2 ராஜாக்கள் 1:1-18

  • அகசியாவின் சாவைப் பற்றிய எலியாவின் தீர்க்கதரிசனம் (1-18)

1  ஆகாப் இறந்த பின்பு, இஸ்ரவேலை எதிர்த்து மோவாப்+ கலகம் செய்தது.  அந்தச் சமயத்தில், சமாரியாவிலுள்ள அரண்மனைக் கூரையின் சாளரம்* வழியாக அகசியா விழுந்து காயமடைந்தார். அதனால் தூதுவர்களைக் கூப்பிட்டு, “எனக்குக் குணமாகுமா ஆகாதா என்று எக்ரோனின்+ தெய்வமான பாகால்-செபூபிடம் போய் விசாரித்துவிட்டு வாருங்கள்”+ என்று சொல்லி அனுப்பினார்.  அப்போது யெகோவாவின் தூதர் திஸ்பியனான எலியாவிடம்,*+ “நீ புறப்பட்டுப் போய் சமாரியா ராஜாவின் தூதுவர்களைப் பார்த்து, ‘இஸ்ரவேலில் கடவுள் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால்-செபூபிடம் விசாரிக்கப் போகிறீர்கள்?+  அதனால், “நீ படுத்த படுக்கையாகவே கிடப்பாய். நிச்சயம் செத்துப்போவாய்”’ என்று யெகோவா சொல்கிறார் என்பதாகச் சொல்” என்றார். அதன்படியே, எலியா அங்கிருந்து போனார்.  தூதுவர்கள் திரும்பி வந்ததும் அகசியா அவர்களிடம், “ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள் ராஜாவிடம் இப்படிச் சொன்னார்கள்: “வழியில் ஒருவர் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எங்களிடம், ‘உங்களை அனுப்பிய ராஜாவிடம் திரும்பிப் போங்கள். அவரிடம், “இஸ்ரவேலில் கடவுள் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால்-செபூபிடம் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்? அதனால், நீ படுத்த படுக்கையாகவே கிடப்பாய். நிச்சயம் செத்துப்போவாய்”+ என்று யெகோவா சொல்கிறார் என்பதாகச் சொல்லுங்கள்’ என்றார்.”  அப்போது அவர், “உங்களிடம் இந்தச் செய்தியைச் சொன்னவர் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?” என்று கேட்டார்.  அதற்கு அவர்கள், “அவர் ரோமத்தாலான உடையைப்+ போட்டிருந்தார். இடுப்பில் தோல் வாரைக் கட்டியிருந்தார்”+ என்று சொன்னார்கள். உடனே அகசியா, “அவர் திஸ்பியனான எலியாதான்” என்று சொன்னார்.  பின்பு, ராஜா 50 வீரர்களின் தலைவரையும் அவருடைய 50 வீரர்களையும் எலியாவிடம் அனுப்பினார். அவர் அங்கே போனபோது எலியா ஒரு மலைமேல் உட்கார்ந்திருந்தார். அந்தத் தலைவர் அவரிடம், “உண்மைக் கடவுளின் ஊழியரே,+ ராஜா உங்களைக் கீழே வரச் சொல்கிறார்” என்றார். 10  அதற்கு எலியா, “நான் கடவுளின் ஊழியன் என்றால், வானத்திலிருந்து நெருப்பு வந்து+ உன்னையும் உன்னுடன் வந்த 50 பேரையும் அழித்துப்போடட்டும்” என்று சொன்னார். உடனே, வானத்திலிருந்து நெருப்பு வந்து அந்தத் தலைவரையும் 50 வீரர்களையும் அழித்துப்போட்டது. 11  மறுபடியும் ராஜா வேறொரு 50 வீரர்களின் தலைவரையும் அவருடைய 50 வீரர்களையும் எலியாவிடம் அனுப்பினார். எலியாவிடம் அந்தத் தலைவர் போய், “உண்மைக் கடவுளின் ஊழியரே, ராஜா உங்களை உடனே கீழே வரச் சொல்கிறார்” என்றார். 12  அதற்கு எலியா, “நான் உண்மைக் கடவுளின் ஊழியன் என்றால், வானத்திலிருந்து நெருப்பு வந்து உன்னையும் உன்னுடன் வந்த 50 பேரையும் அழித்துப்போடட்டும்” என்று சொன்னார். உடனே, கடவுள் அனுப்பிய நெருப்பு வானத்திலிருந்து வந்து அந்தத் தலைவரையும் 50 வீரர்களையும் அழித்துப்போட்டது. 13  மூன்றாவது தடவையாக இன்னொரு 50 வீரர்களின் தலைவரையும் அவருடைய 50 வீரர்களையும் எலியாவிடம் ராஜா அனுப்பினார். அந்தத் தலைவர் எலியாவிடம் போய் அவர் முன்னால் மண்டிபோட்டு, கருணை காட்டச் சொல்லி மன்றாடினார். “உண்மைக் கடவுளின் ஊழியரே, தயவுசெய்து எனக்கும் உங்களுடைய ஊழியர்களான இந்த 50 பேருக்கும் உயிர்ப்பிச்சை கொடுங்கள். 14  இதற்கு முன்னால் வானத்திலிருந்து நெருப்பு வந்து 50 வீரர்களுக்குத் தலைவர்கள் இரண்டு பேரையும் அவர்களுடன் வந்த ஐம்பது ஐம்பது வீரர்களையும் அழித்துப்போட்டது. அதேபோல் என்னையும் அழித்துவிடாதீர்கள்” என்று கெஞ்சினார். 15  அப்போது யெகோவாவின் தூதர் எலியாவிடம், “இவரோடு போ. எதற்கும் பயப்படாதே” என்று சொன்னார். அதனால், எலியா அவருடன் போய் ராஜாவைச் சந்தித்தார்; 16  “எக்ரோனின்+ தெய்வமான பாகால்-செபூபிடம் விசாரிக்க ஆட்களை அனுப்பினாயே. ஏன், இஸ்ரவேலில் கடவுள் இல்லையா?+ நீ ஏன் அவரிடம் விசாரிக்கவில்லை? அதனால், நீ படுத்த படுக்கையாகவே கிடப்பாய். நிச்சயம் செத்துப்போவாய் என்று யெகோவா சொல்கிறார்” என்று ராஜாவிடம் சொன்னார். 17  எலியா மூலம் யெகோவா சொன்னபடியே அகசியா இறந்துபோனார். அவருக்கு மகன் இல்லாததால், அடுத்து யோராம்*+ ராஜாவானார். யூதாவின் ராஜாவான யோசபாத்தின் மகனாகிய யோராம் ஆட்சி செய்த இரண்டாம் வருஷத்தில் இது நடந்தது.+ 18  அகசியாவின்+ வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள், அவர் செய்த காரியங்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, “கூரையிலிருந்த ஒரு திறப்பின் மேல் வைக்கப்பட்ட மரத்தாலான மூடி.”
அர்த்தம், “யெகோவா என் கடவுள்.”
அதாவது, “அகசியாவின் சகோதரன்.”