சகரியா 4:1-14

  • தரிசனம் 5: ஒரு குத்துவிளக்கும் இரண்டு ஒலிவ மரங்களும் (1-14)

    • ‘மனித சக்தியால் அல்ல, என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்’ (6)

    • சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை அற்பமாக நினைக்கக் கூடாது (10)

4  என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதர் திரும்ப வந்து, தூங்கும் ஒருவரை எழுப்புவது போல என்னை எழுப்பினார்.  பின்பு என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குத்துவிளக்கைப்+ பார்க்கிறேன். அதன்மேல் ஒரு கிண்ணம் இருக்கிறது. அதோடு, ஏழு குழாய்கள் கொண்ட ஏழு அகல் விளக்குகள்+ இருக்கின்றன.  அந்தக் கிண்ணத்துக்கு வலது பக்கத்தில் ஒரு ஒலிவ மரம், இடது பக்கத்தில் ஒரு ஒலிவ மரம் என இரண்டு மரங்கள் இருக்கின்றன”+ என்று சொன்னேன்.  பின்பு நான் அந்தத் தேவதூதரிடம், “என் எஜமானே, இவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன்.  அதற்கு அவர், “இவற்றின் அர்த்தம் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு நான், “தெரியாது, என் எஜமானே!” என்றேன்.  அப்போது அவர், “செருபாபேலுக்கு யெகோவா சொல்லும் செய்தி இதுதான்: ‘“படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல,+ என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.  மாபெரும் மலையே, செருபாபேலுக்கு+ முன்னால் நீ தரைமட்டமாவாய்.+ ஆலயத்தின் மேல்கல்லை அவர் கொண்டுவருவார். எல்லாரும் அதைப் பார்த்து, “எவ்வளவு அழகாக இருக்கிறது! எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்று சத்தமாகச் சொல்வார்கள்’ என்றார்.”  மறுபடியும் யெகோவாவிடமிருந்து எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது:  “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டன,+ அந்தக் கைகளே இதைக் கட்டி முடிக்கும்.+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 10  சிறியளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலையை ஏன் அற்பமாக நினைக்க வேண்டும்?+ செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை* பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள். ஏழு கண்களும் அதைப் பார்க்கும்; அவை, பூமியெங்கும் சுற்றிப் பார்க்கிற யெகோவாவின் கண்கள்.”+ 11  பின்பு நான், “குத்துவிளக்குக்கு வலது பக்கத்தில் ஒரு ஒலிவ மரமும் இடது பக்கத்தில் ஒரு ஒலிவ மரமும் இருக்கிறதே,+ இவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். 12  அதன்பின் இரண்டாவது தடவை நான் அவரிடம், “இரண்டு தங்கக் குழாய்கள் வழியாகத் தங்க நிற எண்ணெயை ஊற்றுகிற இந்த இரண்டு ஒலிவ மரக் கிளைகளுக்கு* என்ன அர்த்தம்?” என்று கேட்டேன். 13  அதற்கு அந்தத் தேவதூதர், “இவற்றின் அர்த்தம் உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அப்போது நான், “தெரியாது, என் எஜமானே!” என்றேன். 14  அதற்கு அவர், “இவை, அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு பேரைக் குறிக்கின்றன; அவர்கள் முழு பூமிக்கும் எஜமானாக இருக்கிறவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தூக்குக்குண்டை.”
அதாவது, “பழங்கள் நிறைந்த கிளைகளுக்கு.”