சங்கீதம் 88:1-18

  • மரணத்திலிருந்து காப்பாற்றும்படி செய்யப்படும் ஜெபம்

    • “என் உயிர் கல்லறையின் விளிம்புக்கே வந்துவிட்டது” (3)

    • ‘ஒவ்வொரு நாள் காலையிலும் உங்களிடம் ஜெபம் செய்கிறேன்’ (13)

ஒரு பாடல். கோராகுவின் மகன்களுடைய சங்கீதம்.+ இசைக் குழுவின் தலைவனுக்கு; மகலாத்* பாணியில் மாறி மாறி பாட வேண்டியது. எஸ்ராகியனான ஏமானின்+ மஸ்கீல்.* 88  யெகோவாவே, என்னை மீட்கும் கடவுளே,+பகலில் நான் கதறுகிறேன்.ராத்திரியிலும் உங்கள்முன் கதறுகிறேன்.+   என்னுடைய ஜெபம் உங்களிடம் வந்து சேரட்டும்.+நான் உதவி கேட்டுக் கதறுவதைக் காதுகொடுத்து* கேளுங்கள்.+   வேதனைக்குமேல் வேதனை என் ஜீவனை வாட்டியெடுக்கிறது.+என் உயிர் கல்லறையின் விளிம்புக்கே வந்துவிட்டது.+   சவக்குழிக்குள் போகிறவர்களின் கணக்கில் நான் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுவிட்டேன்.+நாதியில்லாதவனாக* ஆகிவிட்டேன்.+   இறந்தவர்களைப் போல நான் கைவிடப்பட்டேன்.கொல்லப்பட்டுக் கல்லறையில் கிடக்கிறவர்களைப் போல ஆகிவிட்டேன்.இனியும் உங்கள் நினைவில் அவர்கள் இல்லையே!இனியும் உங்கள் அரவணைப்பு அவர்களுக்குக் கிடைப்பதில்லையே!   நீங்கள் என்னைப் படுகுழிக்குள் தள்ளிவிட்டீர்கள்.இருட்டான இடத்தில், பெரிய அதலபாதாளத்தில், தள்ளிவிட்டீர்கள்.   உங்களுடைய கடும் கோபம் என்னைப் பயங்கரமாக அழுத்துகிறது.+சீறிவருகிற உங்கள் அலைகள் என்மேல் மோதியடிக்கின்றன. (சேலா)   என் நண்பர்களை என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+அவர்கள் என்னை அருவருப்பாகப் பார்க்கும்படி செய்துவிட்டீர்கள். நான் வெளியே வர முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.   சோகத்தில் என் கண்கள் சோர்ந்துவிட்டன.+ யெகோவாவே, நாள் முழுவதும் உங்களைக் கூப்பிடுகிறேன்.+என் கைகளை விரித்து உங்களிடம் வேண்டுகிறேன். 10  இறந்தவர்களுக்காக நீங்கள் அற்புதங்கள் செய்வீர்களா? செத்துக் கிடக்கிறவர்கள்* எழுந்துவந்து உங்களைப் புகழ முடியுமா?+ (சேலா) 11  கல்லறையில் இருக்கிறவர்கள் உங்களுடைய மாறாத அன்பைப் பற்றிப் பேசுவார்களா?புதைகுழியில் இருக்கிறவர்கள் உங்களுடைய நம்பகத்தன்மையை* பற்றிச் சொல்வார்களா? 12  இருட்டில் உங்களுடைய அற்புதங்களும்,மறக்கப்பட்டவர்களின் தேசத்தில் உங்களுடைய நீதியும் தெரியவருமா?+ 13  ஆனாலும் யெகோவாவே, நான் உதவிக்காக உங்களிடம் கதறுகிறேன்.+ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள்முன் ஜெபம் செய்கிறேன்.+ 14  யெகோவாவே, என்னை ஏன் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்?+ உங்கள் முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைத்துக்கொள்கிறீர்கள்?+ 15  சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்.இப்போது சாகும் நிலையில் இருக்கிறேன்.+நீங்கள் அனுமதிக்கிற பயங்கர வேதனைகளைச் சகித்து சகித்து எனக்கு மரத்தே போய்விட்டது. 16  சுட்டெரிக்கிற உங்கள் கோபம் என்னை வாட்டியெடுக்கிறது.+நீங்கள் ஏற்படுத்தும் திகில் என்னைக் கொல்கிறது. 17  அவை நாள் முழுவதும் என்னை வெள்ளம்போல் சூழ்ந்திருக்கின்றன.எல்லா பக்கத்திலிருந்தும்* என்னை அமிழ்த்துகின்றன. 18  என்னுடைய நண்பர்களையும் தோழர்களையும் என்னைவிட்டுத் தூரமாகத் துரத்திவிட்டீர்கள்.+இப்போது இருட்டுதான் எனக்கு நண்பன்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “குனிந்து.”
வே.வா., “பலம் இல்லாதவன்போல்.”
வே.வா., “செத்து செயலிழந்து போனவர்கள்.”
வே.வா., “உண்மைத்தன்மையை.”
அல்லது, “ஒரே சமயத்தில்.”