தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம் 2:1-20

  • தெசலோனிக்கேயில் பவுலின் ஊழியம் (1-12)

  • தெசலோனிக்கேயர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொள்கிறார்கள் (13-16)

  • தெசலோனிக்கேயர்களைப் பார்க்க பவுல் ஏங்குகிறார் (17-20)

2  சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது வீண்போகவில்லை+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.  நீங்கள் அறிந்திருக்கிறபடி, முன்பு பிலிப்பியில் நாங்கள் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலும்,+ மிகுந்த எதிர்ப்பின்* மத்தியில் நம் கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக+ அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்.  நாங்கள் கொடுக்கும் அறிவுரைகள் தவறான கருத்துகளையோ அசுத்தமான எண்ணங்களையோ வஞ்சகத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல.  நல்ல செய்தியை ஒப்படைப்பதற்குக் கடவுள் எங்களைத் தகுதியுள்ளவர்களாகக் கருதியதால், நாங்கள் மனிதர்களுக்குப் பிரியமாகப் பேசாமல் எங்கள் இதயங்களை ஆராய்கிற கடவுளுக்குப்+ பிரியமாகப் பேசுகிறோம்.  சொல்லப்போனால், நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாகப் புகழ்ந்ததில்லை, உங்களிடம் இருப்பதை அடைவதற்காகப் பேராசைப்பட்டு வெளிவேஷம் போட்டதுமில்லை+ என்பது உங்களுக்குத் தெரியும்; கடவுளே இதற்குச் சாட்சி!  உங்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி, நாங்கள் புகழ்தேடி அலைந்ததில்லை; கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்ற முறையில் நாங்கள் உங்களுக்குப் பெரிய பாரமாக இருந்திருக்க முடியும்.+  ஆனால், பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளைக் கனிவோடு கவனித்துக்கொள்வதுபோல்* உங்களை நேசித்து உங்களிடம் மென்மையாக நடந்துகொண்டோம்.  இப்படி, உங்கள்மேல் கனிவான பாசம் வைத்திருப்பதால், கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்;+ அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.+  சகோதரர்களே, நாங்கள் பாடுபட்டு உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களில் யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி,+ நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். 10  விசுவாசிகளாகிய* உங்களிடம் நாங்கள் எந்தளவு உண்மையுள்ளவர்களாகவும்* நீதியுள்ளவர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, கடவுளும் சாட்சி. 11  ஒரு அப்பா+ தன் பிள்ளைகளை நடத்துவதுபோல் நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்கே தெரியும்; உங்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் அறிவுரை கொடுத்து, ஆறுதலளித்து, புத்திசொல்லி வந்தோம்.+ 12  தன்னுடைய அரசாங்கத்திலும் மகிமையிலும்+ பங்குகொள்வதற்காக உங்களை அழைத்த+ கடவுளுக்கு முன்னால் நீங்கள் எப்போதும் தகுதியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும்+ என்பதற்காக அப்படிச் செய்துவந்தோம். 13  நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்கள் மூலம் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதர்களுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக நாங்கள் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்.+ அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான். விசுவாசிகளாகிய உங்களுக்குள் அது செயல்பட்டும் வருகிறது. 14  சகோதரர்களே, யூதேயாவில் இருக்கிற கடவுளுடைய சபைகளுக்கு, அதாவது கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற சபைகளுக்கு, நடப்பது போலவே உங்களுக்கும் நடக்கிறது. யூதர்களால் அந்தச் சபையில் இருக்கிறவர்கள் துன்பப்படுவது போலவே நீங்களும் உங்கள் சொந்த மக்களால் துன்பப்படுகிறீர்கள்.+ 15  அந்த யூதர்கள்தான் நம் எஜமானாகிய இயேசுவையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தார்கள்,+ எங்களையும் துன்புறுத்தினார்கள்.+ அவர்கள் இப்போதும் கடவுளுக்குப் பிரியமாக நடப்பதில்லை. மக்களுடைய நலனுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 16  எப்படியென்றால், மற்ற தேசத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களிடம் நாங்கள் பிரசங்கிக்கும்போது எங்களைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.+ இப்படி, பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்; அவர்கள்மேல் கடவுள் தன்னுடைய கடும் கோபத்தைக் காட்டப்போகிற நேரம் இப்போது வந்துவிட்டது.+ 17  சகோதரர்களே, கொஞ்சக் காலம் நாங்கள் உங்களைவிட்டுப் பிரிந்துபோனாலும், உள்ளத்தால் அல்ல, உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். ஆனால், எப்படியாவது உங்கள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஏங்கினோம். 18  அதனால், உங்களைப் பார்க்க வர வேண்டுமென்று ஆசைப்பட்டோம்; அதிலும், பவுலாகிய நான் ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை உங்களைப் பார்க்க வருவதற்கு முயற்சி செய்தேன்; ஆனால், சாத்தான் எங்களுடைய வழியில் குறுக்கிட்டான். 19  நம் எஜமானாகிய இயேசுவின் பிரசன்னத்தின்போது அவர் முன்னால் எங்கள் நம்பிக்கையாகவும் சந்தோஷமாகவும் பெருமைக்குரிய கிரீடமாகவும் இருக்கப்போகிறவர்கள் யார்? நீங்கள்தானே?+ 20  நிச்சயமாகவே, நீங்கள்தான் எங்கள் மகிமை, நீங்கள்தான் எங்கள் சந்தோஷம்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “போராட்டத்தின்.”
வே.வா., “நெஞ்சார நேசிப்பதுபோல்.”
வே.வா., “பற்றுமாறாதவர்களாகவும்.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாகிய.”