மாற்கு எழுதியது 1:1-45

  • யோவான் ஸ்நானகர் பிரசங்கிக்கிறார் (1-8)

  • இயேசுவின் ஞானஸ்நானம் (9-11)

  • சாத்தானால் இயேசு சோதிக்கப்படுகிறார் (12, 13)

  • கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (14, 15)

  • முதல் சீஷர்களை அழைக்கிறார் (16-20)

  • பேயைத் துரத்துகிறார் (21-28)

  • கப்பர்நகூமில் பலரைக் குணமாக்குகிறார் (29-34)

  • தனிமையான இடத்தில் ஜெபம் செய்கிறார் (35-39)

  • தொழுநோயாளியைக் குணமாக்குகிறார் (40-45)

1  கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியின் ஆரம்பம்:  ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில், “(இதோ! என்னுடைய தூதுவரை உனக்கு முன்னால் அனுப்புகிறேன், அவர் உன் பாதையைத் தயார்படுத்துவார்.)+  ‘யெகோவாவுக்கு* வழியைத் தயார்படுத்துங்கள், அவருக்காகப் பாதைகளைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்கிறார்!” என்று எழுதப்பட்டிருக்கிறது.  அதன்படியே யோவான் ஸ்நானகர்,* பாவ மன்னிப்புக்காக மனம் திருந்த வேண்டுமென்றும், அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றும் வனாந்தரத்தில் பிரசங்கித்துவந்தார்.+  அதனால், யூதேயாவிலும் எருசலேமிலும் குடியிருந்த மக்கள் எல்லாரும் அவரிடம் போனார்கள்; தாங்கள் செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம்* பெற்றார்கள்.+  யோவான் ஒட்டக ரோமத்தால் செய்யப்பட்ட உடையைப் போட்டிருந்தார், தோல் வாரை இடுப்பில் கட்டியிருந்தார்;+ வெட்டுக்கிளிகளையும் காட்டுத் தேனையும் சாப்பிட்டுவந்தார்.+  அவர் மக்களிடம், “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்பு வரப்போகிறார்; அவருடைய செருப்புகளின் வார்களைக் குனிந்து அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.+  நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்தேன், ஆனால் அவர் கடவுளுடைய சக்தியால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்”+ என்று பிரசங்கித்துவந்தார்.  அந்த நாட்களில், கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து இயேசு வந்து, யோர்தான் ஆற்றில் யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றார்.+ 10  இயேசு தண்ணீருக்குள்ளிருந்து வெளியே வந்தவுடன், வானம் திறப்பதையும் கடவுளுடைய சக்தி புறாவைப் போல் தன்மேல் இறங்குவதையும் பார்த்தார்.+ 11  அப்போது, “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 12  உடனே, வனாந்தரத்துக்குப் போகும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டியது. 13  அவர் 40 நாட்கள் வனாந்தரத்தில் இருந்தபோது சாத்தான் அவரைச் சோதித்தான்.+ அங்கே காட்டு மிருகங்கள் இருந்தன. ஆனால், தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை* செய்தார்கள்.+ 14  யோவான் கைது செய்யப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவுக்குப்+ போய் கடவுளைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்.+ 15  “குறித்த காலம் வந்துவிட்டது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது; மக்களே, மனம் திருந்துங்கள்,+ நல்ல செய்தியில் விசுவாசம் வையுங்கள்” என்று சொன்னார். 16  அவர் கலிலேயா கடலோரமாக நடந்துபோனபோது, சீமோனையும் சீமோனுடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் தங்கள் வலைகளை வீசிக்கொண்டிருந்தார்கள்.+ ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+ 17  இயேசு அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்”+ என்று சொன்னார். 18  அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.+ 19  அவர் கொஞ்சத் தூரம் போன பின்பு, செபெதேயுவின் மகன்களான யாக்கோபையும் யோவானையும் பார்த்தார்; அவர்கள் தங்களுடைய படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.+ 20  உடனே அவர்களையும் கூப்பிட்டார்; அப்போது, அவர்கள் தங்களுடைய அப்பா செபெதேயுவைக் கூலியாட்களோடு படகில் விட்டுவிட்டு, அவர் பின்னால் போனார்கள். 21  அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். ஓய்வுநாள் வந்ததும் அவர் ஜெபக்கூடத்துக்குப் போய்க் கற்பிக்க ஆரம்பித்தார்.+ 22  அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்; ஏனென்றால், அவர் வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராகக் கற்பித்தார்.+ 23  அப்போது அந்த ஜெபக்கூடத்தில், பேய் பிடித்த ஒருவன் இருந்தான். 24  அவன் அவரைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவே, உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?+ எங்களை ஒழித்துக்கட்டவா வந்தீர்கள்? நீங்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்!”+ என்று கத்தினான். 25  ஆனால் இயேசு, “பேசாதே, இவனைவிட்டு வெளியே போ!” என்று அதட்டினார். 26  அந்தப் பேய் அவனுக்கு வலிப்பு உண்டாக்கி, பயங்கரமாகக் கத்திக்கொண்டே அவனைவிட்டு வெளியே போனது. 27  அங்கே இருந்த எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டு, “இது என்ன? புதுவிதமாகக் கற்பிக்கிறாரே! அதிகாரத்தோடு பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவையும் கீழ்ப்படிகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 28  உடனடியாக, அவரைப் பற்றிய செய்தி கலிலேயா பகுதியெங்கும் நாலாபக்கங்களிலும் பரவியது. 29  அப்போது, அவர்கள் ஜெபக்கூடத்திலிருந்து புறப்பட்டு யாக்கோபோடும் யோவானோடும் சேர்ந்து சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குப் போனார்கள்.+ 30  அங்கே சீமோனின் மாமியார்+ காய்ச்சலில் படுத்துக்கிடந்தாள். அதைப் பற்றி அவரிடம் உடனடியாகச் சொன்னார்கள். 31  அவர் அவளுக்குப் பக்கத்தில் போய் அவளுடைய கையைப் பிடித்துத் தூக்கினார், உடனே காய்ச்சல் போய்விட்டது. அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். 32  சாயங்காலத்தில், சூரியன் மறைந்த பின்பு, எல்லா நோயாளிகளையும் பேய் பிடித்தவர்களையும் மக்கள் அவரிடம் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.+ 33  அந்த வீட்டு வாசலில் ஊரே திரண்டு வந்தது. 34  பலவிதமான நோய்களால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நிறைய பேரை அவர் குணமாக்கினார்,+ ஏராளமான பேய்களைத் துரத்தினார்; ஆனால், அவர்தான் கிறிஸ்து* என்று அந்தப் பேய்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர் அவற்றைப் பேசவிடவில்லை. 35  விடியற்காலையில், இன்னமும் இருட்டாக இருந்தபோதே, அவர் எழுந்து வெளியே போய்த் தனிமையான ஓர் இடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.+ 36  சீமோனும் அவரோடு இருந்தவர்களும் அவரைத் தேடிக்கொண்டு போனார்கள். 37  அவரைக் கண்டுபிடித்தபோது, “எல்லாரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 38  ஆனால் அவர், “பக்கத்திலுள்ள வேறு ஊர்களுக்குப் போகலாம், வாருங்கள்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும்; இதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 39  அதன்படியே, கலிலேயா முழுவதும் இருந்த ஜெபக்கூடங்களுக்குப் போய்ப் பிரசங்கித்தார், பேய்களையும் விரட்டினார்.+ 40  தொழுநோயாளி ஒருவன் அவரிடம் வந்து மண்டிபோட்டு, “உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்”+ என்று சொல்லிக் கெஞ்சினான். 41  அப்போது, அவர் மனம் உருகி, தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு”+ என்று சொன்னார். 42  உடனே தொழுநோய் மறைந்து, அவன் சுத்தமானான். 43  அதன் பின்பு அவனுக்குக் கண்டிப்புடன் கட்டளைகள் கொடுத்து, 44  “இதைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாதே, ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கைகளைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி உடனடியாக அவனை அனுப்பினார். 45  ஆனால், அந்த மனிதன் அங்கிருந்து புறப்பட்டுப் போய், அந்த விஷயத்தை எல்லாருக்கும் பரப்ப ஆரம்பித்தான்; அதனால் இயேசு எந்த நகரத்துக்குள்ளும் வெளிப்படையாகப் போக முடியவில்லை, ஒதுக்குப்புறமான இடங்களிலேயே தங்கியிருந்தார். அப்படியிருந்தும், அவரைப் பார்க்க எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.+

அடிக்குறிப்புகள்

இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
ஸ்நானகர் என்றால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்.
அதாவது, “முழுக்கு ஞானஸ்நானம்.”
வே.வா., “அங்கீகரிக்கிறேன்; உன்மேல் பிரியமாக இருக்கிறேன்.”
வே.வா., “உதவிகள்.”
அல்லது, “அவர் யார்.”