.அப்போது, யெகோவாவாகிய உங்கள் ஆலயத்தில் நாங்கள் எல்லாரும் வாழ்நாளெல்லாம்நரம்பிசைக் கருவிகளை இசைத்து என் பாடல்களைப் பாடுவோம்’”+ என்று சொன்னேன்.
21 பின்பு ஏசாயா, “ஒரு அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து, எசேக்கியாவின் கொப்புளத்தின் மேல் வைத்து, பத்து போடுங்கள். அப்போது அவர் குணமடைவார்”+ என்று சொன்னார்.
22 ஏனென்றால் எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்துக்குப் போவேன் என்பதற்கு என்ன அடையாளம்?” என்று கேட்டிருந்தார்.+
அடிக்குறிப்புகள்
^ சூரிய கடிகாரத்தைப் போல, நேரத்தைக் கணக்கிடுவதற்காக இந்தப் படிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
^ “யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
^ அல்லது, “கொக்கு.”
^ வே.வா., “பயபக்தியோடு.”
^ அதாவது, “கடவுள் சொன்னவற்றாலும் செய்தவற்றாலும்.”
^ வே.வா., “நீங்கள் நம்பகமானவர் என்பதை உணர முடியாது.”
^ வே.வா., “உங்கள் நம்பகத்தன்மையைப் பற்றி.”