மாற்கு எழுதியது 14:1-72

  • இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (1, 2)

  • இயேசுவின் தலையில் வாசனை எண்ணெய் ஊற்றப்படுகிறது (3-9)

  • இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (10, 11)

  • கடைசி பஸ்கா (12-21)

  • எஜமானின் இரவு விருந்து (22-26)

  • தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (27-31)

  • கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (32-42)

  • இயேசு கைது செய்யப்படுகிறார் (43-52)

  • நியாயசங்கத்தில் விசாரணை (53-65)

  • இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்கிறார் (66-72)

14  பஸ்காவும்+ புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையும்+ வர இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன.+ அவரை எப்படித் தந்திரமாகப் பிடித்து* கொன்றுபோடலாம் என்று முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் வழி தேடிக்கொண்டிருந்தார்கள்.+  ஆனாலும், “பண்டிகையின்போது வேண்டாம், மக்கள் மத்தியில் ஒருவேளை கலவரம் ஏற்படலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.  பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு சாப்பிட உட்கார்ந்திருந்தார்; அப்போது ஒரு பெண் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்து வந்தாள். அவள் அந்தக் குப்பியை உடைத்து, அதிலிருந்த எண்ணெயை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள்.+  அதைப் பார்த்த சிலர் எரிச்சலடைந்து, “இந்த வாசனை எண்ணெயை ஏன் இப்படி வீணாக்குகிறாள்?  இதை 300 தினாரியுவுக்கும்* அதிகமாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே!” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். அவள்மேல் அவர்கள் பயங்கர எரிச்சல் அடைந்தார்கள்.*  ஆனால் இயேசு, “இவளை ஒன்றும் சொல்லாதீர்கள். ஏன் இவளுடைய மனதை நோகடிக்கிறீர்கள்? இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள்.+  ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்,+ நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நல்லது செய்யலாம்; ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.+  இவள் தன்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறாள்; நான் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னேற்பாடாக என் உடல்மேல் வாசனை எண்ணெயை ஊற்றியிருக்கிறாள்.+  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உலகில் எங்கெல்லாம் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறதோ+ அங்கெல்லாம் இந்தப் பெண் செய்த காரியமும் இவள் நினைவாகச் சொல்லப்படும்”+ என்றார். 10  அவரைக் காட்டிக்கொடுப்பதற்காக, பன்னிரண்டு பேரில்* ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து முதன்மை குருமார்களிடம் போனான்.+ 11  அவன் சொன்னதைக் கேட்டபோது அவர்கள் மனம் குளிர்ந்துபோய், அவனுக்கு வெள்ளிக் காசுகள் தருவதாக வாக்குக் கொடுத்தார்கள்.+ அதனால், அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு அவன் சந்தர்ப்பம் தேட ஆரம்பித்தான். 12  புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதலாம் நாள்+ வந்தது; வழக்கமாக, பஸ்கா பலி கொடுக்கப்படுகிற+ அந்த நாளில் அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து, “நீங்கள் பஸ்கா உணவைச் சாப்பிட நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?”+ என்று கேட்டார்கள். 13  அதற்கு அவர் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரிடம், “நீங்கள் நகரத்துக்குள் போங்கள்; மண்ஜாடியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிற ஒருவன் அங்கே உங்களைச் சந்திப்பான். அவன் பின்னால் போங்கள்.+ 14  அவன் எந்த வீட்டுக்குள் போகிறானோ அந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், ‘“என் சீஷர்களோடு நான் பஸ்கா உணவு சாப்பிடுவதற்கான விருந்தினர் அறை எங்கே?” என்று போதகர் கேட்கிறார்’ எனச் சொல்லுங்கள். 15  அப்போது, மாடியில் தேவையான வசதிகள் செய்யப்பட்ட ஒரு பெரிய அறையை அவர் உங்களுக்குக் காட்டுவார்; அங்கே நமக்காக ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொன்னார். 16  அவர் சொன்னபடியே சீஷர்களும் போனார்கள்; நகரத்துக்குள் போனபோது அவர் சொன்னதெல்லாம் அப்படியே நடந்ததைப் பார்த்து, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்தார்கள். 17  சாயங்காலம் ஆனபோது, அவர் அந்தப் பன்னிரண்டு பேரோடு வந்தார்.+ 18  அவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று இயேசு சொன்னார். 19  அப்போது அவர்கள் எல்லாரும் துக்கப்பட்டு, “அது நானா, நானா?” என்று ஒவ்வொருவராகக் கேட்டார்கள். 20  அதற்கு அவர், “பன்னிரண்டு பேரில் ஒருவன்தான் அவன்; என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான் அவன்.+ 21  மனிதகுமாரன், தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடுதான் வரும்!+ அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நன்றாக இருந்திருக்கும்”+ என்று சொன்னார். 22  அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அவர் ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து,* அதைப் பிட்டு, “இதை வாங்கிக்கொள்ளுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது”+ என்று சொல்லி அவர்களிடம் கொடுத்தார். 23  அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்தார்; எல்லாரும் அதிலிருந்து குடித்தார்கள்.+ 24  அப்போது அவர், “இது ‘ஒப்பந்தத்தை+ உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’+ குறிக்கிறது; என் இரத்தம் பலருக்காகச் சிந்தப்படப்போகிறது.+ 25  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தில் புதிய திராட்சமதுவை நான் குடிக்கும் நாள்வரை இனி நான் திராட்சமதுவையே குடிக்க மாட்டேன்” என்று சொன்னார். 26  கடைசியில், கடவுளைப் புகழ்ந்து பாடல்கள்* பாடிவிட்டு, ஒலிவ மலைக்கு அவர்கள் போனார்கள்.+ 27  அப்போது இயேசு அவர்களிடம், “நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்; ஏனென்றால், ‘நான் மேய்ப்பனை வெட்டுவேன்,+ ஆடுகள் சிதறி ஓடும்’+ என்று எழுதப்பட்டிருக்கிறது. 28  ஆனால், நான் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்”+ என்று சொன்னார். 29  அதற்கு பேதுரு, “மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போக மாட்டேன்”+ என்று சொன்னார். 30  அதற்கு இயேசு, “உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், இன்று, ஆம் இன்றைக்கு ராத்திரியே, சேவல் இரண்டு தடவை கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்றார். 31  ஆனால் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்” என்று அடித்துச் சொன்னார். மற்ற எல்லாரும் அதையே சொன்னார்கள்.+ 32  அவர்கள் கெத்செமனே என்ற இடத்துக்கு வந்தார்கள்; அப்போது அவர், “நான் ஜெபம் செய்யும்வரை நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்”+ என்று சீஷர்களிடம் சொன்னார். 33  பின்பு, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனார்;+ அப்போது, அவர் மிகுந்த வேதனையும் மனக்கலக்கமும் அடைந்து, 34  “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன்.+ நீங்கள் இங்கேயே இருந்து, விழித்திருங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 35  பின்பு சற்று முன்னே போய், மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து, இந்தச் சோதனை* தன்னைவிட்டு நீங்க முடியுமானால் நீங்க வேண்டுமென்று ஜெபம் செய்ய ஆரம்பித்தார்; 36  அப்போது, “அபா,* தகப்பனே,+ உங்களால் எல்லாமே முடியும்; இந்தக் கிண்ணத்தை* என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்”+ என்று சொன்னார். 37  அதன் பின்பு, அவர் வந்து பார்த்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அப்போது பேதுருவிடம், “சீமோனே, தூங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணிநேரம்கூட விழித்திருக்க உனக்குப் பலம் இல்லையா?+ 38  நண்பர்களே, சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது”+ என்று சொன்னார். 39  பின்பு மறுபடியும் போய், முன்பு சொன்னதையே+ சொல்லி ஜெபம் செய்தார். 40  அவர்கள் பயங்கர தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அவர் மறுபடியும் வந்து பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அதனால், அவரிடம் என்ன சொல்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. 41  மூன்றாவது தடவையாக அவர் வந்து பார்த்து, “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! போதும்! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் வந்துவிட்டது!+ 42  எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்”+ என்று சொன்னார். 43  அப்போதே, அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான். முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பெரியோர்களும்* அனுப்பிய ஆட்கள் வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் கூட்டமாக வந்தார்கள்.+ 44  அவரைக் காட்டிக்கொடுப்பவன், “நான் யாருக்கு முத்தம் கொடுக்கிறேனோ அவர்தான் அந்த ஆள்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள், காவலோடு கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் சொல்லி வைத்திருந்தான். 45  அவன் நேராக அவரிடம் வந்து, “ரபீ!”* என்று சொல்லி, மென்மையாக முத்தம் கொடுத்தான். 46  அப்போது, அவர்கள் அவரைப் பிடித்துக் கைது செய்தார்கள். 47  ஆனால், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+ 48  அப்போது இயேசு, “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா?+ 49  நான் தினமும் உங்களோடு இருந்து ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்தேன்.+ அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை. இருந்தாலும், வேதவசனங்கள் நிறைவேறும்படியே+ இப்படி நடக்கிறது” என்று சொன்னார். 50  அப்போது, சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.+ 51  ஆனால், உயர்தரமான நாரிழை* அங்கியை அணிந்திருந்த ஓர் இளம் மனிதர் சற்று நெருக்கமாகவே அவரைப் பின்தொடர ஆரம்பித்தார்; அவரையும் பிடிக்கப் பார்த்தார்கள், 52  அவரோ அந்த அங்கியை விட்டுவிட்டு உள்ளாடையோடு ஓடிப்போனார். 53  அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம்+ கொண்டுபோனார்கள்; அங்கே முதன்மை குருமார்கள், பெரியோர்கள், வேத அறிஞர்கள் ஆகிய எல்லாரும் கூடியிருந்தார்கள்.+ 54  ஆனால், பேதுரு தூரத்திலிருந்தபடியே அவரைப் பின்தொடர்ந்து போனார்; தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை போய், அந்த வீட்டு வேலைக்காரர்களோடு உட்கார்ந்து, நெருப்பு பக்கத்தில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.+ 55  இதற்கிடையில், முதன்மை குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும், இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.+ 56  நிறைய பேர் அவருக்கு எதிராகப் பொய் சாட்சி+ சொன்னபோதிலும் அவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன. 57  அதோடு, சிலர் வந்து அவருக்கு எதிராகப் பொய் சாட்சி சொன்னார்கள். 58  “‘கைகளால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தைத் தரைமட்டமாக்கி, கைகளால் கட்டப்படாத வேறொரு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன்’ என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்”+ என்றார்கள். 59  இந்த விஷயத்திலும்கூட அவர்கள் சொன்ன சாட்சி ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருந்தது. 60  கடைசியாக, தலைமைக் குரு எழுந்து அவர்கள் நடுவில் நின்று, இயேசுவைப் பார்த்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?”+ என்று கேட்டார். 61  ஆனால், அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.+ மறுபடியும் தலைமைக் குரு, “கடவுளின்* மகனாகிய கிறிஸ்து நீதானா?” என்று கேட்டார். 62  அப்போது இயேசு, “நான் கிறிஸ்துதான்; மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்களோடு வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார். 63  அதைக் கேட்டதும் தலைமைக் குரு தன் அங்கிகளைக் கிழித்து, “இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு?+ 64  இவன் தெய்வ நிந்தனை செய்ததை நீங்களே கேட்டீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர் சாக வேண்டுமென்று+ எல்லாரும் சொன்னார்கள். 65  அப்போது சிலர் அவர்மேல் துப்பினார்கள்;+ அவருடைய முகத்தை மூடி, தங்கள் கைமுஷ்டிகளால் குத்தி, “நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் உன்னை அடித்தது யாரென்று சொல்!” என்றார்கள். பின்பு, நீதிமன்ற அதிகாரிகள் அவருடைய கன்னத்தில் அறைந்து, அவரைக் கொண்டுபோனார்கள்.+ 66  பேதுரு கீழே முற்றத்தில் இருந்தபோது, தலைமைக் குருவின் வேலைக்காரப் பெண்களில் ஒருத்தி வந்தாள்.+ 67  குளிர்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை அவள் நேருக்குநேர் பார்த்து, “அந்த நாசரேத்தூர் இயேசுவோடு நீயும்தான் இருந்தாய்!” என்று சொன்னாள். 68  ஆனால் பேதுரு அதை மறுத்து, “எனக்கு அவரைத் தெரியாது, நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குப் புரியவில்லை” என்று சொல்லிவிட்டு நுழைவு மண்டபத்துக்குப் போனார். 69  அந்த வேலைக்காரப் பெண் அங்கே அவரைப் பார்த்தபோது, “இவனும் அவர்களில் ஒருவன்தான்” என அங்கே நின்றுகொண்டிருந்த ஆட்களிடம் மறுபடியும் சொல்ல ஆரம்பித்தாள். 70  அவரோ மறுபடியும் அதை மறுத்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அங்கே நின்றுகொண்டிருந்தவர்கள் பேதுருவைப் பார்த்து, “நிச்சயமாகவே நீயும் அவர்களில் ஒருவன்தான், நீ ஒரு கலிலேயன்தான்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 71  ஆனால் அவர், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி, “நீங்கள் சொல்லும் ஆளை எனக்குத் தெரியவே தெரியாது!” எனச் சத்தியம் செய்ய ஆரம்பித்தார். 72  உடனே சேவல் இரண்டாவது தடவை கூவியது;+ அப்போது, “சேவல் இரண்டு தடவை கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்று இயேசு சொன்னது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது. அதனால், அவர் மனமுடைந்து அழ ஆரம்பித்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கைது செய்து.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “அவளிடம் கோபமாகப் பேசினார்கள்; அவளைத் திட்டினார்கள்.”
அதாவது, “அப்போஸ்தலர்களில்.”
நே.மொ., “ஆசீர்வதித்து.”
வே.வா., “சங்கீதங்கள்.”
நே.மொ., “நேரம்.”
பிள்ளைகள் தங்கள் அப்பாவைச் செல்லமாகவும், அதேசமயத்தில் மரியாதையாகவும் கூப்பிடுவதற்குப் பயன்படுத்திய எபிரெய அல்லது அரமேயிக் வார்த்தை இது.
“கிண்ணம்” என்பது கடவுளுடைய சித்தத்தை, அதாவது இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் கடவுள் அவரை அனுமதித்ததை அடையாளப்படுத்துகிறது.
வே.வா., “மூப்பர்களும்.”
அதாவது, “போதகரே.”
அதாவது, “லினன்.”
நே.மொ., “புகழுக்குரியவரின்.”