யாத்திராகமம் 24:1-18

  • ஒப்பந்தத்தின்படி நடக்க ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள் (1-11)

  • சீனாய் மலையில் மோசே (12-18)

24  பின்பு அவர் மோசேயிடம், “நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும்+ இஸ்ரவேலின் பெரியோர்கள்* 70 பேரும் மலைமேல் ஏறிப் போங்கள். தூரத்தில் நின்று யெகோவாவை வணங்குங்கள்.  அதன்பின், நீ மட்டும் யெகோவாவின் பக்கத்தில் போக வேண்டும், மற்றவர்கள் போகக் கூடாது. ஜனங்களும் உன்னோடு வரக் கூடாது”+ என்றார்.  அதன்பின் மோசே ஜனங்களிடம் போய், யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் அவர் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும் சொன்னார்.+ அப்போது ஜனங்கள் எல்லாரும் ஒரே குரலில், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்”+ என்றார்கள்.  யெகோவா சொன்ன எல்லாவற்றையும் மோசே எழுதி வைத்தார்.+ பின்பு அவர் விடியற்காலையில் எழுந்து, அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டினார். இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிப்பதற்காக 12 கல்தூண்களையும் நாட்டினார்.  அதன்பின், அவர் இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினார். அவர்கள் போய் யெகோவாவுக்குத் தகன பலிகளையும், சமாதான பலிகளாகக் காளைகளையும்+ செலுத்தினார்கள்.  பின்பு, மோசே அந்த மிருகங்களின் இரத்தத்தில் பாதியைக் கிண்ணங்களில் எடுத்து வைத்தார். இன்னொரு பாதியைப் பலிபீடத்தில் தெளித்தார்.  அதன்பின், ஒப்பந்தப் புத்தகத்தை* எடுத்து அதை ஜனங்களுக்கு முன்னால் சத்தமாகப் படித்தார்.+ அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்”+ என்றார்கள்.  அதனால் மோசே இரத்தத்தை எடுத்து ஜனங்கள்மேல் தெளித்து,+ “யெகோவா உங்களோடு செய்திருக்கிற ஒப்பந்தத்தின் வார்த்தைகளைக் கேட்டீர்களே, அந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தம் இதுதான்”+ என்றார்.  மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் பெரியோர்கள் 70 பேரும் மலைமேல் ஏறிப்போய், 10  இஸ்ரவேலின் கடவுளைப் பார்த்தார்கள்.*+ அவருடைய பாதத்தின் கீழே நீலமணிக் கல் பதிக்கப்பட்ட தரையைப் போல ஒன்று தெரிந்தது. அது தெள்ளத்தெளிவான வானத்தைப் போல இருந்தது.+ 11  இஸ்ரவேலின் முக்கியத் தலைவர்களான+ அவர்களை உண்மைக் கடவுள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவருடைய தரிசனத்தைப் பார்த்தார்கள், சாப்பிட்டார்கள், குடித்தார்கள். 12  யெகோவா மோசேயிடம், “நீ மலைமேல் ஏறி என்னிடம் வந்து இங்கேயே தங்கியிரு. ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களையும் கட்டளைகளையும் நான் கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்” என்றார்.+ 13  அதனால், மோசேயும் அவருடைய உதவியாளரான யோசுவாவும் புறப்பட்டார்கள்.+ மோசே உண்மைக் கடவுளின் மலைமேல் ஏறிப் போவதற்கு+ முன்பு, 14  அங்கிருந்த பெரியோர்களிடம், “நாங்கள் திரும்பி வரும்வரை இங்கேயே காத்திருங்கள்.+ ஆரோனும் ஹூரும்+ உங்களுடன் இருக்கிறார்கள். யாருக்காவது வழக்கு இருந்தால் அவர்களிடம் போகலாம்”+ என்று சொன்னார். 15  மலையை மேகம் மூடியிருந்த சமயத்தில், மோசே அதன்மேல் ஏறிப் போனார்.+ 16  யெகோவாவின் மகிமை+ சீனாய் மலையில் தங்கியிருந்தது.+ ஆறு நாட்களாக அந்த மலையை மேகம் மூடியிருந்தது. ஏழாம் நாளில் கடவுள் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17  யெகோவாவின் மகிமை மலை உச்சியில் பற்றியெரியும் நெருப்பைப் போல இஸ்ரவேலர்களின் கண்களுக்குத் தெரிந்தது. 18  மோசே அந்த மேகத்துக்குள் நுழைந்து, மலைமேல் ஏறினார்.+ 40 நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மலையிலேயே தங்கியிருந்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்கள்.”
அநேகமாக, யாத்திராகமம் 20:22–23:33-ல் உள்ள சட்டதிட்டங்கள் அடங்கிய புத்தகமாக இருக்கலாம்.
அதாவது, “கடவுளின் மகிமையைப் பார்த்தார்கள்.”