நியாயாதிபதிகள் 17:1-13

  • மீகாவின் சிலைகளும் அவனுடைய பூசாரியும் (1-13)

17  எப்பிராயீம் மலைப்பகுதியில்+ மீகா என்ற ஒருவன் வாழ்ந்துவந்தான்.  அவன் தன்னுடைய அம்மாவிடம், “நீங்கள் வைத்திருந்த 1,100 வெள்ளிக் காசுகள் தொலைந்தபோது, அதை எடுத்தவனை என் காதுபட சபித்தீர்களே, இதோ, அந்த வெள்ளிக் காசுகள். நான்தான் அதை எடுத்தேன்” என்று சொன்னான். அதற்கு அவனுடைய அம்மா, “என் மகனே, யெகோவா உன்னை ஆசீர்வதிக்கட்டும்!” என்று சொன்னாள்.  அப்போது அவன் அந்த 1,100 வெள்ளிக் காசுகளைத் தன்னுடைய அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தான். அதற்கு அவனுடைய அம்மா, “இதை நான் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கிறேன். இதை வைத்து நீ உனக்காக ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்ய வேண்டும்.+ இப்போது இந்தக் காசுகளை உன்னிடமே திருப்பிக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.  அவன் தன்னுடைய அம்மாவிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுத்த பின்பு, அவள் அதிலிருந்து 200 வெள்ளிக் காசுகளை எடுத்து வெள்ளி ஆசாரியிடம் கொடுத்தாள். ஆசாரி ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்தான். அவற்றை மீகா தன்னுடைய வீட்டில் வைத்தான்.  மீகாவுக்குச் சொந்தமாக ஒரு கோயில் இருந்தது. அவன் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ செய்து தன்னுடைய மகன்களில் ஒருவனைப் பூசாரியாக வைத்தான்.+  அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லாததால்+ எல்லாரும் அவரவர் இஷ்டப்படி நடந்துவந்தார்கள்.+  அப்போது யூதாவிலுள்ள பெத்லகேமில்,+ லேவியனாகிய+ ஒரு வாலிபன் யூதா குடும்பத்தோடு கொஞ்சக் காலம் தங்கியிருந்தான்.  பின்பு, வேறொரு இடத்தில் வாழ்வதற்காக யூதாவிலுள்ள பெத்லகேமைவிட்டுப் புறப்பட்டுப் போனான். வழியில் எப்பிராயீம் மலைப்பகுதியைச் சேர்ந்த மீகாவின்+ வீட்டுப்பக்கம் வந்தான்.  மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “யூதாவிலுள்ள பெத்லகேமைச் சேர்ந்த லேவியன் நான். தங்குவதற்கு இடம் தேடிப் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னான். 10  மீகா அவனிடம், “நீ என்னோடு தங்கியிரு. எனக்கு ஆலோசகனாகவும்* பூசாரியாகவும் இரு. வருஷத்துக்கு 10 வெள்ளிக் காசுகளும், உடையும், சாப்பாடும் தருகிறேன்” என்று சொன்னான். அதனால், அந்த லேவியன் மீகாவின் வீட்டுக்குள் போனான். 11  அந்த லேவியன் மீகாவோடு தங்கியிருக்க சம்மதித்ததால், அவன் மீகாவின் மகன்களில் ஒருவனைப் போல ஆனான். 12  மீகா அந்த லேவியனைப் பூசாரியாக வைத்துக்கொண்டான்.+ அவன் மீகாவின் வீட்டிலேயே வாழ்ந்துவந்தான். 13  அப்போது மீகா, “நான் ஒரு லேவியனைப் பூசாரியாக வைத்திருப்பதால் இப்போது யெகோவா எனக்கு நல்லது செய்வார்” என்று சொல்லிக்கொண்டான்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தகப்பனாகவும்.”