நியாயாதிபதிகள் 18:1-31

  • தாண் கோத்திரத்தார் இடம் தேடுகிறார்கள் (1-31)

    • மீகாவின் சிலைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன, பூசாரியும் கொண்டுபோகப்படுகிறான் (14-20)

    • லாயீஸ் கைப்பற்றப்பட்டு அதற்கு தாண் என்று பெயர் வைக்கப்படுகிறது (27-29)

    • தாணில் சிலை வணக்கம் (30, 31)

18  அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை.+ தாண் கோத்திரத்தாருக்கு+ இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவில் போதுமான இடம் அதுவரை கிடைக்காததால், குடியிருப்பதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்கள்.+  அதனால், தேசத்தை உளவு பார்ப்பதற்காக அவர்கள் சோராவிலிருந்தும் எஸ்தாவோலிலிருந்தும்+ திறமையான ஐந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம், “தேசத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்கள். அந்த ஆட்கள் எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த மீகாவின்+ வீடு வரைக்கும் போய், அன்றைக்கு ராத்திரி அங்கே தங்கினார்கள்.  அவர்கள் மீகாவின் வீட்டுக்குப் பக்கத்தில் போனபோது, அங்கே தங்கியிருந்த வாலிபனாகிய லேவியனின் குரலை* அடையாளம் கண்டுகொண்டார்கள். அதனால் அவனிடம் போய், “நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றெல்லாம் கேட்டார்கள்.  அப்போது அவன், மீகா தனக்குச் செய்ததையெல்லாம் சொன்னான். அதோடு, “அவர் எனக்குச் சம்பளம் கொடுத்து பூசாரியாக வைத்திருக்கிறார்”+ என்று சொன்னான்.  அதற்கு அவர்கள், “நாங்கள் போகிற வேலை நல்லபடியாக முடியுமா என்று தயவுசெய்து கடவுளிடம் கேட்டுச் சொல்” என்றார்கள்.  அதற்கு அந்தப் பூசாரி, “நிம்மதியாகப் போங்கள். யெகோவா உங்களுக்குத் துணையாக வருவார்” என்று சொன்னான்.  அதனால் அந்த ஐந்து ஆட்களும் அங்கிருந்து கிளம்பி லாயீசுக்குப்+ போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்த ஜனங்கள் சீதோனியர்களைப் போலவே எந்த ஊர்க்காரர்களின் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துவந்ததை அவர்கள் பார்த்தார்கள். அந்த ஜனங்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்துவந்தார்கள்.+ அவர்களை யாரும் அடக்கி ஆளவில்லை. அவர்கள் சீதோனியர்களிடமிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தார்கள். வேறு யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்துவந்தார்கள்.  சோரா, எஸ்தாவோல் நகரங்களுக்கு+ அந்த ஐந்து ஆட்களும் திரும்பி வந்தபோது, “போன விஷயம் என்ன ஆனது?” என்று அவர்களுடைய சகோதரர்கள் கேட்டார்கள்.  அதற்கு அவர்கள், “அது ரொம்ப நல்ல தேசம். நாம் போய் அதைக் கைப்பற்றிவிடலாம். ஏன் தயங்குகிறீர்கள்? வாருங்கள், உடனடியாகப் போய் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம். 10  அங்குள்ள ஜனங்கள், தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்துவருகிறார்கள்.+ அவர்களுடைய தேசம் ரொம்பப் பெரிய தேசம். அதைக் கடவுள் உங்கள் கையில் கொடுத்திருக்கிறார். உலகத்தில் கிடைக்கிற எல்லாமே அந்த இடத்தில் கிடைக்கும்”+ என்று சொன்னார்கள். 11  உடனே, தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 வீரர்கள் ஆயுதம் எடுத்துக்கொண்டு சோரா, எஸ்தாவோல் நகரங்களிலிருந்து+ புறப்பட்டுப் போனார்கள். 12  அவர்கள் போய் யூதாவிலுள்ள கீரியாத்-யெயாரீமுக்குப்+ பக்கத்தில் முகாம்போட்டார்கள். அதனால்தான், கீரியாத்-யெயாரீமுக்கு மேற்கே இருக்கிற அந்த இடம், மக்னி-தாண்*+ என்று இந்த நாள்வரை அழைக்கப்படுகிறது. 13  பின்பு, அவர்கள் அங்கிருந்து எப்பிராயீம் மலைப்பகுதியில் இருந்த மீகாவின்+ வீடுவரை போனார்கள். 14  அப்போது, லாயீசை உளவு பார்த்த அந்த ஐந்து ஆட்களும்+ தங்களுடைய சகோதரர்களிடம், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த வீடுகளில் ஏபோத்தும் குலதெய்வச் சிலைகளும் செதுக்கப்பட்ட சிலையும் உலோகச் சிலையும் இருக்கின்றன.+ இப்போது என்ன செய்யலாமென்று யோசித்துப் பாருங்கள்” என்று சொன்னார்கள். 15  அதனால், அவர்கள் மீகாவின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வாலிபனாகிய லேவியனின்+ வீட்டுக்குப் போய் அவனிடம் நலம் விசாரித்தார்கள். 16  அந்தச் சமயத்தில், தாண் கோத்திரத்தைச் சேர்ந்த 600 வீரர்கள்+ ஆயுதங்களோடு நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். 17  செதுக்கப்பட்ட சிலையையும் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ உலோகச் சிலையையும்+ எடுத்துக்கொள்வதற்காக, லாயீசை உளவு பார்த்த அந்த ஐந்து பேரும்+ உள்ளே போனார்கள். அந்தப் பூசாரி+ ஆயுதங்களோடு வந்த 600 வீரர்களுடன் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தான். 18  அவர்கள் மீகாவின் வீட்டுக்குள் போய், செதுக்கப்பட்ட சிலையையும் ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் உலோகச் சிலையையும் எடுத்துக்கொண்டார்கள். அப்போது அந்தப் பூசாரி, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான். 19  அதற்கு அவர்கள், “சத்தம் போடாதே! பேசாமல் எங்களுடன் வந்து எங்களுக்கு ஆலோசகனாகவும்* குருவாகவும் இரு. ஒரேவொரு மனுஷனுடைய வீட்டில் பூசாரியாக இருப்பது+ நல்லதா, இஸ்ரவேல் குடும்பங்களுக்கே, சொல்லப்போனால் ஒரு கோத்திரத்துக்கே, பூசாரியாக இருப்பது+ நல்லதா? நீயே யோசித்துக்கொள்” என்று சொன்னார்கள். 20  அது அந்தப் பூசாரிக்கு நல்லதாகப் பட்டதால், ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும்+ எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான். 21  அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். பிள்ளைகளையும் கால்நடைகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் முன்னால் அனுப்பி வைத்தார்கள். 22  அவர்கள் மீகாவின் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் போனதும், அவனும் அக்கம்பக்கத்து ஆண்களும் ஒன்றுதிரண்டு தாண் கோத்திரத்தாரைத் துரத்திக்கொண்டு போய், 23  சத்தமாக அவர்களைக் கூப்பிட்டார்கள். தாண் கோத்திரத்தார் திரும்பிப் பார்த்து, “என்ன பிரச்சினை? ஏன் எல்லாரும் திரண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று மீகாவிடம் கேட்டார்கள். 24  அதற்கு அவன், “நான் உண்டாக்கிய தெய்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், என்னுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு போகிறீர்கள். எனக்கு வேறென்ன இருக்கிறது? செய்வதெல்லாம் செய்துவிட்டு, ‘உனக்கு என்ன பிரச்சினை’ என்று கேட்கிறீர்களா?” என்றான். 25  அதற்கு தாண் கோத்திரத்தார், “சும்மா சத்தம் போடாதே. சத்தம் போட்டால், எங்கள் ஆட்கள் ஆத்திரத்தில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். 26  பின்பு, தாண் கோத்திரத்தார் தங்கள் வழியே போனார்கள். அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று தெரிந்தவுடன் மீகா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனான். 27  மீகா செய்து வைத்திருந்த பொருள்களையும் அவனுடைய பூசாரியையும் தாண் கோத்திரத்தார் லாயீசுக்குக்+ கொண்டுபோனார்கள். அங்கே, தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்துவந்த ஜனங்களை+ வாளால் தாக்கி அந்த நகரத்தைச் சுட்டெரித்தார்கள். 28  அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஏனென்றால், அந்த நகரம் சீதோனிலிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தது. அதோடு, அவர்கள் யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்துவந்தார்கள். அந்த நகரம் பெத்-ரேகோபைச்+ சேர்ந்த சமவெளியில் இருந்தது. தாண் கோத்திரத்தார் அதைத் திரும்பவும் கட்டி அதில் குடியேறினார்கள். 29  அதோடு, இஸ்ரவேலின் மகனும் தங்களுடைய மூதாதையுமாகிய தாணின்+ நினைவாக, அந்த நகரத்துக்கு தாண்+ என்று பெயர் வைத்தார்கள். முன்பு அது லாயீஸ் என்று அழைக்கப்பட்டது.+ 30  அதன்பின் தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை+ அங்கே வைத்தார்கள். அந்தத் தேசத்தார் சிறைபிடிக்கப்பட்ட நாள்வரை, மோசேயின் மகனாகிய கெர்சோமின்+ வம்சத்தில் வந்த யோனத்தானும்+ அவனுடைய மகன்களும் அவர்களுக்குப் பூசாரிகளாக இருந்தார்கள். 31  தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை அங்கேயே வைத்துக்கொண்டார்கள். உண்மைக் கடவுளின் கூடாரம் சீலோவில்+ இருந்த காலம் முழுவதும் அந்தச் சிலை அங்கே இருந்தது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உச்சரிப்பை.”
அர்த்தம், “தாணின் முகாம்.”
வே.வா., “தகப்பனாகவும்.”