1 ராஜாக்கள் 7:1-51

  • சாலொமோன் கட்டிய அரண்மனை வளாகம் (1-12)

  • சாலொமோனுக்கு ஈராம் உதவுகிறார் (13-47)

    • இரண்டு செம்புத் தூண்கள் (15-22)

    • ‘செம்புக் கடல்’ தொட்டி வார்க்கப்படுகிறது (23-26)

    • 10 தள்ளுவண்டிகளும் செம்புத் தொட்டிகளும் (27-39)

  • தங்கச் சாமான்கள் செய்து முடிக்கப்படுகின்றன (48-51)

7  பின்பு, சாலொமோன் தன்னுடைய அரண்மனையைக் கட்டினார். எல்லாவற்றையும் கட்டி முடிக்க 13 வருஷங்கள் எடுத்தன.+  ‘லீபனோன் வன மாளிகையை’ அவர் கட்டினார்.+ அதன் நீளம் 100 முழம்,* அகலம் 50 முழம், உயரம் 30 முழம். தேவதாரு மரத்தூண்களை நான்கு வரிசையாக நிறுத்தி, அவற்றின்மீது தேவதாரு உத்திரங்களை+ வைத்து இந்த மாளிகையைக் கட்டினார்.  தூண்களின் மேல் ஆதாரக் கம்பங்களை வைத்து அமைக்கப்பட்டிருந்த அந்த மாளிகை தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. அந்த மாளிகையில், வரிசைக்கு 15 தூண்கள்* என மொத்தம் 45 தூண்கள் இருந்தன.  சட்டங்கள் வைக்கப்பட்ட ஜன்னல்கள் மூன்று வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. மூன்று தளத்திலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருந்தன.  எல்லா நுழைவாசல்களுக்கும் நிலைக்கால்களுக்கும் சதுர வடிவ* சட்டங்கள் இருந்தன. மூன்று தளங்களிலும் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த ஜன்னல்களைப் போலவே அவையும் சதுர வடிவில் இருந்தன.  அவர் கட்டிய ‘தூண் மண்டபத்தின்’ நீளம் 50 முழம், அகலம் 30 முழம். அதன் முன்னால் இருந்த நுழைவு மண்டபத்தில் நிறைய தூண்கள் இருந்தன, ஒரு கூரையும் இருந்தது.  அவர் ‘சிம்மாசன மண்டபத்தையும்’ கட்டினார்.+ அது ‘தீர்ப்பு மண்டபம்’ என்றும் அழைக்கப்பட்டது.+ அங்கிருந்துதான் அவர் தீர்ப்பு வழங்குவார். அந்த மண்டபம் தரைமுதல் கூரைவரை தேவதாரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.  அந்த மண்டபத்திலிருந்து சற்றுத் தள்ளி, இன்னொரு முற்றத்தில்,+ தான் குடியிருப்பதற்காக ஓர் அரண்மனையைக் கட்டினார். அந்த மண்டபத்தைப் போலவே அரண்மனையிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலொமோன் தான் கல்யாணம் செய்திருந்த பார்வோனின் மகளுக்காக ஒரு மாளிகையைக் கட்டினார்.+ அது அந்த மண்டபத்தைப் போலவே இருந்தது.  இந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரம்முதல் உட்கூரைவரை எல்லாமே அளந்து செதுக்கப்பட்ட விலைமதிப்புள்ள கற்களால் கட்டப்பட்டன.+ பெரிய பிரகாரம்வரை+ எல்லாமே இந்தக் கற்களால்தான் கட்டப்பட்டன. இந்தக் கற்களின் எல்லா பக்கங்களும் கல் அறுக்கும் ரம்பத்தால் சீராக வெட்டப்பட்டிருந்தன. 10  அஸ்திவாரம் போடுவதற்கு விலைமதிப்புள்ள பெரிய கற்கள் பயன்படுத்தப்பட்டன. சில கற்கள் 10 முழமாகவும், மற்ற கற்கள் 8 முழமாகவும் இருந்தன. 11  அந்த அஸ்திவாரத்துக்கு மேலே, அளந்து செதுக்கப்பட்ட விலைமதிப்புள்ள கற்களும் தேவதாரு மரக்கட்டைகளும் வைக்கப்பட்டன. 12  செதுக்கிய கற்களை மூன்று வரிசையாகவும் அதன்மீது தேவதாரு மரக்கட்டைகளை ஒரு வரிசையாகவும் வைத்து பெரிய பிரகாரத்தின் சுற்றுச் சுவரைக் கட்டினார்கள்; இது, யெகோவாவின் ஆலயத்தையும் அதன் நுழைவு மண்டபத்தையும்+ சுற்றியிருக்கிற உட்பிரகாரத்தின்+ சுவரைப் போலவே கட்டப்பட்டிருந்தது. 13  தீருவிலிருந்து ஈராம்+ என்பவரை சாலொமோன் ராஜா வரவழைத்தார். 14  அவர் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு விதவையின் மகன்; அவருடைய அப்பா தீருவைச் சேர்ந்த செம்பு ஆசாரி.+ எல்லாவித செம்பு* வேலைகளையும் செய்வதில் அறிவும் அனுபவமும் திறமையும் ஈராமுக்கு இருந்தது.+ அதனால், சாலொமோன் ராஜாவிடம் வந்து அவர் செய்யச் சொன்ன எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார். 15  அவர் இரண்டு செம்புத் தூண்களை வார்த்தார்.+ ஒவ்வொரு தூணும் 18 முழ உயரமாக இருந்தது. ஒவ்வொரு தூணையும் அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 12 முழமாக இருந்தது.+ 16  தூண்களின் உச்சியில் வைப்பதற்காக இரண்டு செம்புக் கும்பங்களை வார்த்தார். ஒவ்வொரு கும்பத்தின் உயரமும் ஐந்து முழம். 17  ஒவ்வொரு தூணின் உச்சியிலும் இருந்த கும்பத்தில் முறுக்குச் சங்கிலிகளால் ஆன வலைப்பின்னல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.+ ஒவ்வொரு கும்பத்திலும் ஏழு வலைப்பின்னல்கள் இருந்தன. 18  தூண்களின் மீதிருந்த அந்தக் கும்பங்களை அழகுபடுத்துவதற்காக, அவற்றின் மேலிருந்த ஒரு வலைப்பின்னலைச் சுற்றிலும் மாதுளம்பழ வடிவங்களை இரண்டு வரிசையாகச் செய்து வைத்தார். இன்னொரு தூணிலும் இதேபோல் செய்துவைத்தார். 19  நுழைவு மண்டபத்தின் முன்னால் இருந்த தூண்களின் மேலே அமைக்கப்பட்ட அந்தக் கும்பங்களில் நான்கு முழ உயரத்துக்கு லில்லிப் பூ வடிவத்தைச் செய்தார். 20  கும்பத்தின் இந்தப் பகுதி அந்த இரண்டு தூண்களின் மேல் இருந்தது, வலைப்பின்னல்களை ஒட்டியிருந்த வட்டமான அடிப்பகுதியைத் தொட்டபடி இருந்தது. ஒவ்வொரு கும்பத்தைச் சுற்றிலும் வரிசையாக 200 மாதுளம்பழ வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன.+ 21  ஆலய* நுழைவு மண்டபத்தின் முன்னால் அந்தத் தூண்களை நிறுத்தினார்.+ ஒரு தூணை வலது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு யாகீன்* என்றும், மற்றொரு தூணை இடது பக்கத்தில்* நிறுத்தி அதற்கு போவாஸ்* என்றும் பெயர் வைத்தார்.+ 22  அந்தத் தூண்களின் மேற்பகுதியில் லில்லிப் பூ வடிவில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி, தூண்களின் வேலையெல்லாம் செய்து முடிக்கப்பட்டது. 23  பின்பு, ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை உலோகத்தால் அவர் வார்த்தார்.+ அது வட்ட வடிவில் இருந்தது. அந்தத் தொட்டியின் ஒரு விளிம்புமுதல் மறு விளிம்புவரை அதன் விட்டம் 10 முழம், அதன் உயரம் 5 முழம், அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 30 முழமாக இருந்தது.+ 24  அதன் வாய்ப்பகுதியின் கீழே சுற்றிலும் குமிழ் வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தன.+ ஒரு முழத்துக்குப் பத்துக் குமிழ்கள் எனத் தொட்டியைச் சுற்றிலும் இருந்தன. அவை இரண்டு வரிசையாக செம்புத் தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன. 25  அந்தத் தொட்டி 12 காளை உருவங்களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.+ 3 காளைகள் வடக்கேயும் 3 காளைகள் மேற்கேயும் 3 காளைகள் தெற்கேயும் 3 காளைகள் கிழக்கேயும் பார்த்தவாறு நின்றன. அந்தக் காளைகள்மேல் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காளைகளின் பின்புறங்கள் தொட்டியின் மையப்பகுதியை நோக்கி இருந்தன. 26  அந்தத் தொட்டியின் தடிமன் ஒரு கையளவு.* அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போல் இருந்தது. பார்ப்பதற்கு மலர்ந்த லில்லிப் பூவைப் போல் இருந்தது. அந்தத் தொட்டியில் சுமார் 44,000 லிட்டர்* தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது. 27  பின்பு, செம்பினால் 10 தள்ளுவண்டிகளை* அவர் செய்தார்.+ அவை ஒவ்வொன்றின் நீளம் 4 முழம், அகலம் 4 முழம், உயரம் 3 முழம். 28  தள்ளுவண்டிகளுக்கு நான்கு பக்கங்கள் இருந்தன, ஒவ்வொரு பக்கத்திலும் குறுக்குச் சட்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. 29  குறுக்குச் சட்டங்களுக்கு இடையில் இருந்த பலகைகளில் சிங்கம்,+ காளை, கேருபீன்+ ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்தக் குறுக்குச் சட்டங்களிலும் அதே உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சிங்கம், காளை உருவங்களுக்கு மேலும் கீழும் தோரண வடிவில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 30  ஒவ்வொரு தள்ளுவண்டிக்கும் நான்கு செம்புச் சக்கரங்களும் செம்பு அச்சுகளும் இருந்தன. சக்கரங்களையும் அச்சுகளையும் தாங்குவதற்கு நான்கு மூலைகளிலும் முட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த முட்டுகள் தொட்டியின் கீழ்ப்பகுதியையும் தாங்கி நின்றன. முட்டுகளின் ஒவ்வொரு பக்கத்திலும் தோரண வடிவில் வேலைப்பாடுகள் வார்க்கப்பட்டிருந்தன. 31  தள்ளுவண்டியின் வாய்ப்பகுதியில் வட்ட வடிவ வளையம் இருந்தது. அந்த வளையத்தைச் சுற்றிலும் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அந்த வளையத்துக்குள் தொட்டி பொருத்தப்பட்டிருந்தது. அந்தத் தொட்டியின் அடிப்பாகத்துக்கும் வளையத்துக்கும் இடையே இருந்த உயரம் ஒரு முழம். தொட்டியையும் வளையத்தையும் சேர்த்தால் மொத்தம் ஒன்றரை முழம். தள்ளுவண்டியின் நான்கு பக்கங்களும் வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தன. 32  அந்த நான்கு சக்கரங்களும் நான்கு பக்கங்களின் கீழே இருந்தன. அந்தச் சக்கரங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முட்டுகள் வண்டியோடு இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சக்கரத்தின் உயரமும் ஒன்றரை முழம். 33  நான்கு சக்கரங்களும் ரதத்தின் சக்கரங்களைப் போல் இருந்தன. சக்கரங்களின் முட்டுகள், வட்டங்கள், கம்பிகள், குடங்கள்* எல்லாமே உலோகத்தால் வார்க்கப்பட்டிருந்தன. 34  ஒவ்வொரு தள்ளுவண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு முட்டுகள் இருந்தன. அந்த முட்டுகள் வண்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன. 35  தள்ளுவண்டியின் மேற்பகுதியில், வட்ட வடிவ கழுத்துப் பகுதி இருந்தது; அதன் உயரம் அரை முழம்; அந்தக் கழுத்துப் பகுதியில் இருந்த சட்டங்களும் சுற்றுப்பக்கங்களும் ஒரே பாகமாக வார்க்கப்பட்டிருந்தன. 36  கழுத்துப் பகுதியில் இருந்த சட்டங்கள்மீதும் சுற்றுப்பக்கங்கள்மீதும் கேருபீன்கள், சிங்கங்கள், பேரீச்ச மரங்கள் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு இடம் இருந்ததோ அதைப் பொறுத்து இந்த உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் தோரண வடிவில் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.+ 37  இப்படி, 10 தள்ளுவண்டிகளைச் செய்தார்.+ அளவிலும் வடிவத்திலும் அவை எல்லாமே ஒரேமாதிரி வார்க்கப்பட்டிருந்தன.+ 38  அவர் பத்துச் செம்புத் தொட்டிகளைச் செய்தார்.+ ஒவ்வொன்றும் 880 லிட்டர்* தண்ணீர் பிடிக்கும். ஒவ்வொரு தொட்டியின் விட்டமும் 4 முழம். 10 தள்ளுவண்டிகளிலும் வைப்பதற்காக 10 தொட்டிகளைச் செய்தார். 39  ஆலயத்தின் வலது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் இடது பக்கத்தில் ஐந்து தள்ளுவண்டிகளையும் நிறுத்தினார். ஆலயத்தின் வலது பக்கத்தில் தென்கிழக்கு திசையில் ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை வைத்தார்.+ 40  இவை தவிர, அண்டாக்களையும் சாம்பல் அள்ளும் கரண்டிகளையும்+ கிண்ணங்களையும்+ ஈராம்+ செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்தார்.+ 41  இரண்டு தூண்கள்,+ அவற்றின் உச்சியில் இருந்த கிண்ண வடிவ கும்பங்கள், இரண்டு கும்பங்களையும் அலங்கரித்த இரண்டு வலைப்பின்னல்கள்,+ 42  அந்த இரண்டு வலைப்பின்னல்களிலும் தொங்கவிட 400 மாதுளம்பழ வடிவங்கள் ஆகியவற்றைச் செய்தார்;+ ஒவ்வொரு வலைப்பின்னலிலும் இரண்டு வரிசை மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. இரண்டு தூண்களின் உச்சியிலிருந்த இரண்டு கும்பங்களைச் சுற்றிலும் இந்த வலைப்பின்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. 43  பத்துத் தள்ளுவண்டிகள்,+ அவற்றில் வைக்க பத்துத் தொட்டிகள்,+ 44  ‘செம்புக் கடல்’ தொட்டி,+ அதன் கீழிருந்த 12 காளை உருவங்கள், 45  சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள், மற்ற பாத்திரங்கள் ஆகியவற்றையும் செய்தார்; இவை எல்லாவற்றையும் பளபளப்பான செம்பினால் செய்தார். சாலொமோன் ராஜா சொன்னபடியே, யெகோவாவின் ஆலயத்துக்காக இவை எல்லாவற்றையும் ஈராம் செய்தார். 46  யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும் சார்தானுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார். 47  இந்தச் சாமான்கள் மிக ஏராளமாக இருந்ததால் சாலொமோன் இவற்றை எடை போடவில்லை. இவற்றுக்காகப் பயன்படுத்திய செம்பையும் எடை போடவில்லை.+ 48  யெகோவாவின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்: தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க தங்க மேஜை+ ஆகியவற்றைச் செய்தார்; 49  மகா பரிசுத்த அறைக்கு முன்னால் வலது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும்,+ இடது பக்கத்தில் வைப்பதற்காக ஐந்து குத்துவிளக்குகளையும் சுத்தமான தங்கத்தில் செய்தார்; அதற்கான மலர்கள்,+ அகல் விளக்குகள், இடுக்கிகள் ஆகியவற்றைத் தங்கத்தில் செய்தார்;+ 50  அதோடு, அண்டாக்கள், திரி வெட்டும் கருவிகள்,+ கிண்ணங்கள், கோப்பைகள்,+ தணல் அள்ளும் கரண்டிகள்+ ஆகியவற்றையும் சுத்தமான தங்கத்தில் செய்தார். கூடுதலாக, உட்புற அறையான மகா பரிசுத்த அறையின்+ கதவுகளுக்காகவும் ஆலயத்தின் கதவுகளுக்காகவும்+ சுழல் அச்சுகளைப் பொருத்துவதற்கான அடிப்பகுதிகளையும் தங்கத்தில் செய்தார். 51  இப்படி, யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் ராஜா செய்து முடித்தார். பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த பொருள்களை+ ஆலயத்துக்குக் கொண்டுவந்தார். வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+

அடிக்குறிப்புகள்

ஒரு முழம் என்பது 44.5 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “அறைகள்; உத்திரங்கள்.” மூலமொழி 15 என்று மட்டுமே குறிப்பிடுகிறது.
வே.வா., “நான்கு பக்கங்கள் கொண்ட; செவ்வக வடிவ.”
வே.வா., “வெண்கல.” இந்த வசனத்திலும் இந்த அதிகாரத்தில் செம்பு என்ற வார்த்தை வருகிற மற்ற இடங்களிலும்.
வே.வா., “தென் திசையில்.”
அநேகமாக, “பலத்தோடு” என்று அர்த்தம்.
வே.வா., “வட திசையில்.”
அர்த்தம், “அவர் [அதாவது, யெகோவா] உறுதியாய் நிலைநாட்டுவாராக.”
இங்கே பரிசுத்த அறையைக் குறிக்கிறது.
மூலமொழியில், “2,000 பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
சுமார் 7.4 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தண்ணீர் வண்டிகளை.”
இவையெல்லாம் சக்கரத்திலுள்ள வெவ்வேறு பாகங்களைக் குறிக்கின்றன.
மூலமொழியில், “40 பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.