யாத்திராகமம் 2:1-25

  • மோசே பிறக்கிறார் (1-4)

  • பார்வோனின் மகள் மோசேயைத் தத்தெடுக்கிறாள் (5-10)

  • மோசே மீதியானுக்கு ஓடிப்போகிறார்; சிப்போராளைக் கல்யாணம் செய்கிறார் (11-22)

  • கடவுள் இஸ்ரவேலர்களின் குமுறலைக் கேட்கிறார் (23-25)

2  அந்தச் சமயத்தில், லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் அதே கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார்.+  அந்தப் பெண் கர்ப்பமாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். குழந்தை மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்து, அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.+  அதற்குமேல் அவனை ஒளித்துவைக்க முடியாததால்,+ ஒரு நாணல்* கூடையை எடுத்து, அதற்குத் தார் பூசி, அவனை அதில் படுக்க வைத்தாள். பின்பு, நைல் நதியோரம் இருந்த நாணற்புற்களுக்கு இடையில் கூடையை வைத்தாள்.  அவனுக்கு என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்காக அவனுடைய அக்கா+ கொஞ்சத் தூரத்தில் நின்றுகொண்டாள்.  பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்கு வந்தாள். அவளுடைய பணிப்பெண்கள் நைல் நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது, நாணற்புற்களுக்கு இடையில் இருந்த அந்தக் கூடையை அவள் பார்த்தாள். உடனே தன்னுடைய அடிமைப் பெண்ணை அனுப்பி அதை எடுத்துவரச் சொன்னாள்.+  பார்வோனின் மகள் அதைத் திறந்தபோது, அதற்குள் குழந்தை இருந்தது. அது அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தபோது அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. “இது எபிரெயர்களுடைய குழந்தை” என்று சொன்னாள்.  அப்போது, அந்தக் குழந்தையின் அக்கா பார்வோனுடைய மகளிடம், “குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு எபிரெயப் பெண்ணை நான் போய்க் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.  அதற்கு பார்வோனின் மகள், “சரி, போ!” என்றாள். அந்தக் குட்டிப் பெண் உடனடியாகப் போய், குழந்தையின் அம்மாவைக்+ கூட்டிக்கொண்டு வந்தாள்.  அப்போது பார்வோனின் மகள் அந்தப் பெண்ணிடம், “இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போய், பால் கொடுத்து, நன்றாகக் கவனித்துக்கொள். நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண்ணும் குழந்தையை எடுத்துக்கொண்டு போய் பால் கொடுத்து வளர்த்தாள். 10  குழந்தை வளர்ந்த பின்பு, அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுவந்து விட்டாள். அவள் அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டாள்.+ “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி அவனுக்கு மோசே* என்று பெயர் வைத்தாள்.+ 11  மோசே வளர்ந்து ஆளான பின்பு, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்கள் படுகிற கஷ்டங்களைப் பார்க்கப் போனார்.+ அப்போது, ஓர் எபிரெயனை ஓர் எகிப்தியன் அடித்துக்கொண்டிருந்தான். 12  அவர் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லையென்று தெரிந்தவுடன், அந்த எகிப்தியனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார்.+ 13  அடுத்த நாள் அவர் வெளியே போனபோது, இரண்டு எபிரெயர்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது தப்பு செய்தவனிடம், “நீ ஏன் உன்னுடைய சகோதரனை அடிக்கிறாய்?” என்று கேட்டார்.+ 14  அதற்கு அவன், “உன்னை எங்களுடைய தலைவனாகவும் நீதிபதியாகவும் யாராவது நியமித்தார்களா? நீ அந்த எகிப்தியனைக் கொன்றுபோட்டது போல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயா?” என்று கேட்டான்.+ அதைக் கேட்டதும் மோசே பயந்துபோய், “நான் செய்தது எல்லாருக்கும் தெரிந்துவிட்டது!” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். 15  நடந்ததை பார்வோன் கேள்விப்பட்டவுடன், மோசேயைக் கொலை செய்ய நினைத்தான். அதனால் மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.+ அங்கே ஒரு கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். 16  அந்தத் தேசத்தைச் சேர்ந்த குருவுக்கு+ ஏழு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய அப்பாவின் ஆடுகளுக்காகக் கிணற்றிலிருந்து தண்ணீரை மொண்டு தொட்டிகளை நிரப்புவதற்கு அங்கே வந்தார்கள். 17  ஆனால், வழக்கம்போல் மேய்ப்பர்கள் வந்து அவர்களை விரட்டினார்கள். உடனே, மோசே எழுந்துபோய் அந்தப் பெண்களுக்கு உதவி செய்தார்.* அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீரும் காட்டினார். 18  அவர்கள் வீட்டுக்குப் போனதும் அவர்களுடைய அப்பா ரெகுவேல்,*+ “இன்றைக்கு இவ்வளவு சீக்கிரமாக வந்துவிட்டீர்களே, எப்படி?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார். 19  அதற்கு அவர்கள், “ஒரு எகிப்தியர்+ எங்களை மேய்ப்பர்களிடமிருந்து காப்பாற்றினார், அதுமட்டுமல்ல ஆடுகளுக்குத் தண்ணீரையும் மொண்டு ஊற்றினார்” என்றார்கள். 20  அப்போது அவர் தன்னுடைய மகள்களிடம், “அவர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? உடனே போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள், அவர் நம்மோடு சேர்ந்து சாப்பிடட்டும்” என்றார். 21  அதன் பின்பு, மோசேயும் அங்கு வந்து அவரோடு தங்கியிருக்க ஒத்துக்கொண்டார். ரெகுவேல் தன்னுடைய மகள் சிப்போராளை+ மோசேக்குக் கல்யாணம் செய்து வைத்தார். 22  அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அப்போது மோசே, “நான் வேறு தேசத்தில் அன்னியனாகக் குடியிருக்கிறேன்”+ என்று சொல்லி அவனுக்கு கெர்சோம்*+ என்று பெயர் வைத்தார். 23  பல வருஷங்களுக்குப் பின்பு எகிப்தின் ராஜா இறந்துபோனான்.+ ஆனால், இஸ்ரவேலர்கள் அடிமைகளாகவே இருந்ததால் வேதனையில் குமுறினார்கள், அழுது புலம்பினார்கள். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கேட்டு உண்மைக் கடவுளிடம் தொடர்ந்து கெஞ்சிக் கதறினார்கள்.+ 24  கடவுள் அவர்களுடைய குமுறலைக் கேட்டார்.+ ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.+ 25  கடவுள் இஸ்ரவேலர்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பினார்; அவர்களுடைய கஷ்டத்தைக் கவனித்தார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “பாப்பிரஸ் புல்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அர்த்தம், “எடுக்கப்பட்டவன்,” அதாவது, “தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்டவன்.”
வே.வா., “அந்தப் பெண்களுக்காகப் பரிந்து பேசினார்.”
அதாவது, “எத்திரோ.”
அர்த்தம், “அங்கே ஓர் அன்னியன்.”