ரோமருக்குக் கடிதம் 6:1-23

  • கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் புதிய வாழ்வு (1-11)

  • பாவம் உங்கள் உடலை ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள் (12-14)

  • முன்பு பாவத்துக்கு அடிமைகள், இப்போது கடவுளுக்கு அடிமைகள் (15-23)

    • பாவத்தின் சம்பளம் மரணம்; கடவுளின் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு (23)

6  அப்படியானால், நாம் என்ன சொல்வோம்? அளவற்ற கருணை அதிகமதிகமாகக் கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து பாவம் செய்யலாமா?  கூடவே கூடாது! பாவத்தைப் பொறுத்தவரை நாம் இறந்துவிட்டதால்,+ இனி எப்படிப் பாவ வாழ்க்கை நடத்திக்கொண்டே இருக்க முடியும்?+  கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் எடுத்த+ நாம் எல்லாரும் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்தோம்+ என்பது உங்களுக்குத் தெரியாதா?  பரலோகத் தகப்பனின் வல்லமையால்* கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்டார். அதேபோல், நாமும் புதிய வாழ்வு வாழ்வதற்காக+ அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் எடுத்து அவரோடுகூட அடக்கம் செய்யப்பட்டோம்.+  நாம் அவரைப் போல இறந்து அவரோடு ஒன்றுபட்டால்,+ அவரைப் போல உயிருடன் எழுந்து நிச்சயம் அவரோடு ஒன்றுபடுவோம்.+  நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+  ஏனென்றால், இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்.*  நாம் கிறிஸ்துவோடு இறந்திருந்தோம் என்றால், அவரோடு வாழ்வதும் நிச்சயம்.  ஏனென்றால், இப்போது உயிரோடு எழுப்பப்பட்டிருக்கிற கிறிஸ்து+ இனி இறப்பதில்லை+ என்று நமக்குத் தெரியும். மரணம் இனிமேல் அவருடைய எஜமானாக இருக்காது. 10  அவர் இறந்தார், பாவத்தைப் போக்குவதற்காக எல்லா காலத்துக்கும் ஒரேமுறை இறந்தார்.+ ஆனால், இப்போது உயிர்வாழ்கிறார், கடவுளுக்காக உயிர்வாழ்கிறார். 11  அதேபோல் நீங்களும் பாவத்தைப் பொறுத்தவரை இறந்தவர்களாகவும், கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுளுக்காக உயிர்வாழ்கிறவர்களாகவும் உங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.+ 12  அதனால், உங்களுடைய உடலின் ஆசைகளுக்குப் பாவம் உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்.+ 13  உங்களுடைய உடலை* அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்துக்கு அர்ப்பணிக்காமல், நீதியின் ஆயுதங்களாகக் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள். செத்த நிலையிலிருந்து உயிர் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து உங்களையே அவருக்கு அர்ப்பணியுங்கள்.+ 14  பாவம் உங்கள் எஜமானாக இருக்க அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல்+ அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறீர்கள்.+ 15  அப்படியானால் என்ன சொல்வது? நாம் திருச்சட்டத்தின்கீழ் இல்லாமல் அளவற்ற கருணையின்கீழ் இருக்கிறோம் என்பதற்காகப் பாவம் செய்யலாமா?+ கூடவே கூடாது! 16  யாருக்கு உங்களை அர்ப்பணித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அவருக்குத்தான் நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அதனால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தால்+ மரணமடைவீர்கள்,+ கீழ்ப்படிதலுக்கு அடிமைகளாக இருந்தால்+ நீதிமான்களாவீர்கள். 17  முன்பு நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தாலும், நீங்கள் எந்தப் போதனையிடம்* ஒப்படைக்கப்பட்டீர்களோ அந்தப் போதனைக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிந்தீர்கள்; அதற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். 18  நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதால்,+ நீதிக்கு அடிமைகளானீர்கள்.+ 19  உங்களுடைய பலவீனத்தின்* காரணமாக எளிய வார்த்தைகளில் நான் உங்களிடம் பேசுகிறேன். அக்கிரமச் செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை அசுத்தத்துக்கும் அக்கிரமத்துக்கும் அடிமைகளாக முன்பு அர்ப்பணித்தீர்கள். ஆனால், இப்போது பரிசுத்த செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக அர்ப்பணியுங்கள்.+ 20  ஏனென்றால், நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தபோது நீதிக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை. 21  அப்போது செய்த செயல்களால் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைத்தன? இப்போது அவற்றை நினைத்து வெட்கப்படுகிறீர்கள். அவை மரணத்துக்கு வழிநடத்துகின்றன.+ 22  ஆனாலும், நீங்கள் இப்போது பாவத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு கடவுளுக்கு அடிமைகளாகி இருப்பதால், பரிசுத்த வாழ்க்கையைப் பலனாகப் பெற்றிருக்கிறீர்கள்;+ அது முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிறது.+ 23  பாவத்தின் சம்பளம் மரணம்;+ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம்+ கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மகிமையால்.”
வே.வா., “மன்னிப்புப் பெற்றிருக்கிறான்.”
நே.மொ., “உடலுறுப்புகளை.”
நே.மொ., “போதனையின் மாதிரியிடம்.”
நே.மொ., “உடல் பலவீனத்தின்.”