யோபு 9:1-35

  • யோபுவின் பதில் (1-35)

    • சாதாரண மனுஷன் கடவுளோடு வழக்காட முடியாது (2-4)

    • ‘ஆராய்ந்தறிய முடியாத அதிசயங்களைக் கடவுள் செய்கிறார்’ (10)

    • யாராலும் கடவுளோடு வழக்காட முடியாது (32)

9  அதற்கு யோபு,   “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், சாதாரண மனுஷன் எப்படிக் கடவுளோடு வழக்காடி ஜெயிக்க முடியும்?+   அவரோடு வாதாட ஒரு மனுஷன் விரும்பினால்,+அவர் கேட்கிற ஆயிரம் கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதில் சொல்ல முடியாதே.   அவரைப் போல் ஞானமும் மகா வல்லமையும் உள்ளவர் யாராவது உண்டா?+ அவருடன் மோதி யாரால் தப்பிக்க முடியும்?+   ஒருவருக்கும் தெரியாதபடி அவர் மலைகளைப் பெயர்க்கிறார்.கோபத்தில் அவற்றைக் கவிழ்க்கிறார்.   பூமியின் அஸ்திவாரத்தை ஆட்டம்காண வைக்கிறார்.அதன் தூண்களை அதிர வைக்கிறார்.+   சூரியனிடம், ‘பிரகாசிக்காதே!’ என்று கட்டளை கொடுக்கிறார்.நட்சத்திரங்களின் ஒளியை மறைக்கிறார்.+   அவராகவே வானத்தை விரிக்கிறார்.+பொங்கிவரும் கடல் அலைகளை மிதித்து அமிழ்த்துகிறார்.+   ஆஷ்,* கீஸில்,* கிமா* நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியிருக்கிறார்.+தெற்கிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார். 10  ஆராய்ந்தறிய முடியாத அதிசயங்களை அவர் செய்கிறார்.+எண்ண முடியாத அற்புதங்களை நடத்துகிறார்.+ 11  அவர் என்னைக் கடந்துபோகிறார், என்னால் பார்க்க முடியவில்லை.என்னைத் தாண்டிப்போகிறார், என்னால் உணர முடியவில்லை. 12  அவர் நம்மிடமிருந்து எதையாவது பிடுங்கிக்கொண்டால், நம்மால் எதிர்த்துப் போராட முடியுமா? ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று தட்டிக்கேட்க முடியுமா?+ 13  கடவுள் தன்னுடைய கோபத்தை அடக்க மாட்டார்.+ராகாபின்* உதவியாளர்கள்கூட அவர் முன்னால் அடங்கிப்போவார்கள்.+ 14  அப்படியென்றால், நான் எவ்வளவு கவனமாக அவருக்குப் பதில் சொல்ல வேண்டும்!அவரோடு வாதாடும்போது எவ்வளவு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்! 15  என் பங்கில் நியாயம் இருந்தாலும், நான் அவரிடம் எதிர்த்துப் பேச மாட்டேன்.+ இரக்கம் காட்டும்படி என் நீதிபதியிடம்* கெஞ்சிக் கேட்பேன். 16  நான் கூப்பிட்டால் அவர் பதில் சொல்வாரா என்ன? அவர் என் குரலைக் கேட்பார் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. 17  சுழல்காற்றினால் அவர் என்னைச் சுக்குநூறாக்குகிறார்.காரணமே இல்லாமல் காயத்துக்குமேல் காயம் உண்டாக்குகிறார்.+ 18  மூச்சு இழுக்கக்கூட அவர் என்னை விடுவதில்லை.நிறைய கஷ்டங்களைக் கொடுத்து என்னை நோகடிக்கிறார். 19  பலம் என்று வரும்போது, அவர்தான் மகா பலசாலி.+ நியாயம் என்று வரும்போது, ‘யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது’* என்று அவர் சொல்கிறார். 20  நான் நல்லவனாக இருந்தாலும், என் வாயே என்னைக் கெட்டவன் என்று சொல்லும்.நான் உத்தமனாக* இருந்தாலும், அவர் என்னைக் குற்றவாளி என்றுதான் சொல்வார். 21  நான் உத்தமனாக இருந்தாலும், என்மேல் எனக்கே நம்பிக்கை இல்லை.இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம். 22  எல்லாம் ஒன்றுதான். அதனால்தான்,‘நல்லவன், கெட்டவன் என்று பார்க்காமல் எல்லாரையும் அவர் அழிக்கிறார்’ என்று சொல்கிறேன். 23  திடீரென்று வெள்ளம் வந்து நல்லவனை வாரிக்கொண்டு போனால் அவர் சிரிப்பார்.அவன் தவிப்பதைப் பார்த்து கேலி செய்வார். 24  பூமியைக் கெட்டவர்களின் கையில் அவர் விட்டுவிட்டார்.+நீதிபதிகளின் கண்களைக் கட்டிவிட்டார். அவரைத் தவிர வேறு யார் அப்படிச் செய்வார்கள்? 25  ஒரு ஓட்டக்காரனைவிட வேகமாக என் வாழ்நாள் ஓடுகிறது.+வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பதற்கு முன்பே அது ஓடிவிடுகிறது. 26  நாணல் படகுகளைப் போல் அது விரைவாகப் போகிறது.இரையின் மேல் பாயும் கழுகுபோல் வேகமாகக் கடந்துபோகிறது. 27  ‘நான் சோகத்தை விட்டுவிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்,இனி புலம்பக் கூடாது’ என்று முடிவுசெய்தாலும், என்ன பிரயோஜனம்? 28  என் வேதனைகளை நினைத்து நினைத்துப் பயந்துகொண்டுதான் இருப்பேன்.+கடவுள் எங்கே என்னை நல்லவன் என்று நினைக்கப்போகிறார்? 29  என்னை எப்படியும் குற்றவாளி என்றுதான் சொல்வார். அப்படியிருக்கும்போது, நான் ஏன் வீணாகப் போராட வேண்டும்?+ 30  உருகும் பனியில் நான் குளித்தாலும்,கைகளைச் சாம்பல் தேய்த்துக் கழுவினாலும், என்ன பிரயோஜனம்?+ 31  அவர்தான் என்னைச் சேற்றுக் குழிக்குள் தள்ளிவிடுவாரே.அப்போது, நான் போட்டிருக்கிற துணிக்குக்கூட என்னைப் பிடிக்காமல் போய்விடுமே. 32  அவர் என்னைப் போல ஒரு மனுஷனா? என்னால் அவரை எதிர்த்துப் பேச முடியுமா?என்னால் அவரோடு வழக்காட முடியுமா?+ 33  எங்கள் இரண்டு பேருடைய வழக்கையும் விசாரிக்க* யாரும் இல்லை.எங்களுக்குத் தீர்ப்பு சொல்ல நீதிபதியும் இல்லை. 34  அவர் என்னைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்னைப் பயமுறுத்தாமல் இருக்க வேண்டும்.+ 35  அப்போதுதான், நான் பயமில்லாமல் அவரிடம் பேசுவேன்.பயந்து பேசுவது என் சுபாவமே இல்லை” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

இது ரிஷப நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கும் கார்த்திகை நட்சத்திரங்களைக் குறிக்கலாம்.
இது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
இது அர்சா மேஜர் என்ற பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கலாம்.
ராகாப் என்பது ராட்சதக் கடல் பிராணியைக் குறிக்கலாம்.
அல்லது, “என்மீது வழக்கு தொடுத்திருப்பவரிடம்.”
வே.வா., “வழக்காட வரச்சொல்லி எனக்கு உத்தரவு போட முடியாது.”
வே.வா., “நிரபராதியாக.”
வே.வா., “எங்கள் இரண்டு பேருக்கும் மத்தியஸ்தராக இருக்க.”