பிரசங்கி 7:1-29

  • நல்ல பெயரும் இறந்த நாளும் (1-4)

  • ஞானமுள்ளவரின் கண்டிப்பு (5-7)

  • ஒரு செயலின் ஆரம்பத்தைவிட முடிவு நல்லது (8-10)

  • ஞானத்தால் கிடைக்கும் பயன் (11, 12)

  • சந்தோஷமான நாட்களும் கஷ்டமான நாட்களும் (13-15)

  • அளவுக்கு மிஞ்சி போகக்கூடாது (16-22)

  • பிரசங்கி கவனித்த விஷயங்கள் (23-29)

7  விலைமதிப்புள்ள எண்ணெயைவிட நல்ல பெயர் சிறந்தது.+ ஒருவருடைய பிறந்த நாளைவிட இறந்த நாள் நல்லது.  விருந்து வீட்டுக்குப் போவதைவிட துக்க வீட்டுக்குப் போவது நல்லது.+ ஏனென்றால், எல்லாருக்கும் சாவுதான் முடிவு; உயிரோடு இருப்பவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.  சிரிப்பதைவிட வருத்தமாக இருப்பது நல்லது.+ முகம் வாடினால் இதயம் பக்குவப்படும்.+  ஞானமுள்ளவரின் இதயம் துக்க வீட்டில் இருக்கும். ஆனால், முட்டாளின் இதயம் விருந்து* வீட்டில் இருக்கும்.+  முட்டாள்களின் பாடல்களைக் கேட்பதைவிட ஞானமுள்ளவரின் கண்டிப்பைக் கேட்பது நல்லது.+  பானைக்கு அடியில் எரிகிற முட்களின் சத்தத்தைப் போலத்தான் முட்டாளின் சிரிப்புச் சத்தமும் இருக்கிறது,+ இதுவும் வீண்தான்.  ஒடுக்குதல் ஞானமுள்ளவரைக்கூட பைத்தியக்காரத்தனமாக நடக்க வைக்கும். லஞ்சம் உள்ளத்தைக் கெடுக்கும்.+  ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது. பெருமையைவிட பொறுமை நல்லது.+  சட்டென்று கோபப்படாதே;+ முட்டாள்களின் நெஞ்சில்தான் கோபம் குடியிருக்கும்.*+ 10  “இந்தக் காலத்தைவிட அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று சொல்லாதே. அப்படிச் சொல்வது ஞானம் அல்ல.+ 11  சொத்துசுகத்தோடு ஞானமும் இருந்தால் நல்லது. உயிரோடு இருக்கிறவர்களுக்கு* ஞானம் பிரயோஜனமாக இருக்கும். 12  ஏனென்றால், பணம் பாதுகாப்பு தருவதுபோல்+ ஞானமும் பாதுகாப்பு தரும்.+ ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.+ 13  உண்மைக் கடவுளின் செயல்களை யோசித்துப் பாருங்கள். அவர் கோணலாக்கியதை யாரால் நேராக்க முடியும்?+ 14  சந்தோஷமான நாளில், அந்தச் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.+ ஆனால் கஷ்டமான நாளில், அந்த இரண்டு நாட்களையும் கடவுள்தான் அனுமதித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.+ எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று மனுஷர்கள் தெரிந்துகொள்ளாமல்*+ இருப்பதற்காகத்தான் அவர் அப்படிச் செய்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 15  வீணான இந்த வாழ்க்கையில்+ நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். நீதிமானாக இருந்தும் சீக்கிரத்தில் இறந்துபோகிறவனும் உண்டு,+ பொல்லாதவனாக இருந்தும் ரொம்பக் காலம் வாழ்கிறவனும் உண்டு.+ 16  உன்னைப் பெரிய நீதிமானாகவோ+ பெரிய ஞானியாகவோ+ காட்டிக்கொள்ளாதே, உன்னை நீயே ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?+ 17  நீ படுமோசமானவனாகவோ படுமுட்டாளாகவோ நடந்துகொள்ளாதே.+ உன் காலத்துக்கு முன்பே நீ ஏன் சாக வேண்டும்?+ 18  முதலாவதாகச் சொல்லப்பட்ட ஆலோசனையை* கேட்டு நடந்து, இரண்டாவதாகச் சொல்லப்பட்ட ஆலோசனையையும்* விட்டுவிடாமல் இருப்பதுதான் மிகவும் நல்லது.+ கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் இந்த இரண்டையுமே செய்வான். 19  ஓர் ஊரிலுள்ள பத்துப் பலசாலிகளைவிட ஞானம் ஒரு ஞானியை அதிக பலசாலியாக ஆக்கும்.+ 20  பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை.+ 21  மற்றவர்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே.+ இல்லாவிட்டால், உன் வேலைக்காரன் உன்னைப் பற்றி மோசமாகப் பேசுவதைக்கூட நீ கேட்க வேண்டியிருக்கும். 22  நீயும்கூட பல தடவை மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசியிருக்கிறாய் என்பது உன் உள்ளத்துக்கு நன்றாகத் தெரியுமே.+ 23  இதையெல்லாம் நான் ஞானத்தோடு சீர்தூக்கிப் பார்த்தேன். “நான் ஞானி ஆவேன்” என்று சொன்னேன். ஆனால், அது முடியாத காரியமாகிவிட்டது. 24  இதுவரை நடந்திருப்பதெல்லாம் அறிவுக்கு எட்டாதவை, மிக மிக ஆழமானவை. இதை யாரால்தான் புரிந்துகொள்ள முடியும்?+ 25  ஞானத்தையும் ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னால் இருக்கிற காரணங்களையும் பற்றித் தேடிப் பார்ப்பதற்கும் அலசி ஆராய்வதற்கும் நான் கவனம் செலுத்தினேன். முட்டாள்தனம் எவ்வளவு பொல்லாதது என்பதையும், பைத்தியக்காரத்தனம் எவ்வளவு மடத்தனமானது என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.+ 26  அப்போது, இதைத் தெரிந்துகொண்டேன்: ஒழுக்கங்கெட்ட பெண் மரணத்தைவிட கொடூரமானவள். வேடன் விரிக்கிற வலையைப் போல அவள் இருக்கிறாள்; அவளுடைய இதயம் மீன்பிடிக்கிற வலையைப் போல இருக்கிறது, அவளுடைய கைகள் கைதிகளைக் கட்டிவைக்கும் சங்கிலிகளைப் போல இருக்கின்றன. உண்மைக் கடவுளுக்குப் பிரியமாக நடக்கிறவன் அவளிடமிருந்து தப்பித்துக்கொள்வான்.+ ஆனால், பாவி அவளுடைய வலையில் சிக்கிக்கொள்வான்.+ 27  “இதோ, இதைத்தான் நான் தெரிந்துகொண்டேன்” என்று பிரசங்கி+ சொல்கிறார். “ஒரு முடிவுக்கு வருவதற்காக ஒவ்வொரு விஷயமாய் ஆராய்ச்சி செய்தேன். 28  அப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தும், என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆயிரம் பேரில் ஒருவனை* பார்த்தேன், ஆனால் ஒருத்தியைக்கூட பார்க்கவில்லை. 29  ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டேன்: உண்மைக் கடவுள் மனுஷர்களை நேர்மையான ஆட்களாகத்தான் படைத்தார்,+ அவர்கள்தான் நிறைய திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொண்டாட்டமான.”
அல்லது, “இது முட்டாளின் அடையாளம்.”
நே.மொ., “சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு.”
வே.வா., “கண்டுபிடிக்காமல்.”
இது 17-வது வசனத்தில் சொல்லப்பட்ட ஆலோசனையைக் குறிக்கிறது.
இது 16-வது வசனத்தில் சொல்லப்பட்ட ஆலோசனையைக் குறிக்கிறது.
வே.வா., “நேர்மையான ஒருவனை.”