யோபு 3:1-26

  • யோபு தான் பிறந்ததை நினைத்துப் புலம்புகிறார் (1-26)

    • தனக்கு ஏன் இவ்வளவு வேதனை என்று கேட்கிறார் (20, 21)

3  அதன் பின்பு, யோபு பேச ஆரம்பித்தார். அவர் தன்னுடைய பிறந்த நாளைச் சபித்து,+  இப்படிச் சொன்னார்:   “நான் பிறந்த அந்த நாள் வராமலேயே இருந்திருக்க வேண்டும்!+‘ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!’ என்று சொல்லப்பட்ட அந்த இரவும் வராமல் போயிருக்க வேண்டும்!   அந்த நாள் இருண்டுபோயிருக்க வேண்டும்! பரலோகத்திலுள்ள கடவுள் அந்த நாளைக் கண்டும்காணாமல் விட்டிருக்க வேண்டும்!ஒளி அதன்மேல் வீசாமல் போயிருக்க வேண்டும்!   கும்மிருட்டு* அந்த நாளைச் சூழ்ந்திருக்க வேண்டும்! மழைமேகம் அதை மூடியிருக்க வேண்டும்! பயங்கரமான இருட்டு அதன் வெளிச்சத்தை விழுங்கியிருக்க வேண்டும்!   அந்த இரவு படுபயங்கரமான இருளின் பிடியில் சிக்கியிருக்க வேண்டும்!+அது சந்தோஷத்தையே காணாத நாளாக இருந்திருக்க வேண்டும்!எந்த மாதத்திலும் அந்த நாள் சேர்க்கப்படாமல் போயிருக்க வேண்டும்!   அந்த ராத்திரியில் யாரும் பிறக்காமல் போயிருக்க வேண்டும்!அன்று சந்தோஷக் குரலே கேட்காமல் போயிருக்க வேண்டும்!   நாளைச் சபிக்கிறவர்களும் லிவியாதானை*+ எழுப்ப முடிந்தவர்களும்அதைச் சபித்திருக்க வேண்டும்!   அந்த ராத்திரியில் நட்சத்திரங்கள் மின்னாமல் போயிருக்க வேண்டும்!பகலுக்காக அது காத்திருந்தது வீணாய்ப் போயிருக்க வேண்டும்!சூரிய உதயத்தை அது காணாமல் போயிருக்க வேண்டும்! 10  என் தாயின் கர்ப்ப வாசலை அது அடைக்காமல் போனதே.+நான் கஷ்டங்கள் அனுபவிப்பதைத் தடுக்காமல் போனதே. 11  நான் பிறக்கும்போதே ஏன் சாகாமல் போனேன்? தாயின் வயிற்றிலிருந்து வரும்போதே ஏன் அழியாமல் போனேன்?+ 12  என் தாயின் மடி ஏன் என்னைத் தாங்கியது?அவள் மார்பு ஏன் எனக்குப் பாலூட்டியது? 13  நான் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்ந்திருப்பேனே!+ஒரேயடியாகத் தூங்கி ஓய்வெடுத்திருப்பேனே!+ 14  இப்போது பாழாய்க் கிடக்கிற இடங்களைக் கட்டியிருந்த* ராஜாக்களோடும்அவர்களுடைய ஆலோசகர்களோடும் அழிந்துபோயிருப்பேனே. 15  தங்கத்தையும் வெள்ளியையும் வீடுகளில் குவித்து வைத்திருந்த இளவரசர்களோடுநானும் புதைக்கப்பட்டிருப்பேனே. 16  நான் ஏன் கர்ப்பத்திலேயே கலையவில்லை?ஒளியைப் பார்ப்பதற்கு முன்பே ஏன் ஒழிந்துபோகவில்லை? 17  சாகும்போது கெட்டவனுக்குக்கூட நிம்மதி கிடைக்கிறதே.அவதிப்படுகிறவனுக்கு அமைதி கிடைக்கிறதே.+ 18  கைதிகள் எல்லாருக்கும் கல்லறை விடுதலை தருகிறதே.அவர்களை மிரட்டி வேலை வாங்குபவர்களின் சத்தம் அங்கு கேட்காதே. 19  உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் அங்கே வித்தியாசமில்லை.+அடிமையை எஜமான் அங்கே ஆட்டிப்படைப்பதில்லை. 20  வேதனைப்படுகிறவனைக் கடவுள் ஏன் வாழ வைக்கிறார்?*விரக்தியில் இருப்பவர்களை+ ஏன் உயிரோடு விட்டுவைக்கிறார்? 21  அவர்கள் சாவுக்காக ஏங்குகிறார்கள்,+ புதையலைத் தேடுவதைவிட சாவை அதிகமாகத் தேடுகிறார்கள். ஆனால் அது வந்த பாடில்லை. 22  கல்லறையைப் பார்த்ததும் பூரித்துப்போகிறார்கள்.சந்தோஷத்தில் துள்ளுகிறார்கள். 23  திக்குத் தெரியாதவனைச் சுற்றிலும் கடவுள் ஏன் வேலி போடுகிறார்?+அவனை ஏன் வாழ வைக்கிறார்?* 24  நான் எதையும் சாப்பிடாமல் சதா பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.+கொட்டும் அருவிபோல் என் குமுறல் இருக்கிறது.+ 25  எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது.எதை நினைத்துப் பயந்தேனோ அது வந்துவிட்டது. 26  எனக்கு நிம்மதியில்லை, அமைதியில்லை, ஓய்வுமில்லை.வேதனைக்குமேல் வேதனைதான் வருகிறது.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “இருட்டும் சாவின் நிழலும்.”
இது ஒரு முதலை அல்லது நீரில் வாழும் வேறு ஏதாவது ராட்சதப் பிராணி என்று கருதப்படுகிறது.
அல்லது, “பாழான இடங்களைத் தங்களுக்குக் கட்டிக்கொண்ட.”
நே.மொ., “வேதனைப்படுகிறவனுக்குக் கடவுள் ஏன் வெளிச்சம் தருகிறார்?”
நே.மொ., “அவனுக்கு ஏன் வெளிச்சம் தருகிறார்?”