யாத்திராகமம் 1:1-22

  • எகிப்தில் இஸ்ரவேலர்கள் பெருகுகிறார்கள் (1-7)

  • இஸ்ரவேலர்களை பார்வோன் ஒடுக்குகிறான் (8-14)

  • கடவுள்பயமுள்ள மருத்துவச்சிகள் உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள் (15-22)

1  யாக்கோபு என்ற இஸ்ரவேல் எகிப்துக்குப் போனபோது, அவருடைய மகன்களும் அவரவர் குடும்பத்தோடு போனார்கள். அவருடைய மகன்களுடைய பெயர்கள் இவைதான்:+  ரூபன், சிமியோன், லேவி, யூதா,+  இசக்கார், செபுலோன், பென்யமீன்,  தாண், நப்தலி, காத், ஆசேர்.+  யோசேப்பு ஏற்கெனவே எகிப்து தேசத்தில் இருந்தார். யாக்கோபுடைய வம்சத்தார் மொத்தம் 70 பேர்.+  பிற்பாடு, யோசேப்பும் அவருடைய சகோதரர்கள் எல்லாரும், அந்தத் தலைமுறையைச் சேர்ந்த எல்லாரும் இறந்துபோனார்கள்.+  இஸ்ரவேலர்கள் பிள்ளைகளைப் பெற்று ஏராளமாகப் பெருகினார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதனால், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. எகிப்து தேசமெங்கும் அவர்கள் நிறைந்திருந்தார்கள்.+  பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான்.  அவன் தன்னுடைய ஜனங்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேலர்கள் நம்மைவிட ஏராளமாகப் பெருகிவிட்டார்கள், பலத்திலும் நம்மை மிஞ்சிவிட்டார்கள்.+ 10  நாம் சாமர்த்தியமாக ஏதாவது செய்து அவர்கள் பெருகாதபடி தடுக்க வேண்டும். இல்லையென்றால், எதிரிகள் போர் செய்ய வரும்போது இவர்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டு நம்மைத் தோற்கடித்துவிட்டு இந்தத் தேசத்திலிருந்து தப்பித்துவிடுவார்கள்” என்றான். 11  அதனால், இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகள் போல வேலை வாங்கி அடக்கி ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள்.+ பார்வோனுக்காகப் பொருள்களைச் சேமித்து வைப்பதற்கு பித்தோம் நகரத்தையும் ராமசேஸ் நகரத்தையும்+ கட்டும்படி இஸ்ரவேலர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். 12  ஆனால், எகிப்தியர்கள் எந்தளவுக்கு அவர்களை அடக்கி ஒடுக்கினார்களோ அந்தளவுக்கு அவர்கள் பெருகினார்கள், எல்லா இடங்களிலும் பரவினார்கள். அதனால், இஸ்ரவேலர்களை நினைத்து எகிப்தியர்கள் பீதியடைந்தார்கள்.+ 13  அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தினார்கள்.+ 14  வாழ்க்கையே வெறுத்துப்போகும் அளவுக்கு அவர்களை வேலை வாங்கினார்கள். களிமண் சாந்தும் செங்கலும் தயாரிக்கிற வேலைகளையும், எல்லாவித வயல் வேலைகளையும் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள். இப்படி, அவர்களைப் படாத பாடுபடுத்தி, சக்கையாகப் பிழிந்தெடுத்தார்கள்.+ 15  பிற்பாடு, எகிப்தின் ராஜா எபிரெய மருத்துவச்சிகளான சிப்பிராளையும் பூவாளையும் கூப்பிட்டு, 16  “எபிரெயப் பெண்களுக்கு நீங்கள் பிரசவம் பார்க்கும்போது+ ஆண் குழந்தை பிறந்தால் அதைக் கொன்றுவிடுங்கள், பெண் குழந்தை பிறந்தால் உயிரோடு விட்டுவிடுங்கள்” என்று சொன்னான். 17  ஆனால், அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் எகிப்தின் ராஜா சொன்னபடி செய்யவில்லை. ஆண் குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டார்கள்.+ 18  பிற்பாடு, எகிப்தின் ராஜா அந்த மருத்துவச்சிகளைக் கூப்பிட்டு, “ஆண் குழந்தைகளை ஏன் உயிரோடு விட்டுவைத்தீர்கள்?” என்று கேட்டான். 19  அதற்கு அந்த மருத்துவச்சிகள், “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைப் போலக் கிடையாது. அவர்கள் துடிப்பானவர்கள், மருத்துவச்சி வருவதற்கு முன்பே குழந்தை பெற்றுவிடுகிறார்கள்” என்று சொன்னார்கள். 20  அதனால், கடவுள் அந்த மருத்துவச்சிகளுக்கு ஆதரவாக இருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் பெருகிக்கொண்டே போனார்கள், அவர்களுடைய பலமும் கூடிக்கொண்டே போனது. 21  அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அவர் பிற்பாடு அவர்களுக்குப் பிள்ளைகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார். 22  கடைசியில், பார்வோன் தன்னுடைய ஜனங்களிடம், “எபிரெயர்களுக்குப் பிறக்கிற எல்லா ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் வீசிவிடுங்கள், பெண் குழந்தைகளை மட்டும் உயிரோடு விட்டுவிடுங்கள்”+ என்று கட்டளை போட்டான்.

அடிக்குறிப்புகள்