யாக்கோபு எழுதிய கடிதம் 3:1-18

  • நாக்கை அடக்குவது (1-12)

    • நிறைய பேர் போதகர்களாக வேண்டாம் (1)

  • பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் (13-18)

3  என் சகோதரர்களே, போதகர்களான எங்களுக்கு வருகிற நியாயத்தீர்ப்பு மற்றவர்களுக்கு வருவதைவிட மிகக் கடுமையாக இருக்கும்+ என்பது உங்களுக்குத் தெரிந்திருப்பதால் உங்களில் நிறைய பேர் போதகர்களாக வேண்டாம்.  நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.*+ பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே பரிபூரணமான மனிதன்; அவன் தன்னுடைய முழு உடலையும் கடிவாளம்போட்டு அடக்க முடிகிறவனாக இருப்பான்.  குதிரைகளை அடக்க நாம் அவற்றின் வாயில் கடிவாளம் போடும்போது அவற்றின் முழு உடலையும் கட்டுப்படுத்திவிடுகிறோம், இல்லையா?  கப்பல்களைப் பாருங்கள்! அவை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், பலத்த காற்றால் அலைக்கழிக்கப்பட்டாலும், கப்பலோட்டி மிகச் சிறிய சுக்கானை வைத்து தான் விரும்புகிற திசையை நோக்கி அவற்றை ஓட்டுகிறான்.  அதேபோல், நாக்கும்கூட ஒரு சிறிய உறுப்புதான். இருந்தாலும், அது பயங்கரமாகப் பெருமையடிக்கிறது. சிறிதளவு நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது, பாருங்கள்!  நாக்கும் நெருப்புதான்.+ நம்முடைய உறுப்புகளில் ஒன்றான இந்த நாக்கு அநீதி நிறைந்த உலகமாக இருக்கிறது. ஏனென்றால், அது நம் முழு உடலையும் கறைபடுத்தி,+ நம் முழு வாழ்க்கையையும்* எரித்துவிடுகிறது; அதற்கு கெஹென்னா* நெருப்பு மூட்டிவிடுகிறது.  எல்லா வகையான காட்டு மிருகங்களையும் பறவைகளையும் ஊரும் பிராணிகளையும் கடல் பிராணிகளையும் மனிதனால் அடக்கிவிட முடியும், அடக்கியும் இருக்கிறான்.  ஆனால், நாக்கை எந்த மனிதனாலும் அடக்க முடியாது. அது அடங்காதது, தீமை உண்டாக்குவது, கொடிய விஷம் நிறைந்தது.+  அந்த நாக்கினால் நம்முடைய தகப்பனாகிய யெகோவாவை* புகழ்கிறோம்; இருந்தாலும், “கடவுளுடைய சாயலில்” படைக்கப்பட்ட மனிதர்களை+ அதே நாக்கினால் சபிக்கிறோம். 10  புகழ்வதும் சபிப்பதும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதரர்களே, இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.+ 11  ஒரே நீரூற்றிலிருந்து தித்திப்பான தண்ணீரும் கசப்பான தண்ணீரும் வருமா? 12  என் சகோதரர்களே, அத்தி மரம் ஒலிவப் பழங்களையோ, திராட்சைக் கொடி அத்திப் பழங்களையோ கொடுக்குமா?+ அதேபோல், உப்பு நீரூற்று நல்ல* தண்ணீரைக் கொடுக்குமா? 13  உங்கள் மத்தியில் யாருக்கு ஞானமும் புரிந்துகொள்ளும் திறனும் இருக்கிறது? இவற்றை நல்ல நடத்தையின் மூலமும், ஞானத்தால் வருகிற சாந்தத்தின் மூலமும் அவன் காட்டட்டும். 14  உங்கள் இதயங்களில் பயங்கர பொறாமையும்+ பகையும்* இருக்கிறதென்றால்,+ நீங்கள் பெருமையடிக்காதீர்கள்.+ உண்மைக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். 15  இப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் அல்ல. இது உலகப்பிரகாரமானது,+ மிருகத்தனமானது, பேய்த்தனமானது. 16  பொறாமையும் பகையும்* எங்கேயோ, அங்கே கலகங்களும் கீழ்த்தரமான எல்லா செயல்களும் இருக்கும்.+ 17  பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+ 18  சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக*+ சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தடுக்கி விழுகிறோம்.”
நே.மொ., “நம் வாழ்க்கைச் சக்கரத்தை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “தித்திப்பான.”
அல்லது, “சுயநல லட்சியமும்.”
அல்லது, “சுயநல லட்சியமும்.”
அதாவது, “வளைந்துகொடுப்பதாக.”
அல்லது, “பண்ணுகிறவர்களால்.”