யாத்திராகமம் 36:1-38

  • தேவைக்கும் அதிகமான காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன (1-7)

  • வழிபாட்டுக் கூடார வேலைகள் (8-38)

36  அதோடு, “பெசலெயேலுடன் அகோலியாபும் மற்ற திறமைசாலிகளும் சேர்ந்து வழிபாட்டுக் கூடாரத்தின் பரிசுத்த வேலைகளைச் செய்வார்கள். யெகோவா சொன்னபடியே அந்த வேலைகளைச் சரியாகச் செய்ய யெகோவா அவர்களுக்கு ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் தந்திருக்கிறார்”+ என்று மோசே சொன்னார்.  பின்பு பெசலெயேலையும், அகோலியாபையும், யெகோவாவிடமிருந்து ஞானத்தைப் பெற்ற திறமைசாலிகள் எல்லாரையும்,+ அந்த வேலைகளை விருப்பப்பட்டு செய்ய யாருடைய உள்ளம் தூண்டியதோ+ அவர்கள் எல்லாரையும் மோசே கூப்பிட்டார்.  அந்தப் பரிசுத்த வேலைகளுக்காக இஸ்ரவேலர்கள் கொடுத்த காணிக்கைகள்+ எல்லாவற்றையும் அவர்கள் மோசேயிடமிருந்து வாங்கிக்கொண்டார்கள். அதன் பின்பும், ஒவ்வொரு நாள் காலையிலும் ஜனங்கள் விருப்பத்தோடு காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.  அவர்கள் அந்தப் பரிசுத்த வேலைகளை ஆரம்பித்த பின்பு, அந்தத் திறமைசாலிகள் எல்லாரும் ஒவ்வொருவராக வந்து,  மோசேயிடம், “யெகோவா செய்யச் சொன்ன வேலைக்காக, ஜனங்கள் தேவைக்கும் அதிகமான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்கள்” என்றார்கள்.  அதனால் மோசே, “ஆண்கள், பெண்கள் யாருமே இனி எந்தப் பொருளையும் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டாம்” என்று முகாம் முழுக்க அறிவிப்பு செய்யச் சொன்னார். அதனால், ஜனங்கள் காணிக்கை கொண்டுவருவதை நிறுத்தினார்கள்.  எல்லா வேலைகளுக்கும் தேவையான பொருள்கள் ஏற்கெனவே வந்து குவிந்திருந்தன. அவை தேவைக்கும் அதிகமாகவே இருந்தன.  அந்தத் திறமைசாலிகள் எல்லாரும்+ வழிபாட்டுக் கூடாரத்தை+ 10 விரிப்புகளால் அமைத்தார்கள். உயர்தரமான திரித்த நாரிழை,* நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றால் இந்த விரிப்புகளைத் தயாரித்தார்கள். இந்த விரிப்புகள்மேல் அவர்* கேருபீன்களின் வடிவத்தில் தையல்* வேலைப்பாடு செய்தார்.+  ஒவ்வொரு விரிப்பும் 28 முழ* நீளத்திலும் 4 முழ அகலத்திலும் இருந்தது. எல்லா விரிப்புகளும் ஒரே அளவில் இருந்தன. 10  பின்பு, ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் மற்ற ஐந்து விரிப்புகளை ஒன்றாகவும் அவர் இணைத்தார். 11  இணைக்கப்பட்ட ஒரு விரிப்பின் ஓரத்தில் நீல நிற நூலால் காதுகளை* தைத்தார். இணைக்கப்பட்ட மற்றொரு விரிப்பின் ஓரத்திலும் அதேபோல் காதுகளைத் தைத்தார். இந்த இரண்டு விரிப்புகளையும் சேர்ப்பதற்காக இப்படிச் செய்தார். 12  அந்த ஒவ்வொரு விரிப்பிலும் 50 காதுகளைத் தைத்தார். ஒரு விரிப்பிலுள்ள காதுகள் மற்ற விரிப்பின் ஓரத்திலுள்ள காதுகளோடு இணையும்படி நேருக்கு நேராக வைத்துத் தைத்தார். 13  தங்கத்தில் 50 கொக்கிகள் செய்து, அவற்றால் அந்த இரண்டு விரிப்புகளையும் ஒன்றாக இணைத்தார். இப்படி, முழு கூடாரமும் ஒரே விரிப்பால் அமைக்கப்பட்டதாக இருந்தது. 14  பின்பு, வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் விரிப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் 11 கம்பளிகளைச் செய்தார்.+ 15  ஒவ்வொரு கம்பளியும் 30 முழ நீளத்திலும் 4 முழ அகலத்திலும் இருந்தது. 11 கம்பளிகளும் ஒரே அளவில் இருந்தன. 16  ஐந்து கம்பளிகளை அவர் ஒன்றாக இணைத்தார். மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாக இணைத்தார். 17  இணைக்கப்பட்ட ஒரு கம்பளியின் ஓரத்தில் 50 காதுகளைத் தைத்தார். இணைக்கப்பட்ட மற்றொரு கம்பளியின் ஓரத்திலும் 50 காதுகளைத் தைத்தார். ஒரு கம்பளியின் காதுகள் மற்ற கம்பளியின் காதுகளோடு இணையும்படி அமைத்தார். 18  செம்பினால் 50 கொக்கிகளைச் செய்து, அந்தக் கொக்கிகளால் காதுகளை இணைத்தார். அப்போது, முழு கூடாரத்துக்கும் ஒரே கம்பளி இருந்தது. 19  அதோடு, கம்பளிமேல் போடுவதற்கு சிவப்புச் சாயம் போட்ட செம்மறியாட்டுக் கடாத் தோலினால் ஒரு விரிப்பைச் செய்தார். அதன்மேல் போடுவதற்கு கடல்நாய்த் தோலினால் ஒரு விரிப்பைச் செய்தார்.+ 20  பின்பு, வழிபாட்டுக் கூடாரத்துக்காக வேல மரத்தால்+ செங்குத்தான சட்டங்களை* செய்தார்.+ 21  ஒவ்வொரு சட்டமும் 10 முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாக இருந்தது. 22  ஒவ்வொரு சட்டத்தின் அடிபாகத்திலும் இரண்டு புடைப்புகள்* அடுத்தடுத்து இருந்தன. வழிபாட்டுக் கூடாரத்துக்கான எல்லா சட்டங்களையும் இப்படித்தான் செய்தார். 23  வழிபாட்டுக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்தில் நிறுத்துவதற்காக 20 சட்டங்கள் செய்தார். 24  அந்த 20 சட்டங்களுக்கும் கீழே வைப்பதற்காக 40 வெள்ளிப் பாதங்களை* செய்தார். ஒரு சட்டத்திலுள்ள இரண்டு புடைப்புகளுக்காக இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் பாதங்களை வைத்தார்.+ 25  வழிபாட்டுக் கூடாரத்தின் இன்னொரு பக்கத்துக்காக, அதாவது வடக்குப் பக்கத்துக்காக, 20 சட்டங்களைச் செய்தார். 26  அவற்றுக்காக 40 வெள்ளிப் பாதங்களையும் செய்தார். ஒரு சட்டத்துக்குக் கீழே இரண்டு பாதங்கள் என ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டு பாதங்களை வைத்தார். 27  வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஆறு சட்டங்களைச் செய்தார்.+ 28  வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்திலுள்ள இரண்டு மூலைகளுக்கும் இரண்டு மூலைச்சட்டங்களைச் செய்தார். 29  ஒவ்வொரு மூலைச்சட்டத்துக்கும் இரண்டு கட்டைகளைக் கூம்பு வடிவத்தில் வைத்து, முதல் வளையம் இருக்கிற இடத்தில் இணைத்தார். கூடாரத்தின் இரண்டு பக்கத்திலுள்ள மூலைச்சட்டங்களையும் இப்படித்தான் செய்தார். 30  ஒவ்வொரு சட்டத்துக்குக் கீழேயும் இரண்டிரண்டு பாதங்கள் இருந்தன. அதாவது, 8 சட்டங்களுக்கு 16 வெள்ளிப் பாதங்கள் இருந்தன. 31  பின்பு, அவர் வேல மரத்தால் கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார்.+ 32  வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பக்கத்திலுள்ள சட்டங்களை இணைப்பதற்காக ஐந்து கம்புகளைச் செய்தார். வழிபாட்டுக் கூடாரத்தின் பின்பக்கத்துக்காக, அதாவது மேற்குப் பக்கத்துக்காக, ஐந்து கம்புகளைச் செய்தார். 33  சட்டங்களை இணைப்பதற்காக அவற்றின் நடுப்பகுதியில் செருகப்படும் கம்பு ஒரு முனைமுதல் மறு முனைவரை ஒரே கம்பாக இருக்கும்படி செய்தார். 34  சட்டங்களுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். கம்புகளைச் செருகுவதற்கான வளையங்களைத் தங்கத்தில் செய்தார். கம்புகளுக்கும் தங்கத்தால் தகடு அடித்தார்.+ 35  நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரைச்சீலையைச்+ செய்தார். அதன்மேல் கேருபீன்களின்+ வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்தார்.+ 36  திரைச்சீலையைத் தொங்கவிடுவதற்காக வேல மரத்தால் நான்கு தூண்கள் செய்து, அவற்றுக்குத் தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் கொக்கிகளைத் தங்கத்தில் செய்தார். வெள்ளியில் செய்யப்பட்ட நான்கு பாதங்களின் மேல் அந்தத் தூண்களை நிறுத்தினார். 37  வழிபாட்டுக் கூடாரத்தின் நுழைவாசலுக்காக நீல நிற நூல், ஊதா நிற கம்பளி நூல், கருஞ்சிவப்பு நூல், உயர்தரமான திரித்த நாரிழை ஆகியவற்றால் ஒரு திரையை நெய்தார்.+ 38  அந்தத் திரையைத் தொங்கவிடுவதற்காக ஐந்து தூண்களையும் ஐந்து கொக்கிகளையும் செய்தார். தூண்களின் மேல்பகுதிகளுக்கும் இணைப்புகளுக்கும்* தங்கத்தால் தகடு அடித்தார். அவற்றின் ஐந்து பாதங்களைச் செம்பினால் செய்தார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “லினன்.”
அநேகமாக, “பெசலெயேல்.”
வே.வா., “எம்பிராய்டரி.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “நூல் வளையங்களை.”
இவை செங்கோண வடிவ சட்டங்கள்.
வே.வா., “கால்கள்.”
அதாவது, “சட்டங்களின் புடைப்பான பகுதிகளைப் பொருத்துவதற்கு ஏற்ற குழிகள்கொண்ட அடிபீடங்களை.”
அதாவது, “வளையங்களுக்கும்.”