யோசுவா 11:1-23

  • வடக்கில் உள்ள நகரங்கள் கைப்பற்றப்படுகின்றன (1-15)

  • யோசுவா அடைந்த வெற்றிகளின் விவரம் (16-23)

11  ஆத்சோரின் ராஜா யாபீன் இவற்றைக் கேள்விப்பட்டான். உடனே, மாதோனின் ராஜா+ யோபாபுக்கும், சிம்ரோனின் ராஜாவுக்கும், அக்சாபின் ராஜாவுக்கும்,+  வடக்கு மலைப்பகுதியில் இருந்த ராஜாக்களுக்கும், கின்னரேத்தின் தெற்கு சமவெளிகளில்* இருந்த ராஜாக்களுக்கும், சேப்பெல்லாவில் இருந்த ராஜாக்களுக்கும், மேற்கே தோரின் மலைச் சரிவுகளில்+ இருந்த ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பினான்.  அதோடு, கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர்களுக்கும்,+ மலைப்பகுதியில் இருந்த எமோரியர்களுக்கும்,+ ஏத்தியர்களுக்கும், பெரிசியர்களுக்கும், எபூசியர்களுக்கும், மிஸ்பா தேசத்தில் எர்மோன் மலையடிவாரத்தில்+ இருந்த ஏவியர்களுக்கும்கூட+ செய்தி அனுப்பினான்.  அதனால், அவர்கள் எல்லாரும் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்தார்கள். கடற்கரை மணலைப் போல ஏராளமானவர்கள் கணக்குவழக்கில்லாத குதிரைகளோடும் போர் ரதங்களோடும் திரண்டு வந்தார்கள்.  அந்த ராஜாக்கள் எல்லாரும் ஓர் இடத்தில் சந்திப்பதற்கு முடிவுசெய்தார்கள். அதன்படியே, இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்ய மேரோமின் நீரோடைக்குப் பக்கத்தில் ஒன்றாக வந்து முகாம்போட்டார்கள்.  அப்போது யெகோவா யோசுவாவிடம், “அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்,+ நாளைக்கு இந்த நேரத்தில் அவர்கள் எல்லாரையும் உன் கையில் கொடுப்பேன். அவர்களை உன்னுடைய வாளுக்குப் பலியாக்குவேன். நீ அவர்களுடைய குதிரைகளை நொண்டியாக்கி*+ ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்” என்று சொன்னார்.  யோசுவாவும் அவரோடு இருந்த படைவீரர்கள் எல்லாரும் மேரோமின் நீரோடைக்குப் பக்கத்தில் அவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள்.  யெகோவா அவர்களை இஸ்ரவேலர்களின் கையில் கொடுத்தார்.+ எதிரிகளை அவர்கள் தோற்கடித்து, பெரிய சீதோன்+ மற்றும் மிஸ்ரபோத்-மாயீம்+ வரைக்கும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரைக்கும் விரட்டிக்கொண்டு போனார்கள். ஒருவர் விடாமல் எல்லாரையும் வெட்டி வீழ்த்தினார்கள்.+  அதன்பின், யோசுவாவிடம் யெகோவா சொல்லியிருந்தபடியே, அவர்களுடைய குதிரைகளை அவர் நொண்டியாக்கினார்,* ரதங்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+ 10  பின்பு யோசுவா ஆத்சோர் பக்கம் திரும்பி, அதைக் கைப்பற்றி, அதன் ராஜாவை வாளால் வெட்டிக் கொன்றார்.+ ஏனென்றால், ஆத்சோர்தான் முன்பு இந்த எல்லா ராஜ்யங்களுக்கும் தலைநகரமாக இருந்தது. 11  வீரர்கள் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வாளால் கொன்றார்கள்.+ பின்பு யோசுவா ஆத்சோரைத் தீ வைத்துக் கொளுத்தினார். 12  அந்த ராஜாக்களுடைய நகரங்களையெல்லாம் கைப்பற்றி, அவர்களை வாளால் வீழ்த்தினார்.+ யெகோவாவின் ஊழியராகிய மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே அவர்களைக் கொன்றார்.+ 13  ஆனாலும் ஆத்சோரைத் தவிர, குன்றின் மேல் அமைந்திருந்த எந்த நகரத்தையும் இஸ்ரவேலர்கள் சுட்டெரிக்கவில்லை. இந்த ஒரு நகரத்தை மட்டும்தான் யோசுவா சுட்டெரித்தார். 14  மற்ற நகரங்களில் இருந்த எல்லா பொருள்களையும் மிருகங்களையும் இஸ்ரவேலர்கள் சூறையாடினார்கள்.+ அங்கிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் வாளால் வெட்டிப்போட்டார்கள்.+ யாரையுமே உயிரோடு விட்டுவைக்கவில்லை.+ 15  தன்னுடைய ஊழியராகிய மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மோசே அப்படியே யோசுவாவுக்குக் கொடுத்திருந்தார்.+ யோசுவா அந்தக் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளில் ஒன்றையும் யோசுவா செய்யாமல் விடவில்லை.+ 16  யூதாவின் மலைப்பகுதியையும் நெகேபு+ முழுவதையும் கோசேன் பகுதி முழுவதையும் சேப்பெல்லாவையும்+ அரபாவையும்+ இஸ்ரவேலின் மலைப்பகுதியையும் அதன் தாழ்வான பிரதேசத்தையும் யோசுவா கைப்பற்றினார். 17  அதாவது, சேயீருக்கு ஏறிப்போகும் ஆலாக் மலைமுதல் எர்மோன்+ மலையடிவாரத்தில் அமைந்துள்ள லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்-காத்வரை+ எல்லா தேசங்களையும் கைப்பற்றினார். அங்குள்ள ராஜாக்கள் எல்லாரையும் பிடித்து வெட்டிப்போட்டார். 18  அந்த எல்லா ராஜாக்களோடும் யோசுவா ரொம்பக் காலம் போர் செய்தார். 19  கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+ 20  அங்கிருந்த ஜனங்கள் இரக்கம் பெறுவதற்கோ உயிர்வாழ்வதற்கோ தகுதியில்லாதவர்கள் என்று யெகோவா நினைத்ததால், அவர்களுடைய இதயம் இறுகிப்போவதற்கும் அவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்வதற்கும் அவர் விட்டுவிட்டார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தபடியே, அவர்கள் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது.+ 21  அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+ 22  இஸ்ரவேலர்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவர்கூட மிஞ்சவில்லை. காசா,+ காத்,+ அஸ்தோத்+ ஆகிய நகரங்களில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள்.+ 23  மோசேக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படியே,+ எல்லா தேசத்தையும் யோசுவா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பின்பு, அதை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகப் பிரித்துக் கொடுத்தார். அவரவர் கோத்திரத்துக்குச் சேர வேண்டிய பங்கின்படியே பிரித்துக் கொடுத்தார்.+ தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அரபாவில்.”
அதாவது, “குதிரைகளின் பின்தொடை தசைநார்களை வெட்டி.”
அதாவது, “குதிரைகளின் பின்தொடை தசைநார்களை வெட்டினார்.”