நியாயாதிபதிகள் 19:1-30

  • கிபியாவில் பென்யமீனியர்கள் பாலியல் குற்றம் செய்கிறார்கள் (1-30)

19  அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை.+ எப்பிராயீம் மலைப்பகுதியில்+ உள்ள ஓர் ஒதுக்குப்புறத்தில் ஒரு லேவியன் வாழ்ந்துவந்தான். யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த ஓர் இளம் பெண்ணை அவன் கூட்டிக்கொண்டு வந்து தனக்கு மறுமனைவியாக வைத்துக்கொண்டான்.  ஆனால் அவள் அவனுக்குத் துரோகம் செய்துவிட்டு, அவனிடமிருந்து பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லகேமில் இருந்த தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குப் போய்விட்டாள். நான்கு மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தாள்.  அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவதற்காக அந்த லேவியன் இரண்டு கழுதைகளோடும் தன்னுடைய வேலைக்காரனோடும் கிளம்பிப் போனான். அங்கே போய்ச் சேர்ந்ததும், அவள் அவனை வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனாள். அவனைப் பார்த்தவுடன் அவனுடைய மாமனாருக்கு ஒரே சந்தோஷம்.  அதனால், தன்னோடு மூன்று நாட்கள் தங்கச் சொல்லி அவனை அவர் வற்புறுத்தினார். அந்த மூன்று நாட்களும் அவர்கள் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். அவன் அங்கேயே தங்கினான்.  நான்காம் நாள் விடியற்காலையிலேயே அவர்கள் எழுந்து புறப்படத் தயாரானார்கள். அப்போது மாமனார் தன்னுடைய மருமகனிடம், “ஏதாவது சாப்பிட்டுவிட்டுத் தெம்பாகப் புறப்படுங்கள்” என்று சொன்னார்.  அதனால் அவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டார்கள், குடித்தார்கள். பின்பு, மாமனார் தன்னுடைய மருமகனிடம், “தயவுசெய்து இன்றைக்கு ராத்திரியும் சந்தோஷமாக இங்கேயே தங்குங்கள்” என்று சொன்னார்.  காலையில் அவன் புறப்படத் தயாரானபோது, அவனுடைய மாமனார் திரும்பத் திரும்பக் கெஞ்சினார். அதனால், அன்றைக்கு ராத்திரியும் அங்கேயே தங்கினான்.  ஐந்தாம் நாள் விடியற்காலையிலேயே எழுந்து அவன் புறப்படத் தயாரானபோது, அவனுடைய மாமனார் அவனிடம், “தயவுசெய்து ஏதாவது சாப்பிட்டுவிட்டுத் தெம்பாகப் போங்கள்” என்று சொன்னார். அவர்களும் சாயங்காலம்வரை அங்கேயே இருந்தார்கள். இரண்டு பேரும் சாப்பிட்டுக்கொண்டு பொழுதைக் கழித்தார்கள்.  பின்பு, அவன் எழுந்து தன்னுடைய மறுமனைவியையும் வேலைக்காரனையும் கூட்டிக்கொண்டு புறப்படத் தயாரானபோது, அவனுடைய மாமனார் அவனிடம், “பாருங்கள், பொழுது சாயப்போகிறது. தயவுசெய்து இன்றைக்கு ராத்திரியும் இங்கேயே தங்குங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். தயவுசெய்து இந்த ராத்திரியும் சந்தோஷமாக இங்கேயே தங்குங்கள். நாளைக்கு விடிந்தவுடன் எழுந்து உங்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போகலாம்” என்று சொன்னார். 10  ஆனால், அந்த ராத்திரியும் அங்கேயே தங்க அவன் விரும்பவில்லை. அதனால் எழுந்து புறப்பட்டான். சேணம்* வைத்த இரண்டு கழுதைகளோடும் தன் மறுமனைவியோடும் வேலைக்காரனோடும் எபூசுவரை, அதாவது எருசலேம்வரை,+ போனான். 11  அவர்கள் எபூசுவை நெருங்கியபோது, பொழுது சாய ஆரம்பித்துவிட்டது. அதனால் அந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானிடம், “எபூசியர்களுடைய இந்த நகரத்திலேயே ராத்திரி தங்கிவிடலாமா?” என்று கேட்டான். 12  அதற்கு அவனுடைய எஜமான், “இவர்கள் இஸ்ரவேலர்கள் கிடையாது, அன்னியர்கள். அதனால், இவர்களுடைய நகரத்தில் நாம் தங்கக் கூடாது. கிபியாவரை+ போகலாம்” என்று சொன்னான். 13  அதன்பின், “வா, நாம் கிபியாவுக்கோ ராமாவுக்கோ+ போய்ச் சேரலாம்; அந்த இடங்கள் ஒன்றில் ராத்திரி தங்கலாம்” என்று சொன்னான். 14  அதனால், அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். பென்யமீனியர்களுக்குச் சொந்தமான கிபியாவை அவர்கள் நெருங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது. 15  அவர்கள் தங்களுடைய பயணத்தை நிறுத்திவிட்டு, ராத்திரி தங்குவதற்காக கிபியாவுக்குள் போனார்கள். அங்கே போனதும் அந்த நகரத்தின் பொது சதுக்கத்தில் உட்கார்ந்தார்கள். ஆனால், ராத்திரி தங்குவதற்காக யாருமே அவர்களை வீட்டுக்குக் கூப்பிடவில்லை.+ 16  பெரியவர் ஒருவர் சாயங்காலம்வரை வயலில் வேலை செய்துவிட்டு அந்தப் பக்கம் வந்தார். அவர் எப்பிராயீம் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்.+ கொஞ்சக் காலம் கிபியாவில் தங்கியிருந்தார். ஆனால், அந்த நகரத்தில் இருந்தவர்கள் பென்யமீன் கோத்திரத்தார்.+ 17  அவர் பொது சதுக்கத்தில் உட்கார்ந்திருந்த லேவியனைப் பார்த்து, “எங்கிருந்து வருகிறாய், எங்கே போக வேண்டும்?” என்று கேட்டார். 18  அதற்கு அவன், “யூதாவிலுள்ள பெத்லகேமிலிருந்து நாங்கள் வருகிறோம். எப்பிராயீம் மலைப்பகுதியில் இருக்கிற ஒதுக்குப்புறமான ஊருக்குப் போகிறோம். அதுதான் என்னுடைய ஊர். நான் யூதாவிலுள்ள பெத்லகேமுக்குப் போயிருந்தேன்,+ இப்போது யெகோவாவின் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன்.* ஆனால், இங்கே யாரும் என்னை வீட்டுக்குக் கூப்பிடவில்லை. 19  கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலையும் தீவனத்தையும்+ நாங்கள் வைத்திருக்கிறோம். எனக்கும் இவளுக்கும் என் வேலைக்காரனுக்கும் தேவையான ரொட்டியும்+ திராட்சமதுவும்கூட வைத்திருக்கிறோம். எல்லாமே எங்களிடம் இருக்கிறது” என்று சொன்னான். 20  அதற்கு அந்தப் பெரியவர், “என்னுடைய வீட்டில் வந்து தங்குங்கள்!* உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன். இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் ராத்திரி தங்காதீர்கள்” என்று சொல்லி, 21  அவனைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார். பின்பு, அவனுடைய கழுதைகளுக்குத் தீவனம் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய பாதங்களைக் கழுவிவிட்டு சாப்பிட்டார்கள், குடித்தார்கள். 22  அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த நகரத்திலிருந்த போக்கிரிகள் சிலர் அவருடைய வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைப் பலமாகத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான பெரியவரிடம், “உன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிற ஆளை வெளியே கொண்டுவா, நாங்கள் அவனோடு உறவுகொள்ள வேண்டும்”+ என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். 23  அந்த வீட்டின் சொந்தக்காரர் வெளியே போய், “என் சகோதரர்களே, வேண்டாம்! அட்டூழியம் செய்யாதீர்கள்! அவர் என் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருக்கிறார். இந்தக் கேவலமான காரியத்தைத் தயவுசெய்து செய்யாதீர்கள். 24  இதோ, கன்னிப்பெண்ணான என் மகளும் என் வீட்டுக்கு வந்திருக்கிறவரின் மறுமனைவியும் இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவருகிறேன், வேண்டுமானால் அவர்களை உங்கள் இஷ்டம் போல நடத்துங்கள்.+ ஆனால், அந்த மனுஷனிடம் மட்டும் கேவலமாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார். 25  அந்த ஆண்கள் அவருடைய பேச்சைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அதனால், அந்த லேவியன் தன்னுடைய மறுமனைவியைப்+ பிடித்து வெளியே கொண்டுவந்து விட்டான். அவர்கள் ராத்திரியிலிருந்து காலைவரை அவளைப் பலாத்காரம் செய்து, கொடுமைப்படுத்தினார்கள். பொழுது விடிந்ததும் அவளை அனுப்பிவிட்டார்கள். 26  விடியற்காலையிலேயே அந்தப் பெண் தன்னுடைய புருஷன் தங்கியிருந்த வீட்டின் வாசற்படிவரை வந்து கீழே விழுந்துகிடந்தாள். வெளிச்சம் வரும்வரை அப்படியே கிடந்தாள். 27  அவளுடைய புருஷன் காலையில் எழுந்து, அங்கிருந்து கிளம்புவதற்காகக் கதவுகளைத் திறந்தான். அப்போது, அவனுடைய மறுமனைவி கைகளைக் கதவுநிலையில் போட்டபடி வாசற்படியில் விழுந்து கிடந்தாள்! 28  உடனே அவன், “எழுந்திரு, போகலாம்” என்றான். ஆனால் பதிலே வரவில்லை. அதனால், அவன் அவளைக் கழுதையின் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டான். 29  வீட்டுக்கு வந்ததும் ஒரு வெட்டுக்கத்தியை எடுத்து தன்னுடைய மறுமனைவியை 12 துண்டுகளாக வெட்டி இஸ்ரவேலிலுள்ள ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒரு துண்டை அனுப்பி வைத்தான். 30  அதைப் பார்த்த எல்லாரும், “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து இப்படி ஒரு காரியம் நடந்ததே இல்லை, இப்படி ஒன்றை யாரும் பார்த்ததே இல்லை. அதனால், இதைப் பற்றி நன்றாக யோசித்துவிட்டு, கூடிப் பேசி,+ என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.

அடிக்குறிப்புகள்

சேணம் என்பது மிருகங்களின் முதுகில் உட்கார்ந்து சவாரி செய்வதற்குப் போடப்படும் தோலினால் ஆன இருக்கை.
அல்லது, “யெகோவாவின் வீட்டில் சேவை செய்துகொண்டிருக்கிறேன்.”
நே.மொ., “உங்களுக்குச் சமாதானம்!”