நியாயாதிபதிகள் 4:1-24

  • கானானிய ராஜாவான யாபீன் இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்குகிறான் (1-3)

  • தீர்க்கதரிசனம் சொல்கிறவளான தெபொராளும் நியாயாதிபதியான பாராக்கும் (4-16)

  • படைத் தளபதியான சிசெராவை யாகேல் கொன்றுபோடுகிறாள் (17-24)

4  ஆனால் ஏகூத் இறந்த பின்பு, மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+  அதனால் யெகோவா, கானானின் ராஜாவாகிய யாபீனின் கையில் இஸ்ரவேலர்களைக் கொடுத்துவிட்டார்.*+ அவன் ஆத்சோரில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய படைத் தளபதியின் பெயர் சிசெரா, இவன் அரோசேத்-கோயிமில்+ வாழ்ந்துவந்தான்.  இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட 900 போர் ரதங்களை+ யாபீன் வைத்திருந்தான். அவன் 20 வருஷங்களாக இஸ்ரவேலர்களை ரொம்பவே அடக்கி ஒடுக்கினான்.+ அதனால், அவர்கள் யெகோவாவிடம் கதறி அழுதார்கள்.+  அந்தக் காலகட்டத்தில், லபிதோத்தின் மனைவியும் தீர்க்கதரிசனம் சொல்கிறவளுமான+ தெபொராள் இஸ்ரவேலர்களுக்குக் கடவுளுடைய தீர்ப்புகளைச் சொல்லி வந்தாள்.  தெபொராளுடைய பேரீச்ச மரத்தின் கீழே அவள் உட்கார்ந்திருந்தாள். அந்த மரம் எப்பிராயீம் மலைப்பகுதியில் ராமாவுக்கும்+ பெத்தேலுக்கும்+ இடையில் இருந்தது. கடவுளுடைய தீர்ப்புகளைக் கேட்பதற்காக இஸ்ரவேலர்கள் அவளிடம் வந்தார்கள்.  அவள் கேதேஸ்-நப்தலியில்+ வாழும் அபினோகாமின் மகன் பாராக்கை+ வரச் சொல்லி, “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களிடம், ‘நப்தலி, செபுலோன் கோத்திரங்களைச் சேர்ந்த 10,000 வீரர்களைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்கு அணிவகுத்துக்கொண்டு போ’ என்றும்,  யாபீனின் படைத் தளபதியாகிய சிசெராவை அவனுடைய போர் ரதங்களோடும் படைவீரர்களோடும் கீசோன் நீரோடைக்கு*+ வரவைத்து அவனை உன் கையில் கொடுப்பேன்’+ என்றும் சொல்லவில்லையா?” என்றாள்.  அதற்கு பாராக், “நீங்கள் என்னோடு வந்தால்தான் நான் போவேன், இல்லாவிட்டால் போக மாட்டேன்” என்று சொன்னார்.  அப்போது அவள், “நான் கண்டிப்பாக உங்களோடு வருவேன். ஆனால், இந்தப் போரில் உங்களுக்குப் புகழ் கிடைக்காது, ஒரு பெண்ணின் கையால்தான் சிசெராவை யெகோவா சாகடிப்பார்”+ என்று சொன்னாள். பின்பு, தெபொராள் எழுந்து பாராக்குடன் கேதேசுக்குப்+ போனாள். 10  செபுலோன், நப்தலி கோத்திரங்களைச்+ சேர்ந்த வீரர்களை கேதேசுக்கு பாராக் வர வைத்தார். 10,000 வீரர்கள் அவருக்குப் பின்னால் போனார்கள். தெபொராளும் அவரோடு போனாள். 11  கேனியரான ஹேபெர் என்பவர் மற்ற கேனியர்களிடமிருந்து+ பிரிந்து, கேதேசில் சானானிமில் உள்ள பெரிய மரத்தின் பக்கத்தில் கூடாரம் போட்டிருந்தார். கேனியர்கள், மோசேயின் மாமனாராகிய ஒபாபின்+ வம்சத்தார். 12  தாபோர் மலைக்கு அபினோகாமின் மகனாகிய பாராக் அணிவகுத்து வந்திருக்கிறார் என்ற செய்தி சிசெராவுக்குக் கிடைத்தது.+ 13  உடனே சிசெரா, இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட 900 போர் ரதங்களோடும், அரோசேத்-கோயிமில் தன்னுடன் இருந்த எல்லா படைவீரர்களோடும் கீசோன் நீரோடைக்கு+ வந்தான். 14  அப்போது தெபொராள் பாராக்கிடம், “புறப்பட்டுப் போங்கள். இன்றைக்கு சிசெராவை யெகோவா உங்கள் கையில் கொடுப்பார். யெகோவா உங்கள் முன்னால் போகிறார் இல்லையா?” என்றாள். உடனே, பாராக்கும் அவருக்குப் பின்னால் 10,000 வீரர்களும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். 15  அப்போது, சிசெராவையும் அவனுடைய போர் ரதங்களையும் படைவீரர்களையும் பாராக்கின் வாளுக்கு முன்னால் யெகோவா குழம்பிப்போக வைத்தார்.+ கடைசியில், சிசெரா தன்னுடைய ரதத்தைவிட்டு இறங்கி தப்பியோடினான். 16  அவனுடைய போர் ரதங்களையும் படைவீரர்களையும் பாராக் துரத்திக்கொண்டு அரோசேத்-கோயிம்வரை போனார். இப்படி, சிசெராவின் படைவீரர்கள் எல்லாரும் வாளுக்குப் பலியானார்கள். அவர்களில் ஒருவன்கூட தப்பிக்கவில்லை.+ 17  சிசெரா மட்டும் தப்பியோடி, கேனியரான ஹேபெரின்+ மனைவி யாகேலின்+ கூடாரத்துக்கு வந்தான். ஏனென்றால், ஆத்சோரின் ராஜாவாகிய யாபீனுக்கும்+ கேனியரான ஹேபெரின் குடும்பத்தாருக்கும் சுமுகமான உறவு இருந்தது. 18  யாகேல் தன்னுடைய கூடாரத்துக்கு வெளியே வந்து சிசெராவைப் பார்த்து, “உள்ளே வாருங்கள், என் எஜமானே, உள்ளே வாருங்கள். பயப்படாதீர்கள்” என்று சொன்னாள். அதனால், அவன் அவளுடைய கூடாரத்துக்குள் போனான். அப்போது அவள் ஒரு போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டாள். 19  அவன் அவளிடம், “தாகமாக இருக்கிறது, தயவுசெய்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்டான். உடனே, அவள் தோல் பையைத் திறந்து பாலை ஊற்றிக் கொடுத்தாள்.+ பின்பு, மறுபடியும் அவனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டாள். 20  அவன் அவளிடம், “நீ கூடார வாசலிலேயே நின்றுகொள். யாராவது உன்னிடம் வந்து, ‘இங்கே ஒரு ஆள் வந்தானா?’ என்று கேட்டால், ‘இல்லை!’ என்று சொல்” என்றான். 21  பின்பு, சிசெரா களைப்பில் நன்றாகத் தூங்கிவிட்டான். அப்போது, ஹேபெரின் மனைவியாகிய யாகேல் கூடார ஆணியையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் அவன் பக்கத்தில் வந்து, அந்த ஆணியை அவனுடைய நெற்றிப்பொட்டில் ஓங்கி அடித்தாள். அது தரைவரை இறங்கியது, அவன் அந்த இடத்திலேயே செத்துப்போனான்.+ 22  அவனைத் துரத்திக்கொண்டு வந்த பாராக் அங்கு வந்துசேர்ந்தார். அப்போது யாகேல் வெளியே வந்து அவரைப் பார்த்து, “வாருங்கள், நீங்கள் தேடுகிற ஆளைக் காட்டுகிறேன்” என்று சொன்னாள். அவர் அவளுடன் கூடாரத்துக்குள் போய்ப் பார்த்தபோது, கூடார ஆணி நெற்றிப்பொட்டில் அடிக்கப்பட்ட நிலையில் சிசெரா செத்துக் கிடந்தான். 23  இப்படி, இஸ்ரவேலர்கள் கானானின் ராஜாவாகிய யாபீனை அடியோடு அடக்குவதற்கு அன்று கடவுள் உதவினார்.+ 24  கானானின் ராஜாவாகிய யாபீனுக்கு விரோதமாக இஸ்ரவேலர்களின் கை நாளுக்கு நாள் ஓங்கிக்கொண்டே வந்தது.+ கடைசியில், அவர்கள் அவனை அழித்துப்போட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “விற்றுப்போட்டார்.”
வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.”