பிலிப்பியருக்குக் கடிதம் 1:1-30

  • வாழ்த்துக்கள் (1, 2)

  • கடவுளுக்கு நன்றி; பவுலின் ஜெபம் (3-11)

  • பிரச்சினைகள் மத்தியிலும் நல்ல செய்தி பரவுகிறது (12-20)

  • வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், செத்தாலும் லாபம்தான் (21-26)

  • கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக இருங்கள் (27-30)

1  பிலிப்பி நகரத்தில்,+ கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாருக்கும், கண்காணிகளுக்கும், உதவி ஊழியர்களுக்கும்+ கிறிஸ்து இயேசுவின் அடிமைகளான பவுலும் தீமோத்தேயுவும் எழுதுவது:  பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.  என் மன்றாட்டுகளில் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.  நீங்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்ட நாள்முதல் இந்த நாள்வரை அதை அறிவிக்கும் வேலைக்காக உங்களுடைய பங்கைச் செய்திருக்கிறீர்கள்.  அதனால், உங்கள் எல்லாருக்காகவும் நான் எப்போதும் சந்தோஷத்தோடு மன்றாடுகிறேன்.+  உங்களில் இந்த நல்ல வேலையை ஆரம்பித்த கடவுள் அதை கிறிஸ்து இயேசுவின் நாள் வருவதற்குள்+ செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.+  உங்கள் எல்லாரையும் பற்றி நான் இப்படி நினைப்பது முற்றிலும் சரிதான். ஏனென்றால், நான் கைதியாக+ இருந்தபோதும் சரி, நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற முயற்சி செய்தபோதும்+ சரி, நீங்கள் எல்லாரும் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். என்னோடு சேர்ந்து நீங்களும் கடவுளுடைய அளவற்ற கருணையிலிருந்து நன்மை அடைந்தீர்கள். அதனால், நீங்கள் என் இதயத்தில் இடம்பிடித்துவிட்டீர்கள்.  கிறிஸ்து இயேசு காட்டுகிற அதே கனிவான பாசத்தோடு உங்கள் எல்லாரையும் வந்து பார்க்க நான் மிகவும் ஏங்குகிறேன், இதற்குக் கடவுள்தான் சாட்சி.  உங்களுடைய அன்பு, திருத்தமான அறிவோடும்+ முழுமையான பகுத்தறிவோடும்+ அதிகமதிகமாகப் பெருக வேண்டும்+ என்றும், 10  மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்+ என்றும் தொடர்ந்து ஜெபம் செய்கிறேன். கிறிஸ்துவின் நாள் வரும்வரை நீங்கள் குற்றமற்றவர்களாகவும், மற்றவர்களுடைய விசுவாசத்தைக் குலைக்காதவர்களாகவும்+ இருப்பதற்காக இப்படி ஜெபம் செய்கிறேன். 11  இயேசு கிறிஸ்துவின் உதவியோடு நீதியான செயல்களை+ ஏராளமாகச் செய்து* கடவுளுக்கு மகிமையையும் புகழையும் சேர்ப்பவர்களாக இருப்பதற்காகவும் இப்படி ஜெபம் செய்கிறேன். 12  சகோதரர்களே, என்னுடைய சூழ்நிலை நல்ல செய்தி பரவுவதற்கு உதவியாக இருந்ததே தவிர, தடையாக இருக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். 13  நான் கிறிஸ்துவுக்காகத்தான் கைதியாக+ இருக்கிறேன் என்பது ரோம அரசனின் மெய்க்காவலர்கள் அனைவருக்கும் மற்ற எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.+ 14  நான் கைதியாக இருப்பதைப் பார்த்து, நம் எஜமானுக்கு ஊழியம் செய்கிற சகோதரர்களில் பெரும்பாலோருக்கு உறுதியான நம்பிக்கை கிடைத்திருக்கிறது. அதனால், கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் இன்னும் தைரியமாக அறிவித்து வருகிறார்கள். 15  உண்மைதான், ஒரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் பொறாமையாலும் போட்டியாலும் கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கித்து வருகிறார்கள், ஆனால் இன்னொரு தொகுதியைச் சேர்ந்தவர்கள் நல்ல எண்ணத்தால் பிரசங்கித்து வருகிறார்கள். 16  இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் அன்பால் தூண்டப்பட்டு கிறிஸ்துவைப் பற்றி அறிவித்து வருகிறார்கள். நல்ல செய்திக்காக வழக்காட நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பது இவர்களுக்குத் தெரியும்.+ 17  ஆனால், முதல் தொகுதியைச் சேர்ந்தவர்கள் பகை உணர்ச்சியால் பிரசங்கித்து வருகிறார்கள், நல்ல நோக்கத்தால் அல்ல; கைதியாக இருக்கிற எனக்கு இன்னும் கஷ்டம் கொடுக்க வேண்டும் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். 18  இதன் விளைவு என்ன? அவர்கள் போலித்தனமாகப் பிரசங்கித்து வந்தாலும் சரி, உண்மையாகப் பிரசங்கித்து வந்தாலும் சரி, எல்லா விதத்திலும் கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்படுகிறது. இதை நினைத்து சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பேன். 19  ஏனென்றால், உங்கள் மன்றாட்டினாலும்,+ இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சக்தியின் உதவியினாலும்+ நான் மீட்புப் பெறுவேன் என்று எனக்குத் தெரியும். 20  இதுவே என்னுடைய பேராவலாகவும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. நான் எந்த விதத்திலும் வெட்கப்பட்டுப்போக மாட்டேன். வாழ்வானாலும் சரி, சாவானாலும் சரி,+ எந்தத் தயக்கமும் இல்லாமல் பிரசங்கிப்பேன். அதனால், எப்போதும்போல் இப்போதும் கிறிஸ்து என்னுடைய உடலால் மகிமைப்படுவார். 21  நான் வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன்,+ செத்தாலும் அது எனக்கு லாபம்தான்.+ 22  ஆனாலும், நான் இந்த உடலிலேயே வாழ்ந்து வந்தால், என்னுடைய ஊழியம் பலன் தரும். ஆனால், எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறேன் என்று நான் சொல்ல விரும்பவில்லை. 23  இந்த இரண்டுக்கும் நடுவில் நான் திண்டாடுகிறேன்; ஆனால், கிறிஸ்துவோடு இருப்பதற்காக விடுதலை பெற வேண்டுமென்று விரும்புகிறேன்,+ ஏனென்றால் இதுதான் மேலானது.+ 24  என்றாலும், உங்களுக்காக நான் இந்த உடலிலேயே இருப்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. 25  இதை நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் முன்னேற்றம் அடைவதற்காகவும், விசுவாசத்தால் வரும் சந்தோஷத்தை அனுபவிப்பதற்காகவும் நான் உங்கள் எல்லாரோடும் தொடர்ந்து இருப்பேன். 26  நான் மறுபடியும் உங்களிடம் வரப்போவதால், கிறிஸ்து இயேசுவின் சீஷர்களான நீங்கள் அதிகமாகச் சந்தோஷப்படுவீர்கள். 27  ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள், நீங்கள் கிறிஸ்துவின் நல்ல செய்திக்குத் தகுதியானவர்களாக* நடந்துகொள்ளுங்கள்.+ உங்களைப் பார்க்க நான் அங்கே வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நீங்கள் ஒரே சிந்தையில் உறுதியாக நிற்கிறீர்கள் என்றும், நல்ல செய்தியின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்துக்காக ஒரே உள்ளத்துடன்*+ தோளோடு தோள் சேர்ந்து பாடுபடுகிறீர்கள் என்றும் நான் கேள்விப்பட வேண்டும். 28  எதிரிகளைப் பார்த்து துளிகூட பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் கேள்விப்பட வேண்டும். இது அவர்களுடைய அழிவுக்கும்+ உங்களுடைய மீட்புக்கும்+ அத்தாட்சியாக இருக்கும்; இந்த அத்தாட்சி கடவுளிடமிருந்து வந்ததாக இருக்கும். 29  கிறிஸ்துமேல் விசுவாசம் வைப்பதற்கு மட்டுமல்ல, அவருக்காகப் பாடுகளை அனுபவிப்பதற்கும் உங்களுக்குப் பாக்கியம் கிடைத்திருக்கிறது.+ 30  முன்பு எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள்,+ இப்போது எனக்கிருக்கிற போராட்டத்தைப் பற்றியும் கேள்விப்படுகிறீர்கள்; அதே போன்ற போராட்டம் உங்களுக்கும் இருக்கிறது.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நீதியான கனிகளால் நிறைந்து.”
வே.வா., “தகுதியான குடிமக்களாக.”
வே.வா., “ஒன்றுபட்டு.”