யோபு 36:1-33

  • ஆராய்ந்தறிய முடியாத கடவுளின் மகிமையைப் பற்றி எலிகூ உயர்வாகப் பேசுகிறார் (1-33)

    • கீழ்ப்படிகிறவர்கள் நன்றாக வாழ்வார்கள்; கெட்டவர்கள் ஒதுக்கித்தள்ளப்படுவார்கள் (11-13)

    • ‘கற்றுக்கொடுப்பதில் கடவுளை மிஞ்ச யாருமே இல்லை (22)

    • யோபு கடவுளைப் புகழ்ந்து பேச வேண்டும் (24)

    • “நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் அற்புதமானவர்” (26)

    • மழையும் மின்னலும் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன (27-33)

36  அதன் பிறகு எலிகூ,   “கடவுளுடைய சார்பில் இன்னும் சில விஷயங்களை நான் பேச வேண்டியிருக்கிறது.அதனால், இன்னும் கொஞ்ச நேரத்துக்குப் பொறுத்துக்கொள்ளுங்கள்.   எனக்குத் தெரிந்ததை விவரமாகச் சொல்கிறேன்.என்னைப் படைத்தவர் எவ்வளவு நீதியுள்ளவர்+ என்று காட்டுகிறேன்.   நான் சொல்வது எதுவுமே பொய் கிடையாது.எல்லாம் தெரிந்தவரிடம்*+ கற்றுக்கொண்ட விஷயங்களைத்தான் சொல்கிறேன்.   கடவுளுக்கு நிறைய சக்தி இருக்கிறது;+ அவர் யாரையுமே ஒதுக்கித்தள்ள மாட்டார்.அவருக்குப் புரியாத விஷயமே இல்லை.   கெட்டவர்களின் உயிரை அவர் காப்பாற்ற மாட்டார்.+ஆனால், கஷ்டப்படுகிறவர்களுக்கு நியாயம் செய்வார்.+   நீதிமான்களை அவர் எப்போதும் கவனிக்கிறார்;+ என்றுமே அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கிறார்.ராஜாக்களோடு* சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறார்.+   அவர்கள் சங்கிலியால் கட்டப்படும்போது,வேதனையின் கயிறுகளால் நெருக்கப்படும்போது,   அவர்கள் செய்த தப்பைச் சுட்டிக்காட்டுகிறார்.அவர்கள் கர்வத்தோடு செய்த குற்றங்களை உணர்த்துகிறார். 10  அவர்களுக்குப் புத்திமதிகளைக் கொடுக்கிறார்.கெட்டது செய்வதை விட்டுவிடும்படி சொல்கிறார்.+ 11  அவர்கள் கீழ்ப்படிந்தால்,சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள்.+ 12  அவர்கள் கீழ்ப்படியாவிட்டால், வாளால்* சாவார்கள்.+அறிவைப் பெறாமலேயே இறந்துபோவார்கள். 13  கெட்டவர்கள்* தங்கள் நெஞ்சத்தில் பகையை வளர்த்துக்கொள்வார்கள். கடவுள் அவர்களைக் கட்டிப்போட்டாலும் உதவிக்காக அவரிடம் கெஞ்ச மாட்டார்கள். 14  அவர்கள் வாலிப வயதிலேயே செத்துப்போகிறார்கள்.+கோயிலில் விபச்சாரம் செய்கிற ஆண்களோடு+ சேர்ந்து வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.* 15  கஷ்டப்படுகிறவர்களை அவர்களுடைய கஷ்டத்திலிருந்து கடவுள் காப்பாற்றுகிறார்.அவர்கள் கொடுமைக்கு ஆளாகும்போது தன் ஆலோசனைகளைக் கேட்க வைக்கிறார். 16  அவர் உங்களை வேதனையின் பிடியிலிருந்து விடுவிப்பார்.+நெருக்கடியே இல்லாத விசாலமான இடத்தில் வாழ வைப்பார்.+விருந்து வைத்து உங்கள் மனதைச் சந்தோஷப்படுத்துவார்.+ 17  அவர் நியாயமான தீர்ப்பைக் கொடுக்கும்போது,கெட்டவர்கள் தண்டிக்கப்படுவதைப்+ பார்த்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள். 18  ஆனால், ஆத்திரத்தில் கெட்ட எண்ணத்தோடு நடந்துகொள்ளாதபடி* கவனமாக இருங்கள்.+நிறைய லஞ்சம் கிடைக்கும் என்ற ஆசையில் கெட்டதைச் செய்துவிடாதீர்கள். 19  நீங்கள் என்னதான் அழுது புலம்பினாலும் கஷ்டம் தீருமா?என்னதான் பாடுபட்டாலும் வேதனை தீருமா?+ 20  ராத்திரி நேரம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருக்காதீர்கள்.ஜனங்கள் எப்போது இல்லாமல் போவார்கள் என்று பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். 21  தப்பான வழியில் போகாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.கஷ்டத்திலிருந்து தப்பிக்க குறுக்கு வழியைத் தேடாதீர்கள்.+ 22  கடவுள் மகா சக்தி உள்ளவர்.கற்றுக்கொடுப்பதில் அவரை மிஞ்ச யாருமே இல்லை. 23  என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியுமா?*+அல்லது, அவர் செய்வது தப்பு என்று யாராவது சொல்ல முடியுமா?+ 24  நிறைய பேர் அவருடைய செயல்களைப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.+நீங்களும் அவரைப் புகழ்ந்து பேச மறந்துவிடாதீர்கள்.+ 25  மனுஷர்கள் எல்லாரும் அவற்றைப் பார்க்கிறார்கள்.அற்ப மனுஷன் அவற்றைத் தூரத்திலிருந்து பார்க்கிறான். 26  நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் அற்புதமானவர்.+அவர் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது.+ 27  அவர் தண்ணீரை ஆவியாக மேலே போக வைக்கிறார்.+அதை மழையாகவும் பனியாகவும் கீழே வர வைக்கிறார். 28  அது மேகங்களிலிருந்து பொழிகிறது.+மனுஷர்கள்மேல் பெய்கிறது. 29  மேகங்கள் திரண்டிருக்கும் அதிசயத்தை யாராவது புரிந்துகொள்ள முடியுமா?அவருடைய கூடாரத்திலிருந்து இடியோசை கேட்கும் அற்புதத்தை யாராவது விளக்க முடியுமா?+ 30  அந்த மேகங்களில் அவர் மின்னலைப் பிரகாசிக்க வைக்கிறார்.+ஆழ்கடலைத் தண்ணீரால் நிரப்புகிறார். 31  இவற்றால் ஜனங்களை வாழ வைக்கிறார்.*அவர்களுக்கு ஏராளமான உணவு தருகிறார்.+ 32  மின்னலைக் கையில் எடுத்துக்கொள்கிறார்.பின்பு, குறிபார்த்து எறிகிறார்.+ 33  அவருடைய இடிமுழக்கம் அவரைப் பற்றிச் சொல்கிறது.வருவது யாரென்று* மந்தைகூட சொல்கிறது” என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “எல்லா அறிவும் உள்ளவரிடம்.”
அல்லது, “ராஜாக்களை.”
வே.வா., “ஆயுதத்தால்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவர்கள்; விசுவாசதுரோகிகள்.”
அல்லது, “முடித்துக்கொள்கிறார்கள்.”
வே.வா., “வன்மத்தோடு கைகொட்டிச் சிரிக்காதபடி.”
அல்லது, “அவரை யாராவது குறைசொல்ல முடியுமா?; தட்டிக்கேட்க முடியுமா?”
அல்லது, “ஆதரிக்கிறார்.”
அல்லது, “என்ன வருகிறதென்று.”