யாத்திராகமம் 25:1-40

  • வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க காணிக்கைகள் (1-9)

  • பெட்டி (10-22)

  • மேஜை (23-30)

  • குத்துவிளக்கு (31-40)

25  பின்பு யெகோவா மோசேயிடம்,  “எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். உள்ளப்பூர்வமாகக் கொடுக்கிற ஆட்களிடமிருந்து நீங்கள் எனக்குக் காணிக்கை வாங்க வேண்டும்.+  அவர்களிடமிருந்து நீங்கள் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவைதான்: தங்கம்,+ வெள்ளி,+ செம்பு,+  நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தர நாரிழை,* வெள்ளாட்டு மயிர்,  சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோல், கடல்நாய்த் தோல், வேல மரம்;+  விளக்குகளுக்கான எண்ணெய்,+ அபிஷேகத் தைலத்துக்கும்+ தூபப்பொருளுக்கும் தேவையான பரிமளத் தைலம்,+  ஏபோத்திலும்*+ மார்ப்பதக்கத்திலும்+ பதிக்க வேண்டிய கோமேதகக் கற்கள் மற்றும் பல ரத்தினக் கற்கள்.  நான் உங்கள் நடுவில் தங்குவதற்காக நீங்கள் எனக்கு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க வேண்டும்.+  வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் எல்லா பொருள்களையும் நான் உனக்குக் காட்டுகிற மாதிரியின்படியே* நீங்கள் செய்ய வேண்டும்.+ 10  வேல மரத்தில் நீங்கள் ஒரு பெட்டியைச் செய்ய வேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும்,* அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்க வேண்டும்.+ 11  பெட்டியின் உள்ளேயும் வெளியேயும் சுத்தமான தங்கத்தால் தகடு அடிக்க வேண்டும்.+ அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும்.+ 12  தங்கத்தால் நான்கு வளையங்களை வார்த்து, பெட்டியின் நான்கு கால்களுக்கு மேலேயும் பொருத்த வேண்டும். இரண்டு வளையங்களை ஒரு பக்கத்திலும், மற்ற இரண்டு வளையங்களை இன்னொரு பக்கத்திலும் பொருத்த வேண்டும். 13  வேல மரத்தில் கம்புகள் செய்து, அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும்.+ 14  பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு வசதியாக, அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள வளையங்களில் அந்தக் கம்புகளைச் செருகி வைக்க வேண்டும். 15  அந்தக் கம்புகளைப் பெட்டியின் வளையங்களிலிருந்து கழற்றவே கூடாது.+ 16  நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளை அந்தப் பெட்டியில் வைக்க வேண்டும்.+ 17  இரண்டரை முழ நீளத்திலும் ஒன்றரை முழ அகலத்திலும் சுத்தமான தங்கத்தால் ஒரு மூடி செய்ய வேண்டும்.+ 18  தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+ 19  மூடியின் ஒரு முனையில் ஒரு கேருபீனும் இன்னொரு முனையில் இன்னொரு கேருபீனும் இருக்க வேண்டும். 20  அந்தக் கேருபீன்களின் இரண்டு சிறகுகளும் பெட்டியின் மூடிக்கு மேலாக விரிந்திருக்க வேண்டும்.+ அந்தக் கேருபீன்கள் எதிரெதிரே இருக்க வேண்டும். அவற்றின் முகங்கள் மூடியைப் பார்த்தபடி இருக்க வேண்டும். 21  நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, மூடியால் அதை மூட வேண்டும்.+ 22  அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன். 23  அதோடு, இரண்டு முழ நீளத்திலும் ஒரு முழ அகலத்திலும் ஒன்றரை முழ உயரத்திலும் வேல மரத்தால் ஒரு மேஜை+ செய்ய வேண்டும்.+ 24  அதற்கு சுத்தமான தங்கத்தால் தகடு அடித்து, சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும். 25  அதாவது, நான்கு விரலளவு அகலத்துக்கு* சுற்றிலும் சட்டம் அடித்து, அந்தச் சட்டத்தின் ஓரங்களில் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்ய வேண்டும். 26  தங்கத்தில் நான்கு வளையங்களைச் செய்து, மேஜையின் நான்கு கால்கள் இருக்கிற நான்கு மூலைகளிலும் பொருத்த வேண்டும். 27  இந்த வளையங்களைச் சட்டத்துக்குப் பக்கத்தில் பொருத்த வேண்டும். மேஜையைத் தூக்கிக்கொண்டு போவதற்கான கம்புகளை அவற்றில் செருகி வைக்க வேண்டும். 28  அந்தக் கம்புகளை வேல மரத்தால் செய்து, அவற்றுக்குத் தங்கத் தகடு அடிக்க வேண்டும். அந்தக் கம்புகளால் மேஜையைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும். 29  மேஜையில் வைக்க வேண்டிய தட்டுகளையும் கோப்பைகளையும் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுவதற்கான கூஜாக்களையும் கிண்ணங்களையும்கூட செய்ய வேண்டும். இவற்றைச் சுத்தமான தங்கத்தால் செய்ய வேண்டும்.+ 30  மேஜையின் மேல் படையல் ரொட்டிகளை எனக்கு முன்னால் எப்போதும் வைக்க வேண்டும்.+ 31  சுத்தமான தங்கத்தால் ஒரு குத்துவிளக்கு+ செய்ய வேண்டும். அதன் அடிப்பகுதி, தண்டு, கிளைகள், புல்லி இதழ்கள்,* மொட்டுகள், மலர்கள் எல்லாவற்றையும் ஒரே வேலைப்பாடாக சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும்.+ 32  விளக்குத்தண்டின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகள், இன்னொரு பக்கத்தில் மூன்று கிளைகள் என மொத்தம் ஆறு கிளைகள் இருக்க வேண்டும். 33  ஒவ்வொரு கிளையிலும் வாதுமைப் பூ வடிவத்தில் மூன்று புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருக்க வேண்டும். விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளிலும் அதேபோல் இருக்க வேண்டும். 34  விளக்குத்தண்டிலும் வாதுமைப் பூ வடிவத்தில் நான்கு புல்லி இதழ்களும், இடையிடையே மொட்டுகளும் மலர்களும் இருக்க வேண்டும். 35  முதல் இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு, அதற்கடுத்த இரண்டு கிளைகளுக்குக் கீழே ஒரு மொட்டு என்று விளக்குத்தண்டிலிருந்து பிரியும் ஆறு கிளைகளுக்கும் இருக்க வேண்டும். 36  குத்துவிளக்கின் மொட்டுகளையும் கிளைகளையும் தண்டு முழுவதையும் சுத்தமான தங்கத்தில் ஒரே வேலைப்பாடாகச் சுத்தியால் அடித்துச் செய்ய வேண்டும்.+ 37  அதற்கு ஏழு அகல் விளக்குகளைச் செய்ய வேண்டும். முன்பக்கமாக ஒளிவீசும் விதத்தில் அந்த விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும்.+ 38  அதற்கான இடுக்கிகளும், தீய்ந்துபோன திரிகளை எடுத்து வைப்பதற்கான கரண்டிகளும் சுத்தமான தங்கத்தால் செய்யப்பட வேண்டும்.+ 39  குத்துவிளக்கையும் இந்த எல்லா சாமான்களையும் ஒரு தாலந்து* சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும். 40  மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே* ஒவ்வொன்றையும் செய்ய நீ கவனமாக இருக்க வேண்டும்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”
வே.வா., “வடிவத்திலேயே.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
பூ இதழ்களின் அடியில் உள்ளதும் அவற்றைத் தாங்குவதுமான இலை போன்ற பகுதிகள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “வடிவத்திலேயே.”