2 சாமுவேல் 8:1-18

  • தாவீதுக்குக் கிடைத்த வெற்றிகள் (1-14)

  • தாவீதின் நிர்வாகம் (15-18)

8  சில காலம் கழித்து, தாவீது பெலிஸ்தியர்களோடு+ போர் செய்து அவர்களைத் தோற்கடித்தார்.+ அவர்களிடமிருந்து மேத்தேக்-அம்மா என்ற நகரத்தைக் கைப்பற்றினார்.  அவர் மோவாபியர்களைத்+ தோற்கடித்து, அவர்களை வரிசையாகத் தரையில் படுக்க வைத்தார். அந்த வரிசையை அளவுநூலால் அளந்தார்; அந்த வரிசையில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்களைக் கொன்றுபோட்டார்; ஒரு பங்கு ஆட்களை உயிரோடு விட்டுவிட்டார்.+ மோவாபியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, அவருக்குக் கப்பம் கட்டினார்கள்.+  சோபாவின்+ ராஜாவான ரேகோபின் மகன் ஆதாதேசர் என்பவன் யூப்ரடிஸ்* ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த பகுதியை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர+ போய்க்கொண்டிருந்தான். அப்போது தாவீது அவனைத் தோற்கடித்தார்.  அவனிடமிருந்து 1,700 குதிரைவீரர்களையும் 20,000 காலாட்படை வீரர்களையும் பிடித்தார். 100 ரதக் குதிரைகளைத் தவிர, மற்ற எல்லா ரதக் குதிரைகளையும்+ நொண்டியாக்கினார்.*  சோபாவின் ராஜாவான ஆதாதேசருக்கு உதவி செய்ய தமஸ்குவைச் சேர்ந்த சீரியர்கள்+ வந்தபோது, அவர்களில் 22,000 பேரை தாவீது வெட்டி வீழ்த்தினார்.+  அதன் பின்பு, சீரியாவின் தலைநகரான தமஸ்குவில் காவல்படைகளை நிறுத்திவைத்தார். சீரியர்கள் தாவீதுக்குச் சேவை செய்து, கப்பம் கட்டினார்கள். அவர் போன இடமெல்லாம் யெகோவா அவருக்கு வெற்றி தேடித்தந்தார்.+  ஆதாதேசருக்குச் சேவை செய்த ஆட்களிடமிருந்து வட்டவடிவ தங்கக் கேடயங்களை எடுத்துக்கொண்டு தாவீது எருசலேமுக்கு வந்தார்;+  ஆதாதேசரின் ஆட்சிக்குட்பட்ட பேத்தாக், பேரொத்தாய் நகரங்களிலிருந்து தாவீது ராஜா ஏராளமான செம்பைக் கொண்டுவந்தார்.  ஆதாதேசரின் மொத்த படையையும் தாவீது தோற்கடித்தார்+ என்பதை காமாத்தின்+ ராஜாவான தோயீ கேள்விப்பட்டார். 10  அப்போது, தாவீது ராஜாவிடம் நலம் விசாரிக்கவும் ஆதாதேசரைத் தோற்கடித்ததற்கு வாழ்த்துச் சொல்லவும் தோயீ தன்னுடைய மகன் யொராமை அனுப்பினார். (ஏனென்றால், ஆதாதேசர் அடிக்கடி தோயீயை எதிர்த்துப் போர் செய்துவந்தான்) தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருள்களை தாவீதுக்கு யொராம் கொடுத்தார். 11  தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.* அதோடு, தான் தோற்கடித்த எல்லா தேசங்களிலிருந்தும் கொண்டுவந்த தங்கம், வெள்ளி பொருள்களைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.+ 12  சீரியர்கள், மோவாபியர்கள்,+ அம்மோனியர்கள், பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்,+ சோபாவின் ராஜாவான ரேகோபின் மகன் ஆதாதேசர்+ ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார். 13  தாவீது 18,000 ஏதோமியர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வீழ்த்தி பேரும் புகழும் சம்பாதித்தார்.+ 14  ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+ 15  இஸ்ரவேல் முழுவதையும் தாவீது ஆட்சி செய்துவந்தார்.+ தன்னுடைய மக்கள் எல்லாருக்கும் நீதி நியாயம் வழங்கிவந்தார்.+ 16  செருயாவின் மகன் யோவாப்+ படைத் தளபதியாக இருந்தார். அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார். 17  அகிதூப்பின் மகன் சாதோக்கும்+ அபியத்தாரின் மகன் அகிமெலேக்கும் குருமார்களாகச் சேவை செய்தார்கள். செராயா செயலாளராக இருந்தார். 18  யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “ஐப்பிராத்து.”
அதாவது, “குதிரைகளின் பின்தொடை தசைநார்களை வெட்டினார்.”
நே.மொ., “புனிதப்படுத்தினார்.”
நே.மொ., “தாவீதின் மகன்கள் குருமார்களாக.”