நியாயாதிபதிகள் 11:1-40

  • யெப்தா முதலில் துரத்திவிடப்படுகிறார், பின்பு நியாயாதிபதியாக நியமிக்கப்படுகிறார் (1-11)

  • அம்மோனியர்களிடம் யெப்தா காரணங்களை எடுத்துச்சொல்கிறார் (12-28)

  • யெப்தாவின் நேர்த்திக்கடனும் அவருடைய மகளும் (29-40)

    • யெப்தாவின் மகள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருக்கிறாள் (38-40)

11  கீலேயாத்தைச் சேர்ந்த யெப்தா+ மாவீரராக இருந்தார். அவருடைய அம்மா ஒரு விபச்சாரியாக இருந்தவள். அவருடைய அப்பா பெயர் கீலேயாத்.  கீலேயாத்தின் மனைவியும்* அவருக்கு மகன்களைப் பெற்றெடுத்தாள். அந்த மகன்கள் வளர்ந்து பெரியவர்களானபோது யெப்தாவிடம், “நீ வேறொருத்திக்குப் பிறந்தவன், எங்களுடைய அப்பாவின் சொத்தில் உனக்குப் பங்கு கிடையாது” என்று சொல்லி அவரைத் துரத்திவிட்டார்கள்.  அதனால், யெப்தா தன்னுடைய சகோதரர்களைவிட்டு ஓடிப்போய் தோப் தேசத்தில் குடியிருந்தார். வேலை இழந்த சிலர் அவரோடு சேர்ந்துகொண்டு எதிரிகளைத் தாக்குவதற்காகப் போனார்கள்.  கொஞ்சக் காலம் கழித்து, இஸ்ரவேலர்களுடன் அம்மோனியர்கள் போர் செய்தார்கள்.+  அப்போது, கீலேயாத்தின் பெரியோர்கள்* யெப்தாவை தோப் தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வர உடனடியாகப் புறப்பட்டுப் போனார்கள்.  அவர்கள் யெப்தாவிடம், “நீங்கள் வந்து எங்களுக்குப் படைத் தளபதியாக இருங்கள், நாம் அம்மோனியர்களோடு போர் செய்யலாம்” என்று சொன்னார்கள்.  ஆனால் யெப்தா கீலேயாத்தின் பெரியோர்களிடம், “நீங்கள்தானே என்னை ஒரேயடியாக வெறுத்து, என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்து துரத்தியடித்தீர்கள்?+ உங்களுக்குக் கஷ்டம் வரும்போது மட்டும் ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள்?” என்று கேட்டார்.  அப்போது கீலேயாத்தின் பெரியோர்கள் யெப்தாவிடம், “நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் இப்போது உங்களைக் கூட்டிக்கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். நீங்கள் எங்களுடன் வந்து அம்மோனியர்களோடு போர் செய்தால், கீலேயாத் ஜனங்களுக்கு உங்களைத் தலைவராக்குவோம்”+ என்று சொன்னார்கள்.  அதனால் யெப்தா கீலேயாத்தின் பெரியோர்களிடம், “அம்மோனியர்களோடு போர் செய்ய நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போன பிறகு, அவர்களை யெகோவா என் கையில் கொடுத்தால், நான் நிச்சயம் உங்களுக்குத் தலைவராக இருப்பேன்!” என்று சொன்னார். 10  அதற்கு கீலேயாத்தின் பெரியோர்கள், “உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் யெகோவாவே சாட்சியாக இருக்கட்டும். நீங்கள் சொன்னபடி நாங்கள் செய்யாவிட்டால் அவர் எங்களைத் தண்டிக்கட்டும்” என்று சொன்னார்கள். 11  அதனால், கீலேயாத்தின் பெரியோர்களுடன் யெப்தா புறப்பட்டுப் போனார். ஜனங்கள் அவரைத் தங்களுடைய தலைவராகவும் படைத் தளபதியாகவும் ஆக்கினார்கள். யெப்தா தான் சொன்ன எல்லாவற்றையும் மிஸ்பாவில்+ யெகோவாவுக்கு முன்னால் திரும்பவும் சொன்னார். 12  பின்பு யெப்தா அம்மோனியர்களின்+ ராஜாவிடம் தூதுவர்களை அனுப்பி, “எங்கள்மேல் உங்களுக்கு என்ன விரோதம்? ஏன் எங்களுடைய தேசத்தைத் தாக்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். 13  அம்மோனியர்களின் ராஜா யெப்தாவின் தூதுவர்களிடம், “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அர்னோனிலிருந்து+ யாபோக் வரையும் யோர்தான் வரையும்+ இருக்கிற என்னுடைய தேசத்தைப் பிடுங்கிக்கொண்டார்கள்.+ அதனால்தான் தாக்க வந்தோம். இப்போது, சமாதானமாக அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று சொன்னான். 14  ஆனால், யெப்தா மறுபடியும் தன்னுடைய தூதுவர்களை அம்மோனியர்களின் ராஜாவிடம் அனுப்பி, 15  “யெப்தா சொல்கிறது என்னவென்றால், ‘மோவாபியர்களின் தேசத்தையும் அம்மோனியர்களின் தேசத்தையும் இஸ்ரவேலர்கள் பிடுங்கிக்கொள்ளவில்லை.+ 16  அவர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, வனாந்தரம் வழியாக செங்கடல் வரைக்கும் நடந்துவந்து+ காதேசை அடைந்தார்கள்.+ 17  அப்போது, இஸ்ரவேலர்கள் ஏதோமின் ராஜாவிடம் தூதுவர்களை அனுப்பி,+ “தயவுசெய்து உங்கள் தேசத்தின் வழியாகக் கடந்துபோக எங்களுக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள், ஆனால் ஏதோமின் ராஜா ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல் மோவாபின்+ ராஜாவிடமும் கேட்டார்கள், அவனும் சம்மதிக்கவில்லை. அதனால், இஸ்ரவேலர்கள் காதேசிலேயே+ தங்கினார்கள். 18  வனாந்தரம் வழியாக அவர்கள் நடந்துபோனபோது, ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிக்கொண்டு போனார்கள்.+ அவர்கள் மோவாப் தேசத்துக்குக் கிழக்கே போய்,+ மோவாபின் எல்லைக்குள்+ வருவதற்குப் பதிலாக அதன் எல்லையில் இருந்த அர்னோனின் சுற்றுவட்டாரத்திலேயே முகாம்போட்டார்கள். 19  பின்பு எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனிடம், அதாவது எஸ்போனின் ராஜாவிடம், இஸ்ரவேலர்கள் தங்கள் தூதுவர்களை அனுப்பி, “உங்களுடைய தேசம் வழியாக எங்களுடைய இடத்துக்குப் போய்ச் சேர தயவுசெய்து அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள்.+ 20  ஆனால் சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய தேசத்தைக் கடந்துபோக அவர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய படையைத் திரட்டி, யாகாசில் முகாம்போட்டு, இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 21  அதனால், சீகோனையும் அவன் படை முழுவதையும் இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா தன்னுடைய ஜனங்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அவனைத் தோற்கடித்து, எமோரியர்களின் தேசம் முழுவதையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ 22  இப்படித்தான் அவர்கள் அர்னோன் தொடங்கி யாபோக் வரையும், வனாந்தரம் தொடங்கி யோர்தான் வரையும் இருக்கிற எமோரியர்களின் பிரதேசம் முழுவதையும் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+ 23  இஸ்ரவேலர்களின் கடவுளாகிய யெகோவாதான் அவர்களுக்கு முன்னால் எமோரியர்களைத் துரத்தியடித்தார்.+ இப்போது நீங்கள் இஸ்ரவேலர்களைத் துரத்தப்போகிறீர்களா? 24  உங்களுடைய கேமோஷ் தெய்வம்+ எந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுக்கிறதோ அந்தத் தேசத்தைத்தானே நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்? அப்படித்தான் நாங்களும் எங்கள் கடவுளாகிய யெகோவா எந்த ஜனங்களைத் துரத்தியடிக்கிறாரோ அந்த ஜனங்களுடைய தேசத்தைத்தான் சொந்தமாக்கிக்கொள்வோம்.+ 25  சிப்போரின் மகனும் மோவாபின் ராஜாவுமாகிய பாலாக்கைவிட+ நீங்கள் பெரியவரா? அவர் எப்போதாவது இஸ்ரவேலர்களோடு வாதாடினாரா, அவர்களோடு போர் செய்தாரா? 26  இஸ்ரவேலர்கள் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும்*+ ஆரோவேரிலும் அதன் சிற்றூர்களிலும் அர்னோன் ஆற்றங்கரையில் உள்ள எல்லா நகரங்களிலும் 300 வருஷங்களாகக் குடியிருந்து வருகிறார்கள். ஏன் இவ்வளவு காலம் நீங்கள் அதைத் திரும்பக் கேட்கவில்லை?+ 27  நாங்கள் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்யவில்லை, நீங்கள்தான் எங்களை அநியாயமாகத் தாக்க வருகிறீர்கள். நியாயாதிபதியாகிய யெகோவாவே+ இன்று இஸ்ரவேலர்களுக்கும் அம்மோனியர்களுக்கும் இடையில் நியாயாதிபதியாக இருந்து, தீர்ப்பு கொடுக்கட்டும்’” என்று சொன்னார். 28  ஆனால், யெப்தா சொல்லி அனுப்பிய செய்தியை அம்மோனியர்களுடைய ராஜா காதில் போட்டுக்கொள்ளவில்லை. 29  யெப்தாவுக்கு யெகோவாவின் சக்தி கிடைத்தது.+ அவர் கீலேயாத் பிரதேசத்தையும் மனாசே பிரதேசத்தையும் கடந்து கீலேயாத்திலுள்ள மிஸ்பேக்கு வந்தார்.+ பின்பு, அம்மோனியர்களோடு போர் செய்யப் போனார். 30  அப்போது யெப்தா யெகோவாவிடம், “அம்மோனியர்களை நீங்கள் என் கையில் கொடுத்தால், 31  யெகோவாவே, நான் வெற்றியோடு திரும்பும்போது என் வீட்டு வாசலிலிருந்து என்னைச் சந்திக்க யார் முதலில் வருகிறாரோ அவரை உங்களுக்கு அர்ப்பணிப்பேன்.+ அவரைத் தகன பலியாகச் செலுத்துவேன்”*+ என்று சொல்லி நேர்ந்துகொண்டார்.+ 32  பின்பு, அம்மோனியர்களோடு போர் செய்ய யெப்தா போனார். யெகோவா அந்த ஜனங்களை அவர் கையில் கொடுத்தார். 33  ஆரோவேர் தொடங்கி மின்னித்துக்குப் போகும் வழிவரை, யெப்தா 20 நகரங்களைக் கைப்பற்றி, ஆபேல்-கெராமிம்வரை ஏராளமானவர்களை வெட்டிக் கொன்றார். இப்படி, அம்மோனியர்களை அடக்கிவிட இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் உதவினார். 34  பின்பு, மிஸ்பாவிலிருந்த+ தன்னுடைய வீட்டுக்கு யெப்தா வந்தார். அப்போது, அவருடைய மகள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவரை வரவேற்க வெளியே வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள், அவளைத் தவிர அவருக்கு வேறு மகளோ மகனோ இல்லை. 35  அவர் அவளைப் பார்த்தவுடன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, “ஐயோ, என் மகளே! என் இதயத்தை நொறுக்கிவிட்டாயே! உன்னையே நான் அனுப்ப வேண்டியதாகிவிட்டதே! நான் வாய் திறந்து யெகோவாவிடம் சொல்லிவிட்டேன், அதை என்னால் மாற்ற முடியாதே”+ என்றார். 36  அதற்கு அவள், “அப்பா, நீங்கள் வாய் திறந்து யெகோவாவிடம் சொல்லியிருந்தால், அவருக்கு வாக்குக் கொடுத்தபடியே+ எனக்குச் செய்துவிடுங்கள். ஏனென்றால், உங்கள் எதிரிகளான அம்மோனியர்களை யெகோவா பழிக்குப்பழி வாங்கிவிட்டார்” என்று சொன்னாள். 37  பின்பு தன் அப்பாவிடம், “எனக்காக ஒன்று மட்டும் செய்யுங்கள். இரண்டு மாதங்களுக்கு என்னைத் தனியாக விட்டுவிடுங்கள். நான் மலைகளுக்குப் போகிறேன். கன்னியாகவே இருக்கப்போவதை நினைத்து என் தோழிகளுடன் சேர்ந்து அழுதுவிட்டு வருகிறேன்” என்று சொன்னாள். 38  அதற்கு அவர் “போய் வா!” என்று சொல்லி, அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பிவைத்தார். கன்னியாகவே இருக்கப்போவதை நினைத்துத் தன் தோழிகளுடன் சேர்ந்து அழுதுவிட்டு வருவதற்காக அவள் மலைகளுக்குப் போனாள். 39  இரண்டு மாதங்கள் கழித்து தன் அப்பாவிடம் திரும்பி வந்தாள். அப்போது அவர், தான் நேர்ந்துகொண்டபடியே செய்தார்.+ அவள் கல்யாணம் செய்துகொள்ளவே இல்லை. 40  கீலேயாத்தைச் சேர்ந்த யெப்தாவின் மகளைப் பார்த்துப் பாராட்டுவதற்காக இஸ்ரவேலிலுள்ள இளம் பெண்கள் வருஷா வருஷம் நான்கு நாட்களுக்கு அவளிடம் போய் வந்தார்கள். இது இஸ்ரவேலில் ஒரு வழக்கமாக ஆனது.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, “மற்றொரு மனைவி.”
வே.வா., “மூப்பர்கள்.”
வே.வா, “அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும்.”
அநேகமாக, கடவுளுடைய சேவைக்கு முழுமையாக அர்ப்பணிப்பதைக் குறிக்கும் உருவக அணி.