ஏசாயா 50:1-11
50 யெகோவா சொல்வது இதுதான்:
“உங்கள் தாயை அனுப்பியபோது நான் விவாகரத்து பத்திரம்+ கொடுத்தா அனுப்பினேன்?
ஏதோ கடனை அடைப்பதற்காகவா உங்களை விற்றுப்போட்டேன்?
நீங்கள் பாவம் செய்ததால்தானே உங்கள் தாயை அனுப்பிவிட்டேன்?+நீங்கள் குற்றம் செய்ததால்தானே+ உங்களை விற்றுப்போட்டேன்?
2 அப்படியிருக்கும்போது, நான் வந்த சமயத்தில் ஏன் இங்கு யாருமே இல்லை?
நான் கூப்பிட்டபோது ஏன் யாருமே பதில் சொல்லவில்லை?+
உங்களை விடுவிக்க முடியாதளவுக்கு என் கை என்ன சின்னதா?உங்களைக் காப்பாற்றுவதற்கு எனக்குச் சக்தி இல்லையா?+
நான் ஒரு வார்த்தை சொன்னால், கடலே வற்றிவிடும்.+ஆறுகள் வறண்ட நிலமாகும்.+
அப்போது, மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்துப்போகும்.அவற்றின் உடல் அழுகிவிடும்.
3 நான் வானத்தை இருளால் மூடுகிறேன்.+அதைக் கறுப்புக் கம்பளியால் போர்த்துகிறேன்.”
4 பக்குவமாகப் பேசும் திறமையை* உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக* பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+
தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+
5 உன்னதப் பேரரசராகிய யெகோவா என் காதுகளைத் திறந்திருக்கிறார்.நான் அவரை எதிர்க்கவில்லை.+
வேறு பக்கமாகத் திரும்பிக்கொள்ளவும் இல்லை.+
6 என்னை அடித்தவர்களுக்கு என் முதுகைக் காட்டினேன்.என் தாடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கு* என் கன்னங்களைக் காட்டினேன்.
என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை.+
7 ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார்.+
அதனால் நான் கூனிக்குறுக மாட்டேன்.
எனக்கு எந்த அவமானமும் வராது என்று தெரியும்.அதனால்தான், என் முகத்தைக் கருங்கல்* போலாக்கினேன்.+
8 என்னை நீதிமான் என்று அறிவிக்கிறவர் எனக்குத் துணையாக இருக்கிறார்.
யாரால் என்னைக் குற்றப்படுத்த* முடியும்?+
வாருங்கள், நாம் நேருக்கு நேர் வாதாடலாம்.
யாருக்கு என்மேல் வழக்கு இருக்கிறது?
அவன் என் முன்னால் வந்து வழக்காடட்டும்.
9 உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார்.
நான் குற்றவாளி என்று யாரால் தீர்ப்பு கொடுக்க முடியும்?
இதோ! அவர்கள் எல்லாரும் ஒரு துணியைப் போல அரிக்கப்படுவார்கள்.
அந்துப்பூச்சி அவர்களைத் தின்றுதீர்க்கும்.
10 யெகோவாவுக்குப் பயந்து நடந்து,அவருடைய ஊழியனின் பேச்சைக் கேட்பவன் யார்?+
வெளிச்சமே இல்லாத கும்மிருட்டில் நடப்பவன் யார்?
அவன் தன்னுடைய கடவுளான யெகோவாவின் பெயரில் நம்பிக்கை வைக்கட்டும்; அவரையே சார்ந்திருக்கட்டும்.
11 “தீ மூட்டுகிறவர்களே,நெருப்பைக் கிளறிவிடுகிறவர்களே,நீங்கள் மூட்டிய நெருப்பின் வெளிச்சத்திலேயே நடங்கள்.அந்தத் தீப்பொறிகளின் நடுவிலேயே நடங்கள்.
நான் உங்களுக்குக் கொடுக்கப்போகிற தண்டனை இதுதான்:
நீங்கள் வலியில் துடிதுடித்தபடி கிடப்பீர்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “கல்விமானின் நாவை.”
^ அல்லது, “தெம்பளிக்கும் விதமாக.”
^ வே.வா., “தாடியிலுள்ள முடியைப் பிடுங்கி எடுக்கிறவர்களுக்கு.”
^ நே.மொ., “சிக்கிமுக்கிக் கல்.”
^ வே.வா., “என்னோடு வாதாட.”