1 நாளாகமம் 28:1-21

  • ஆலயம் கட்டுவதைப் பற்றி மக்களிடம் தாவீது பேசுகிறார் (1-8)

  • சாலொமோனுக்கு அறிவுரை தருகிறார்; கட்டிட வரைபடத்தைக் கொடுக்கிறார் (9-21)

28  இஸ்ரவேல் தலைவர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமுக்கு வரவழைத்தார். கோத்திரத் தலைவர்கள், ராஜாவுக்குச் சேவை செய்கிற பிரிவுகளின் தலைவர்கள்,+ ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும்+ சொந்தமான சொத்துகளையும் மந்தைகளையும் மேற்பார்வை செய்கிறவர்கள்,+ அரண்மனை அதிகாரிகள் ஆகியோரையும், பலசாலிகளாக, திறமைசாலிகளாக+ இருந்த எல்லாரையும் வரவழைத்தார்.  பின்பு, தாவீது ராஜா எழுந்து நின்று அவர்களிடம்: “என் சகோதரர்களே, என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை வைப்பதற்கும், நம் கடவுளுக்குக் கால்மணையாக இருப்பதற்கும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன்.+ அதற்காக முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.+  ஆனால் உண்மைக் கடவுள், ‘என்னுடைய பேர்புகழுக்காக நீ ஆலயம் கட்ட வேண்டாம்.+ ஏனென்றால், நீ நிறைய போர் செய்திருக்கிறாய், நிறைய பேரைக் கொன்றுபோட்டிருக்கிறாய்’*+ என்று என்னிடம் சொன்னார்.  இருந்தாலும், இஸ்ரவேல் தேசத்தை என்றைக்கும் ஆட்சி செய்ய நம் கடவுளாகிய யெகோவா என் அப்பா வம்சத்தில் என்னைத்தான் தேர்ந்தெடுத்தார்.+ ஏனென்றால், அவர் யூதாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார்,+ யூதா வம்சத்தில் என் அப்பாவின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.+ அவருடைய மகன்களில் என்னைத் தேர்ந்தெடுத்து, இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக்கினார்.+  என் மகன்களில் சாலொமோனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார்.+ யெகோவா எனக்கு நிறைய மகன்களைத் தந்திருந்தாலும்+ அவருடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய அவனைத்தான் தேர்ந்தெடுத்தார்.+  கடவுள் என்னிடம், ‘என் ஆலயத்தையும் பிரகாரங்களையும் உன்னுடைய மகன் சாலொமோன்தான் கட்டுவான். அவன் எனக்கு மகனாக இருப்பான். நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+  என் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் இன்று போலவே என்றும் அவன் உறுதியாகக் கடைப்பிடித்தால்+ அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.  அதனால், யெகோவாவின் சபையாரான இஸ்ரவேலர்கள் எல்லாருடைய கண்களுக்கும் முன்னால், நம்முடைய கடவுளின் காதுகள் கேட்க, நான் உங்களிடம் சொல்கிறேன்: யெகோவா தந்த எல்லா சட்டதிட்டங்களையும் புரிந்துகொண்டு, அவற்றை அப்படியே கடைப்பிடியுங்கள். அப்போது, இந்த அருமையான தேசம் உங்களுக்குச் சொந்தமாகும்.+ உங்களுக்குப் பின்பு உங்கள் பிள்ளைகளுக்கு அதைச் சொத்தாகக் கொடுப்பீர்கள்.  சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+ 10  ஆலயத்தைக் கட்ட யெகோவா உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால் தைரியமாக இரு, வேலையைத் தொடங்கு”* என்று சொன்னார். 11  பின்பு ஆலயத்தின் நுழைவு மண்டபம்,+ அதன் அறைகள், சாமான் அறைகள், மாடி அறைகள், உட்புற அறைகள், பிராயச்சித்த மூடி வைக்கப்பட்டிருக்கிற அறை*+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான வரைபடத்தை+ தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்தார். 12  யெகோவாவின் ஆலயப் பிரகாரங்கள்,+ அதைச் சுற்றியுள்ள சாப்பாட்டு அறைகள், உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பொக்கிஷ அறைகள், பரிசுத்த* பொருள்களை வைக்கும் பொக்கிஷ அறைகள்+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான எல்லா விவரங்களும் அடங்கிய அந்த வரைபடத்தை, அதாவது கடவுளுடைய சக்தியால் தனக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்த வரைபடத்தை, சாலொமோனிடம் கொடுத்தார். 13  அதோடு, குருமார்களின் பிரிவுகள்,+ லேவியர்களின் பிரிவுகள், யெகோவாவின் ஆலயத்தில் அவர்கள் செய்ய வேண்டிய சேவைகள், யெகோவாவின் ஆலயத்தில் பயன்படுத்தப்படும் பொருள்கள் எல்லாவற்றையும் பற்றி தாவீது விளக்கினார். 14  ஆலயத்தின் வெவ்வேறு வேலைகளுக்காக எல்லா விதமான தங்கப் பொருள்களையும் எல்லா விதமான வெள்ளிப் பொருள்களையும் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்று அவர் சொன்னார். 15  விளக்குத்தண்டுகளையும்+ அவற்றின் அகல் விளக்குகளையும் தங்கத்தில் செய்வதற்கும் வெள்ளியில் செய்வதற்கும் எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்று சொன்னார். விளக்குத்தண்டுகளும் விளக்குகளும் எத்தனை தேவைப்பட்டதோ அத்தனையும் செய்ய வேண்டியிருந்தது. 16  படையல் ரொட்டிகளை வைக்கும் மேஜைகள்+ ஒவ்வொன்றையும் செய்வதற்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்பதைச் சொன்னார். அதோடு, வெள்ளி மேஜைகளைச் செய்ய எவ்வளவு வெள்ளி தேவைப்படும் என்பதையும் சொன்னார். 17  முள்கரண்டிகள், கிண்ணங்கள், கூஜாக்கள் ஆகியவற்றைச் சுத்தமான தங்கத்தில் செய்ய எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதைச் சொன்னார். அதோடு, தங்கக் கிண்ணங்களில், ஒவ்வொரு சிறிய கிண்ணத்தையும்,+ வெள்ளிக் கிண்ணங்களில், ஒவ்வொரு சிறிய கிண்ணத்தையும் செய்வதற்கு எவ்வளவு தங்கமும் வெள்ளியும் தேவைப்படும் என்பதைச் சொன்னார். 18  தூபபீடத்தைச் சொக்கத்தங்கத்தில் செய்வதற்கு எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதையும் சொன்னார்.+ அதோடு, சிறகுகளை விரித்து யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிமீது நிழலிடுகிற கேருபீன்களை,+ அதாவது கடவுளுடைய ரதத்துக்கு+ அடையாளமாக இருந்த கேருபீன்களை, தங்கத்தில் செய்வதற்கு எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதையும் அவர் சொன்னார். 19  “யெகோவாவின் சக்தி* என்மீது இருந்தது, வரைபடத்தில்+ உள்ள நுணுக்கமான விவரங்கள் எல்லாவற்றையும் எழுதிவைக்க+ அவர் எனக்கு விவேகத்தைத் தந்தார்” என்று தாவீது சொன்னார். 20  பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இரு; வேலையைத் தொடங்கு.* எதற்கும் பயப்படாதே, திகிலடையாதே. என் கடவுளாகிய யெகோவா உன் கூடவே இருக்கிறார்.+ அவர் உன்னைவிட்டு விலகவும் மாட்டார், உன்னைக் கைவிடவும் மாட்டார்.+ யெகோவாவின் ஆலயத்தைக் கட்டி முடிக்கும்வரை அவர் உனக்குத் துணையாக இருப்பார். 21  உண்மைக் கடவுளின் ஆலயத்தில் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் குருமார்கள் பிரிவினரும்,+ லேவியர்கள்+ பிரிவினரும் கவனித்துக்கொள்வார்கள். எல்லா விதமான வேலைகளையும் செய்வதற்குத் திறமையான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.+ அதுமட்டுமல்ல, நீ சொல்கிறபடியெல்லாம் செய்வதற்குத் தலைவர்களும்+ எல்லா மக்களும்கூட தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “இரத்தம் சிந்தியிருக்கிறாய்.”
வே.வா., “மனப்பூர்வமாக.”
வே.வா., “செய்.”
வே.வா., “பிராயச்சித்த அறை.”
வே.வா., “அர்ப்பணிக்கப்பட்ட.”
நே.மொ., “கை.”
வே.வா., “செய்.”