யோபு 33:1-33

  • தான் நல்லவன் என்று யோபு சொல்லிக்கொள்வதை எலிகூ கண்டிக்கிறார் (1-33)

    • மீட்பதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது (24)

    • மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வது (25)

33  பின்பு அவர், “யோபுவே, நான் பேசுவதைத் தயவுசெய்து கேளுங்கள்.நான் சொல்கிற எல்லாவற்றையும் கவனியுங்கள்.   தயவுசெய்து கவனியுங்கள், நான் பேசியே ஆக வேண்டும்.என்னால் இனியும் அமைதியாக இருக்க முடியாது.   நான் நேர்மையான உள்ளத்தோடு பேசுகிறேன்.+எனக்குத் தெரிந்ததை ஒளிவுமறைவு இல்லாமல் சொல்கிறேன்.   என்னைப் படைத்தது கடவுளுடைய சக்திதான்.+எனக்கு உயிர் கொடுத்தது சர்வவல்லமையுள்ளவரின் மூச்சுதான்.+   எனக்குப் பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.என்னோடு வாதாடுவதற்குத் தயாராக இருங்கள்.   உண்மைக் கடவுளுக்கு முன்னால் நீங்களும் நானும் ஒன்றுதான்.என்னையும் மண்ணிலிருந்துதான் அவர் படைத்தார்.+   அதனால், என்னைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம்.நான் சொல்வதைக் கேட்டு ஆடிப்போக வேண்டாம்.   நீங்கள் பேசியதையெல்லாம் கவனித்தேன்.உங்கள் வார்த்தைகளையெல்லாம் கேட்டேன்.   நீங்கள் எங்களிடம், ‘நான் நேர்மையானவன், எந்தக் குற்றமும் செய்யவில்லை.+நான் நல்லவன், எந்தத் தப்பும் பண்ணவில்லை’+ என்று சொன்னீர்கள். 10  அதோடு, ‘கடவுள்தான் என்னிடம் குற்றம் கண்டுபிடிக்கிறார்.என்னை எதிரியாகப் பார்க்கிறார்.+ 11  என் கால்களைத் தொழுமரத்தில் மாட்டுகிறார்.என் வழிகளையெல்லாம் துருவித் துருவிப் பார்க்கிறார்’+ என்றும் சொன்னீர்கள். 12  நீங்கள் பேசியதில் நியாயமே இல்லை; இப்போது நான் பேசுகிறேன், கேளுங்கள். அற்ப மனுஷனைவிட கடவுள் எவ்வளவு பெரியவர்!+ 13  அப்படிப்பட்டவரை ஏன் குறை சொல்கிறீர்கள்?+ நீங்கள் கேட்டதற்கெல்லாம் அவர் பதில் சொல்லாமல் இருந்ததாலா?+ 14  உண்மையில், கடவுள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்.ஆனால், ஜனங்கள்தான் கவனிப்பதே இல்லை. 15  அவர் கனவில் பேசுகிறார்.தரிசனத்தின் மூலம் பேசுகிறார்.+ஜனங்கள் ஆழ்ந்து தூங்கும்போது பேசுகிறார். 16  அவர்களுடைய காதுகளைத் திறக்கிறார்.+தன் அறிவுரைகளை அவர்கள் மனதில் பதிய வைக்கிறார். 17  இப்படி, மனுஷன் கெட்ட வழியைவிட்டு விலகுவதற்கும்,+கர்வம் அடையாமல் இருப்பதற்கும் உதவுகிறார்.+ 18  சவக்குழிக்கு* போகாதபடி அவனுடைய உயிரைப் பாதுகாக்கிறார்.+வாளால்* அழியாதபடி அவனைக் காப்பாற்றுகிறார். 19  ஒருவன் தன்னுடைய படுக்கையில் வேதனைப்படும்போதும்தீராத எலும்பு வலியால் துடிக்கும்போதும்தன்னுடைய தப்பை உணருகிறான்.* 20  சாப்பாட்டைக் கண்டாலே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது.பிடித்தமான சாப்பாடுகூட அவனுக்கு அருவருப்பாக இருக்கிறது.+ 21  அவனுடைய உடம்பு வற்றிப்போய்,எலும்புகள் மட்டும்தான் தெரிகிறது. 22  சீக்கிரத்தில் அவன் சவக்குழிக்குப் போகப்போகிறான்.அவனை அழிக்க நினைக்கிறவர்களின் கையில் அவனுடைய உயிர் சிக்கப்போகிறது. 23  ஆயிரம் தேவதூதர்களில் ஒருவர்நீதியான வழிகளை எடுத்துச் சொல்ல அவனிடம் வந்தால், 24  கடவுள் அவனுக்குக் கருணை காட்டி,‘சவக்குழிக்குள் போகாதபடி அவனைக் காப்பாற்று.+ அவனை மீட்பதற்கு வழி கண்டுபிடித்துவிட்டேன்.+ 25  அவனுடைய உடல் இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும்.+அவன் மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வான்’*+ என்று சொல்வார். 26  அவன் கடவுளிடம் கெஞ்சி ஜெபம் செய்வான்,+ அதை அவர் கேட்பார்.அவன் சந்தோஷம் பொங்க அவருடைய முகத்தைப் பார்ப்பான்.அவர் அவனைத் திரும்பவும் நீதியான வழிக்குக் கொண்டுவருவார். 27  அவன் மற்றவர்களைப் பார்த்து,‘நான் பாவம் செய்தேன்;+ உண்மையைத் திரித்துப் பேசினேன்.ஆனாலும், அதற்குத் தகுந்த தண்டனையைக் கடவுள் எனக்குத் தரவில்லை.* 28  நான் சவக்குழிக்குள் போகாதபடி அவர் என் உயிரை மீட்டுக்கொண்டார்.+என் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும்’ என்று சொல்வான். 29  இதையெல்லாம் மனுஷனுக்காகக் கடவுள் செய்கிறார்.ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை செய்கிறார். 30  இப்படி, அவனைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றுகிறார்.வாழ்வின் ஒளியை அவன்மேல் பிரகாசிக்க வைக்கிறார்.+ 31  அதனால் யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். நான் பேசுவதை அமைதியாகக் கேளுங்கள். 32  ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லுங்கள். தயங்காமல் பேசுங்கள், நீங்கள் நல்லவர் என்பதை எல்லாருக்கும் காட்ட நான் ஆசைப்படுகிறேன். 33  சொல்வதற்கு எதுவும் இல்லையென்றால், நான் சொல்வதைக் கேளுங்கள்.எது ஞானம் என்பதைச் சொல்லித்தருகிறேன், அமைதியாகக் கவனியுங்கள்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கல்லறைக்கு.”
வே.வா., “ஆயுதத்தால்.”
வே.வா., “அவன் கண்டிக்கப்படுகிறான்.”
வே.வா., “அவன் இளமைத் துடிப்போடு இருந்த நாட்களுக்குத் திரும்புவான்.”
அல்லது, “அதனால் எனக்கு லாபம் கிடைக்கவில்லை.”